தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா போல ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
அவர்கள் ரஜினியை தெய்வமாக நினைத்து இதை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.
இன்று காலா வெளியான நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும் அதகளமும் இல்லாமல் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டு காலா படத்தை பார்த்துள்ளனர் தூத்துக்குடி மக்கள்.
அதுற்றிய விவரம் வருமாறு…
கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ரஜினிகாந்த் அங்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது துப்பாக்கி சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகளே என கூறியிருந்தார்.
ஆனால் போராடியவர்கள் எப்படி சமூக விரோதிகள் ஆவார்கள் என பலத்த எதிர்ப்பு குரல்கள் ரஜினிக்கு எதிராக தொடங்கியது-
மேலும் `காலா’ திரைப்படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தகவல் வாட்ஸ்அப்களிலும் வைரலானது.
இதனால் தூத்துக்குடியில் `காலா’ திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘காலா’ திரைப்படம் இன்று காலை 9.47 மணிக்குத் திரையிடப்பட்டது.
திரைப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பு, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் ரசிகர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து `காலா’ படம் திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் கால திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கண்டு மகிழ்ந்தனர்.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸானாலே வெடி வெடிச்சு இனிப்பு வழங்கி திருவிழா போல சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடுவோம்.
கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதால் தூத்துக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், ஆரவாரம் கூடாது. தலைவரும் இதை விரும்ப மாட்டார்.
வீரமரணம் அடைந்த 13 பேரின் ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினோம். 3 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், இதேபோல அஞ்சலி நிகழ்வு நடக்கும்..” என்றார்.
A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movie