தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
நம் அனைவருக்கும் உணவளிப்பவனே உயர்ந்தவன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட விவசாயி பற்றிய வாழ்வியலே இந்த பாடம்.
கதைக்களம்…
75-80 வயது மதிக்கத்தக்க நல்லாண்டிதான் இந்த கதையின் நாயகன்.
ஓர் அழகான கிராமத்தில் விவசாயம் செய்து தன்னை மட்டுமே நம்பி வாழ்கிறார். நாத்து நடவோ அறுவடை செய்யவோ ஆள் கிடைக்காவிட்டாலும் தனி ஆளாக அனைத்தையும் செய்து வருகிறார்.
பலர் 100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியிருக்க இவர் மட்டுமே 365 நாட்கள் விவசாயியாக வாழ்ந்திருக்கிறார்.
செயற்கை உரங்களை நம்பாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார். இவரின் எண்ணத்திற்கு ஏற்ப இவரது கேணியில் மட்டும் தண்ணிரூக்கு பஞ்சமில்லை.
ஒரு கட்டத்தில் 15 வருடங்களாக நின்றுபோன ஊர் குல தெய்வத்திற்கு படையலிட இவரிடம் நெல்மணிகளை கேட்கின்றனர்.
இதற்காக நாத்து நாட்டு பயிரிடுகிறார் நல்லாண்டி.
பிராணிகள் மீது அதீத அன்பு கொண்ட இவரது விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன.
இறந்த மயில்கள் தானே என தனது நிலத்திலேயே மூன்றையும் புதைத்தும் விடுகிறார்.
இதனை பார்த்த ஒரு நபர் தவறுதலாக நல்லாண்டி தான் 3 மயில்களை கொன்று புதைத்தார் என காவல்துறையில் புகாரளித்து விடுகிறார்.
மயிலை கொன்ற காரணத்திற்காக நல்லாண்டி மீது போலீஸ் வழக்கு பதிய சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதனால் பயிரிடப்பட்ட நாற்று பாதியில் நிற்கிறது.
நல்லாண்டி வழக்கில் இருந்து மீண்டாரா ? பயிர்கள் என்னவானது. ? குல தெய்வம் படையல் திருவிழா நடந்ததா? என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்…
இந்த பெரியவர் நல்லாண்டி நிஜ வாழ்க்கையில் கொரோனா காலத்தில் மரணமடைந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் ஒட்டு மொத்த பாராட்டையும் பெற்று இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.
அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அவர் செய்வதை செய்யட்டும் நான் படமாக்கி கொள்கிறேன் என இயக்குனர் & ஒளிப்பதிவாளர் மணிகண்டன் நினைத்திருப்பார் போல… அப்படியே யதார்த்தமாக வருகிறார் இந்த மனிதர்.
அவரின் அப்பாவித்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் கோர்ட்டில் நீதிபதி வந்து அமர… யார் அந்த பெண்? என கேட்கிறார்.
நம் உயிர்களை போல நெற்பயிரும் உயிர்தான். அதனை காப்பது நம் கடமை என சொல்லும்போது நம் கண்கள் கலங்கும்.
கதையின் நாயகி என்றால் அது நீதிபதியாக வரும் ரெய்ச்சல் ரெபேகா தான். இந்த மனிதர் மயிலை கொன்று இருப்பாரா.? என போலீசிடம் கேட்கும்போது நீதி தேவதையாக தோன்றுகிறார்.
இறுதியில் தீர்ப்பளித்துவிட்டு விவசாயிக்கு என்ன ஆச்சு என பதறும்போது ரெய்ச்சல் மீது நடிப்பு பாய்ச்சல் ஒளி தெரிகிறது.
கைதியாக வருபவர், போலீஸ் ஏட்டாக வந்த காளைப் பாண்டியன், கிராமத்து வாசிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து & பாட்டியம்மாக்கள் உள்ளிட்டவர்கள் சூப்பர்.
படத்தில் முருக பக்தனாக விஜய்சேதுபதி & யானை வளர்ப்பவனாக யோகிபாபு இருவரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள். அவ்வளவுதான்.
டெக்னீசியன்கள்…
சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் பின்னனி இசை ரசிக்க வைக்கிறது. ஏற்கெனவே கேட்ட முருகா முருகா பாடல்களை தவிர்த்து புதுப்பாடல்களை போட்டு இருக்கலாம்.
கிராமத்து அழகினை வெறுமனே காட்டாமல் மயில், மாடு, கோழி, யானை உள்ளிட்ட ஜீவன்களுடன் காட்டியது கூடுதல் சிறப்பு.
எந்த செயற்கைத்தனமும் இல்லாத கிராம மக்களின் வாழ்வியலுடன் ரேஷன் கார்டு, மின்சாரம் என எதுவும் இல்லாமல் வாழும் நல்லாண்டி போன்ற மனிதர்களை நாம் இன்று பார்க்க முடியாது.
அவரின் உன்னதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு பாடமாக பதிவு செய்திருக்கிறார் மணிகண்டன் என்பதே நிதர்சனமான உண்மை.
ஆக…. இந்த கடைசி விவசாயி…
விவசாயிதான் இந்த மண்ணின் கடைசி விதை. அவர்கள் இல்லையேல் நாம் இல்லை..
Kadaisi Vivasayi movie review and rating in tamil