தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் பட கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சர்கார் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களும் உறுதியளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது…
இந்த கதை விவகாரம் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை பாக்யராஜ் அவர்கள் முழுதாகப் படிக்கவேயில்லை. அவர்கள் படித்தது சாரம்சம் (synopsis) மட்டுமே.
முழு ஸ்க்ரிப்டை பாக்யராஜ் அவர்கள் படித்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.
எனது முழு ஸ்க்ரிப்டை நான் இன்னும் சங்கத்தில் ஒப்படைக்கவும் இல்லை. அதை படித்த பின் தான் அதுவும் இதுவும் ஒரே கதை என்று சொல்ல முடியும். அல்லது எனது படத்தையாவது பார்த்திருக்க வேண்டும்.
நான் அவர்களுக்கு படத்தைக் காட்டத் தயார் என்று சொல்லியும் அவர்கள் பார்க்கவில்லை. படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா? அறிக்கை விடலாமா? எனக்கு பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டார்கள்.
இன்னைக்கு நடக்கவிருக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை வைத்து நான் ஒரு படமாக எடுத்திருக்கிறேன். 11 வருடங்களுக்கு முன்னால் இதே நிகழ்வுகளை வைத்து எப்படி எழுதியிருக்க முடியும்?
இரண்டு கதைகளுக்கும் ஒரே ஒற்றுமை நாயகனின் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே. இந்த ஒரு விஷயம் மட்டும் எப்படி முழு கதையாகும்.
நாயகனின் ஓட்டைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்றவுடன் அடுத்த என்னவாக இருக்கும்? அவர் பெரிய பாடகராகிவிட்டார், குத்துச்சண்டை வீரர் ஆகிவிட்டார் என்றா போகும்? எப்படியும் அடுத்து நாயகன் அரசியலுக்கு வருகிறார் என்பதுதானே கதையாக இருக்கும்.
மேலும் உறுப்பினர்களில் 6 பேர் ரெண்டும் வெவ்வேறு கதை என்று சொல்லியிருக்கிறார்கள். 5 பேர் ஒரே கதை என்றிருக்கிறார்கள். இரண்டு பேர் கருத்து சொல்லவில்லை. பின் எப்படி இது பெரும்பான்மையினரின் கருத்தாக முடியும்?.
எனக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துவிட்டனர். பாக்யராஜ் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு கதைக்கும் ஒரே பொறி தான் என்று சொல்லியிருக்கிறார்.
‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும், அதற்கு பின் வெளியான ‘சின்ன வீடு’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
அது மட்டும் ஒரே மாதிரியான சிந்தனை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லோரும் விவாதிக்கும் கள்ள ஓட்டு என்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதினால் அது திருட்டு என்கிறார்கள். இது என்ன நியாயம்?
இருதரப்பும் சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவு பணம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
ஏனென்றால் என் தரப்பில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க என் உழைப்பு, என் குழுவின் உழைப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் இதில் வேலை செய்திருக்கிறார்.
எனக்கு வெறுத்துப் போய்விட்டது. சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் என் நண்பர்கள் என்னை ஊக்குவிக்கின்றனர்.போராட தைரியம் கொடுக்கின்றனர்.
விஜய் அவர்களிடம் இந்த பிரச்சினை குறித்து நான் பேசவில்லை. என் பிரச்சினைகள் குறித்து பொதுவாக நான் யாரிடம் பேசுவதும் இல்லை.
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.
AR Murugadoss questions director Bhagyaraj on Sarkar story controversy