தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் உருவாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைக்கின்றனர்.
இரவு பகலாக பாடுபட்டு சேர்த்த பணத்தை கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு படத்தை உருவாக்குகிறார் தயாரிப்பாளர்.
படம் வெளியாகும் சமயத்தில் சென்சார் பிரச்சினை முதல் தடை வழக்கு வரை பல பிரச்சினைகளையும் அவர் சந்திக்கிறார்.
இதில் வரிவிலக்கு பெற யு சான்றிதழ் வேண்டுமென்றால் சிலரை அவர் கவனிக்க வேண்டிய சூழ்நிலையும் வருகிறது.
இதுபோன்ற பல கட்டப் பிரச்சினைகளை தாண்டி வந்தால், தியேட்டர்கள் கிடைப்பதில் பல சிரமங்கள் சந்திக்க நேரிடுகிறது.
அப்பாடா ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆகிவிட்டது என்று நினைத்தால் அன்றைய தினமே வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிக்கிறது.
அண்மையில் வெளியான அஜித்தின் விவேகம் படத்தை கடுமையாக ப்ளுசட்டை மாறன் விமர்சித்து இருந்தார்.
எனவே அவருக்கு திரையுலகின் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதுபற்றிய ஓர் அலசலை இங்கே பார்ப்போம்…
ஒரு படம் வெளியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைக்கிறார்கள் என்பதை போலதான் உழைக்கும் மக்கள் தங்கள் பணத்தை ஒரு படத்திற்காக செலவழிகின்றனர்.
அதுவும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் என்றால் தங்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர்.
மேலும் தியேட்டருக்குள் சென்றால், வண்டி பார்க்கிங் முதல் பப்ஸ், பாப்கார்ன் செலவு என ரூ.1500ஐ தாண்டுகிறது.
இவை அனைத்தையும் மீறி சந்தோஷமாக படத்திற்கு வந்தால், அப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.
எனவேதான் அவர்கள் படம் பார்க்கும் முன்பு விமர்சனம் செய்பவர்களின் தளங்களை பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் விமர்சனம் செய்தாலும் ஒருசிலரின் விமர்சனங்கள் மட்டுமே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
காரணம் அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்? என்று பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
எனவே விமர்சகர்களின் கருத்தைக் கேட்ட பின்னரே படத்திற்கு செல்கின்றனர்.
தான் உழைத்த பணத்தை உருப்படாத படத்திற்கு செலவழிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.
நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்க்கும் திரையுலகினர் முதலில் தங்கள் துறை சார்ந்த தவறுகளையும் சரி செய்துக் கொள்ள வேண்டும்.
கடுமையாக விமர்சனம் செய்யும் ஒருவருக்கு லட்சணக்கணக்கில் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் எதற்காக அவரிடம் விளம்பரங்களை கொடுக்க வேண்டும்.?
அதன்மூலம் அவர்களின் படங்களை விளம்பரம் செய்யத்தானே நினைக்கிறார்கள்.
அது மற்றொரு தயாரிப்பாளரின் உழைப்பை இந்த தயாரிப்பாளர் கெடுக்கின்றார் என்றுதானே அர்த்தம்.
தன் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வரும்போது ஏற்றுக் கொள்ளும் திரையுலகினர் பாதகமான விமர்சனங்கள் வரும்போதும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பாகுபலி2 படத்தில் பிரபாஸ் ஒரு தேரை இழுப்பது போன்ற காட்சியிருக்கும்.
அது நம்பமுடியாத ஒன்றுதான். ஆனால் அதை நம்பும்படியாக பிரம்மாண்டமாக கொடுத்திருப்பார் இயக்குனர் ராஜமௌலி.
அதுபோல் அவரின் நான் ஈ படத்தில் ஒரு ஈயை வைத்து சாகசங்கள் காட்டியிருப்பார்.
அதுவும் நம்ப முடியாத ஒன்று என்றாலும் ஜனங்கள் பார்த்து ரசித்தனர்.
சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை. அதில் நிஜங்களுக்கும் கனவுகளுக்கும் நிறைய இடமுண்டு.
எனவே ஒரு கற்பனையை கூட மக்கள் ஏற்றுக் கொள்ளும்வகையில் கொடுத்தால் அதை நிச்சயம் ரசிப்பார்கள்.
விவேகம் படத்தில் 200 பேர் இருக்கும்போது அஜித் பன்ச் வசனம் பேசிவிட்டு பிறகுதான் தப்பி செல்வார். அதுவரை சுடாதவர்கள் பின்னர்தான் சுடுவார்கள்.
ஆனாலும் அஜித் மற்றவர்கள் சுட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.
இதுபோன்ற கற்பனையைத்தான் மக்கள் ரசிக்க மறுக்கிறார்கள். அது யாராக இருந்தாலும்.
சின்ன பட்ஜெட் படங்களை விமர்சகர்கள் கழுவி ஊத்தினால் கண்டுக்கொள்ளாத திரையுலகம், பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றி பேசினால் மட்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவது நோக்கம் என்ன?
அவர்களும் எல்லா படங்களையும் சரிசமமாக எண்ண வேண்டும்.
இது ஒருபுறம் இருக்கட்டும்…
படத்தை விமர்சனம் செய்பவர்கள் படத்தின் பாடல்கள் சரியில்லை என்றால் அதை சொல்ல வேண்டும். மற்ற காட்சிகளை பாராட்டியிருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக குப்பை என்று கூறிவிடக்கூடாது. அதில் உள்ள மைனஸ் எது? ப்ளஸ் எது? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவரின் பார்வையில் தவறாக தென்படும் ஒரு விஷயம் மற்றவர்களின் பார்வையில் சரியாபடலாம்.
அதுபோல் பணம் கொடுத்து பாராட்ட சொன்னால் அந்த படத்தை பற்றி ஒரேடியாக புகழ்வதும், இல்லையென்றால் இகழ்வதும் இருந்தால் விமர்சகரின் மதிப்பும் ஒரே அடியாக குறைந்துவிடும்.
படத்தின் தவறுகளை சுட்டிக் காட்டினால் சினிமா துறையினர் அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்வார்கள்.
அதுபோல், ஒரு படத்தை விமர்சனம் செய்பவர்கள் அந்த படத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும்.
கபாலி படத்தை பற்றி ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்யும் போது, படம் ரிலீஸ்க்கு பிறகு ரஜினி அமெரிக்காவில் போய் படுத்துக் கொண்டார் என தெரிவித்தார்.
இதற்கு கபாலிக்கும் சம்பந்தமில்லை. மாறன் வீட்டில் அவர் வந்து தங்கவில்லையே.
அவருக்கு தொந்தரவாக இருக்கவில்லையே. இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை அவர் தவிர்த்திருக்கலாம்.
இவையனைத்தும் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் செயல்பட்டால் மட்டுமே நல்ல சினிமா கிடைக்கும். மக்களும் அதை பாராட்டுவார்கள்.
நட்புடன்… ராஜேஷ்
Movie reviewers and Cine Celebrities condemn issues