தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தேனிசைத் தென்றல் தேவா இசையில் உருவான திரைப்படம் ‘வா வரலாம் வா’. இந்த படத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாலாஜி முருகதாஸ் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நம்மை கவர்ந்த மஹானா இதில் நாயகியாக நடித்துள்ளார்.
வா வரலாம் வா பட விமர்சனம் இதோ…
சிறுவயதில் செய்த தவறுக்காக சிறைக்கு சென்ற ஒருவனின் கதை. தான் ஒரு முன்னாள் கைதி என்பதால் தன்னை ஒரு கெட்டவனாகவே நினைத்து வாழும் நல்ல மனம் கொண்ட மனிதனின் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்
கதைக்களம்…
படத்தின் ஆரம்பக் காட்சியில் பாலாஜி முருகதாஸ் & ரெடின் கிங்ஸில் இருவரும் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகின்றனர். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் இருவரும் வேலை தேடி அலைகின்றனர்.
ஆனால் சிறைக்கு சென்று வந்த காரணத்தினால் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை.
இந்த சூழ்நிலையில் மைம் கோபி கொடுத்த வேலையின் படி ஒரு பெரிய பேருந்தை கடத்துகின்றனர். அந்த பேருந்தில் மஹானா, காயத்ரி ஆகியோருடன் 40 ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்றால் மஹானும் காயத்ரியும் தங்களை காதலிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர் பாலாஜி & கிங்ஸ்லி.
அதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் காதலித்தார்களா?
இதனிடையில் கொள்ளைக் கும்பல் தலைவன் மைம் கோபியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு அலைகிறது தமிழக காவல்துறை. கொள்ளையன் பிடிபட்டானா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
பாலாஜி முருகதாஸ்.. வழக்கமான தமிழ் ஹீரோக்களை போல பனியன் போட்டுக் கொண்டு சட்டை பட்டன் போடாமல் படம் முழுவதும் சுற்றித் திரிகிறார்.. அக்ஷனில் அதகளம்.. ஆனால் எமோஷனல் மற்றும் ரொமான்ஸில் கொஞ்சம் மெனக்கடல் தேவை.
அழகின் நாயகியாக மஹானா.. படம் முழுவதும் ஹோமிலியாக வந்தவர் ‘சுல்தானா.. தில்லானா என்ற பாடலுக்கு கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். முன்னழகும் பின்னழகும் நம்மை ஏதோ செய்கிறது.. இந்த மழைக்கால குளிரில் மஹானாவின் கவர்ச்சி மயங்க வைக்கிறது.
மஹானாவின் தங்கையாக காயத்ரி.. இவர் ரெடின் கிங்ஸ்லிக்கு ஜோடி. இருவரின் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒட்டவில்லை.
காமெடி நடிகராக வர நினைக்கும் ரெடின் கிங்ஸ்லி காமெடி டயலாக்குகளை பேசலாம். ஆனால் கத்தி கத்தி பேசி எரிச்சலை ஏற்படுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் திரண்டு வரும்போது ஐஜி ஆபிசை காலி பண்ணிட்டீங்களா ?என்று கேட்பது சிரிக்க வைக்கிறது.
சிங்கம்புலி தீபா இருவரும் ஓவர் ஆக்டிங்.. இடைவேளை காட்சியில் சாப்பாட்டில் விஷம் வைத்து இருவரும் பேசும் வசனங்கள் தேவையற்றது.
இவர்களுடன் வில்லனாக மைம் கோபி.. போலீசாக சரவண சுப்பையா.. ரவுடியாக வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் மற்றும் 40 குழந்தைகள் நடித்துள்ளனர்.
யோகி பாபுவை போலவே ஒருவரை நடிக்க வைத்துள்ளனர். ஒரே ஒரு கனவு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் நடிகை பவ்யா. இவர் சமீபத்து வெளியான ஜோ என்ற படத்தில் நடித்திருந்தார்.)
டெக்னீசியன்ஸ்…
தேவா இசையில்… ‘வா வரலாம் வா.. என்ற பாடலும் சுல்தானா தில்லானா என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.
நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் ‘வா வரலாம் வா…’ என்ற பாடல் நம்மை முனுமுனுக்க வைக்கிறது.
பசியோடு கிடக்கும் குழந்தைகளை தூங்க வைக்க ‘சிங்கம் கதை…’ என்ற பாடல் வருகிறது.. சிறுவர்களுக்காக கதை சொல்லும் பாடல்கள் வந்து வெகு காலமாகிவிட்டது. இந்தப் பாடலுக்கு பாலாஜி மஹானா காயத்ரி ஆடிய கதை சொல்லி ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம்.
சிறைக்கு சென்று வந்ததால் குற்ற உணர்ச்சியுடன் வாழும் இருவரின் மனநிலையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்கள் ரவிச்சந்தர் மற்றும் எஸ் பி ஆர்.
ஆனால் பல காட்சிகளில் செயற்கை தனமான காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
முக்கியமாக போலீஸ் சரவணன் சுப்பையா தேடும் குற்றவாளி மைம் கோபி எந்த முகமூடியும் இல்லாமல் பைக்கில் சுற்றுவது எல்லாம் ஓவர் சீன்.. அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் ஸ்கெட்ச் போடுவது ஏனோ? என்று தெரியவில்லை..
நாயகனின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கண் கலங்கவும் வைக்கிறது. தன் குழந்தையின் பட்டினியை தீர்க்க தன் உடலையே கொடுக்க நினைக்கும் தாயின் வலியை காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அதற்கு அழுத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை. அவர் வேறு ஏதேனும் வேலைக்கு கூட சென்று இருக்கலாமே என்று என்ன தோன்றுகிறது.
சிறைக்கு சென்று வந்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களை இந்த சமூகம் எப்படி நடத்தும்? அவர்கள் எப்படி திசை மாறி தங்கள் வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள்? என்பதை ‘வா வரலாம் வா’ என்பதன் மூலம் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ரவிச்சந்தர் & எஸ்.பி.ஆர்.
கூடுதல் தகவல்..
மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கியவர் எல்.ஜி.ரவிசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
Va Varalam Va movie review and rating in tamil