தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஹரி ஜானி, லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
எடிட்டர் –
தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் டைரக்டர் ரஞ்சித்
மக்கள் தொடர்பாளர் – குமரேசன்
கதைக்களம்…
கருப்பி என்ற நாயை வளர்த்துக் கொண்டு புளியங்குளம் கிராமத்தில் ஜாலியாக நண்பர்களுடன் வேட்டைகளுக்கு சென்று திரிகிறார் பரியேறும் பெருமாள் கதிர்.
இவர்கள் சாதியின் மேல் உள்ள வெறியில் கருப்பி என்ற நாயை உயர் சாதியினர் கொன்றுவிடுகின்றனர்.
ஒருமுறை வேட்டைக்காக சென்ற போது போலீஸில் மாட்டிக் கொள்கின்றனர் கதிர் மற்றும் அவரது நண்பர்கள்.
அப்போது இவர்களுக்கு உதவ சூப்பர் குட் சுப்ரமணி ஒரு வருகிறார். நீ என்னடா வக்கீலா.? என்னை கேள்வி கேட்கிறாய்? என அவரை அடித்து விடுகிறார் போலீஸ்.
அப்படி என்றால் போலீசை தட்டிக் கேட்க நீ வக்கீலாக வேண்டும் என கதிருக்கு அறிவுரை கூறுகிறார் சூப்பர் குட் சுப்ரமணி. அதன்படி தன் கிராமத்து அருகில் இருக்கும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்கிறார் கதிர்.
அங்கு சக மாணவன் யோகிபாபு மற்றும் ஆனந்தி பழக்கமாகின்றனர். கதிரின் அப்பாவித்தனத்தால் ஆனந்திக்கு அவர் மேல் காதல் வருகிறது.
இதை தெரிந்துக் கொள்ளும் ஆனந்தியின் அப்பா கதிரை ஆள் வைத்து அடிக்கிறார்.
மேலும் கீழ் சாதியின் காரணமாக கதிருக்கு அடிக்கடி எல்லா வகையிலும் தொந்தரவு கொடுக்கிறார் ஆனந்தியின் அண்ணன் லிஜீஸ்.
கதிரை தீர்த்துக் கட்ட கராத்தே வெங்கடேஷ் என்பவரிடம் பணம் கொடுக்கிறார்.
அதன்பின்னர் என்ன ஆனது? கதிர் எப்படி தப்பித்தார்? ஆனந்தியை கரம் பிடித்தாரா? வக்கீல் ஆனாரா? தன் சாதியினைரை காப்பாற்றினாரா? என்பதே பரியேறும் பெருமாள்.
கேரக்டர்கள்…
கதிர் ஆனந்தி இருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும்.
ஒரு கிராமத்து இளைஞராக வாழ்ந்திருக்கிறார் கதிர். ஆங்கிலம் தெரியாத காரணத்தால் மாணவர்களிடம் அவமானப்படும் போதும், அம்மா மேல சத்தியம் என கூறும்போது, சாதியால் துவண்டு பின்னர் வெகுண்டு எழும்போது கதிர் கைத்தட்டல்களை அதிகம் வாங்குகிறார்.
காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பெயரெடுப்பார் யோகிபாபு. தன் பங்களிப்பை சரியாக செய்துள்ளார்.
ஆங்கில C லெட்டரில் சில வார்த்தைகள் சொல்லு என ஆசிரியர் இவரை கேட்கும்போது சின்ன C பெரிய C என இவர் கேட்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. எங்க அப்பா கவுன்சிலர் நான் க்ளாஸ் விட்டு போகனுமா? என நக்கல் பேசி நம்மை அதிகம் கவர்கிறார்.
இப்படி ஒரு தோழி நாம் படிக்கும்போது (சிலருக்கு) கிடைக்கவில்லையே என ஏங்க வைப்பார் ஆனந்தி. பரியனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அப்பாவிடம் கூறும்போதும், தன் அப்பா முன்னிலையில் காதலனிடம் பேசும்போது ஒரு யதார்த்த நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார்.
மிரட்டலான அப்பாவாக மாரிமுத்து. தன் மகளுக்கு தெரியாமல் மகளிடம் நல்லவனாக நடித்து இவர் காட்டும் மிரட்டல் தனம் அருமை.
கராத்தே வெங்கடேஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மற்றொரு வில்லன். வயதானவராக இருக்கிறாரே என்று பார்த்தால் மிரட்டியிருக்கிறார். நிச்சயம் இவரை பார்ப்பவர்கள் திட்டாமல் இருக்க மாட்டார்கள்.
ஆனந்தியின் அண்ணனாக லிஜீஸ். யார்ரா இவர் என்று? நிச்சயம் ரசிகர்களை கேட்க வைப்பார். கதிரின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சியில் ஜாதி வெறிக் கொண்டவராகவும் சீனியர் மாணவராகவும் கெத்து காட்டியிருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ரசிக்கும் ரகம். கிராமத்து ராகத்தை கலந்து கொடுத்திருக்கிறார். எங்கும் புகழ் பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருக்கும்.
கருப்பி நாய் படத்தின் முதல் காட்சியிலே இறந்துவிடுகிறது. அதன்பின்னர் ஒரு பாடல் வருகிறது. சாரி. அது பாடல் இல்லை. கத்தி கத்தி படித்திருக்கிறார்.
உன் மூக்கில் உரசனும். உன் நாக்கால் நக்கி என் அழுக்கை போக்கனும் என்றெல்லாம் பாடல் வரிகள் வருகிறது. ஒரு வேளை நாயை பிடித்தவர்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கலாம்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அனைத்தும் அருமை. முக்கியமாக க்ளைமாக்ஸில் டீ க்ளாஸை வைத்து சாதி பிரிவினையை சொல்லியிருக்கிறார்.
ஆனால் சில கல்லூரி காட்சிகளில் (யோகிபாபு பல் குத்தும் காட்சி க்ளோஸ்அப் சார்ட்) தேவையில்லாமல் கேமராவை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். (ஒருவேளை கேமரா மேனுக்கு கை வலித்திருக்குமோ.?)
ஒரு காட்சியில் காலா ஸ்டைலில் கலர் பூசியிருக்கிறார் டைரக்டர். நாயின் மீதும் கதிரின் மீது நீல பவுடர்களை பூசி புது வண்ணம் கொடுத்திருக்கிறார். இது ரஞ்சித் பார்முலாவாக இருக்கும்.
கல்லூரியில் பல நிகழ்வுகள் இருக்கும். முக்கியமாக கலை நிகழ்ச்சிகள். ஆனால் அதுபோன்ற காட்சிகளே இல்லை. சாதியினை காட்டியே காட்சிகளை நகர்த்துகிறார் மாரி செல்வராஜ்.
நாயகன் கதிர் டீமுக்கு கானா எல்லாம் அருமையாக வருகிறது. அதில் ஒன்றை கொடுத்து அவரை உயர்த்துவதாக கொடுத்திருக்கலாம். ஆனால் கடைசிவரை சாதியை காட்டியுள்ளனர். முக்கியமாக நட்பாக பழகும் மாணவர்கள் சாதியை பார்ப்பதில்லை. நல்ல நண்பர்களுக்கு இன்று வரை சாதியே தெரியாது என்பதுதான் உண்மை. அதுபோல நட்பை உயர்த்தியிருக்கலாம்.
கதிரை ஒருவர் கொல்ல முயன்று ரயில் ட்ராக்கில் கிடத்தி இருப்பார். டிரெயின் வந்துக் கொண்டிருக்கும். அப்போது இறந்துபோன கருப்பி நாய் வந்து நக்குவதாகவும் கதிர் விழித்துக் கொள்வதாகவும் காட்சிகள் இருக்கும். அட்லீஸ்ட் அப்போது மழை வந்திருக்கலாம். அல்லது வேறு ஒரு நாயை வைத்து நக்க விட்டு இருக்கலாம். ஆனால்…?????
சாதி கொடுமை இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது உண்மைதான். சாதி இல்லாத உலகம் வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசையும்.
ஆனால் அதையே தொடர்ந்து ரஞ்சித் (இதில் தயாரிப்பாளர்) படமாக்கி கொண்டிருப்பது ஏனோ? கொஞ்சம் கேப் விடுங்க சார்? ஒரே மாதிரியாக இருந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும்.
சாதி பிரிவினையை எடுத்து அதை கல்லூரி பருவத்துடன் கலந்து கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கதைக்கு ஏற்ற நட்சத்திரங்களை கொண்டு அதை திறம்படவும் செய்திருக்கிறார். அதற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.
பரியேறும் பெருமாள்… சாதியை வெறுப்பவர்களுக்கு சமர்ப்பணம்