தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்….
ஆரம்பக் காட்சியிலே அழுகையுடன் ரோட்டில் நடந்து செல்கிறார் ஆனந்தி. அந்தப் பக்கமாக செல்லும் ஒரு கார் திடீரென ஆனந்தியை கடத்தி செல்கிறது.
ஆனந்தியை கண்டுபிடிக்க இரண்டு பிரிவு குழுவினர் செல்கின்றனர். ஒரு குழுவின் தலைவர் நட்டி நடராஜ். இவர் யார்? இவர் எதற்காக ஆனந்தியை தேடுகிறார்? என்பது படத்தின் ட்விஸ்ட்.
மற்றொரு குழுவில் தலைவர் நரேன். இவருடன் கதிர் மற்றும் ஆத்மியா உள்ளனர். துப்பறியும் நிபுணரான நரேனுக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுத்தவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி பிரதாப் போத்தன்.
ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி ஆனந்தியை தேட சொல்வதன் நோக்கம் என்ன? இந்த குழுவினர் கண்டுபிடித்தார்களா? ஆனந்தி யார்.? அவரை இத்தனை பேர் தேடுவதன் நோக்கம் என்ன? கடத்தி சென்றவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பதே கதை.
கேரக்டர்கள்…
நட்டி கேரக்டர் என்ன? என்ற கேள்விகள் அடிக்கடி எழும். ஆனால் கிளைமாக்ஸில் தான் அவரின் கேரக்டரே நமக்கு தெரிகிறது. தனக்கே உரித்தான பாணியில் அசால்டாக செய்திருக்கிறார்.
துடிப்பான போலீஸ் அதிகாரியாகவும் பாசமான கணவராகவும் தன் கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார் கதிர்.
துப்பறியும் நிபுணராக நரேன். இவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதங்கள் அருமை. பிரதாப் போத்தன் கேரக்டரும் அருமை.
மூன்று நாயகிகள்.. கயல் ஆனந்தி பவித்ரா லட்சுமி ஆத்மியா.. ஆனால் மூன்று பேருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனாலும கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
டாக்டராக வரும் வினோதினி படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வாடகைத்தாய் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளார்.
நடிகராக வரும் ஜான்விஜய் சிறப்பான நடிப்பு. இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கதை கேட்டு அதன் பின் காட்சிகளை மாற்றியமைக்கும் காட்சிகள் சிறப்பு.
டெக்னீசியன்கள்…
வாடகை தாய் படும் வேதனைகள்.. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் – ஸாக் ஹாரிஸ்.
மானத்தைக் காக்கவும் கௌரவத்திற்காகவும் வாடகை தாய்களை அமர்த்திக் கொள்ளும் பணக்காரர்களையும் அவர்களின் அலட்சியத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. படத்தில் பாடல்கள் இல்லை. ரஞ்சின் ராஜ் பின்னணி இசை.
அடுத்த காட்சி இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என யூகிக்க முடியாமல் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். திடீர் திடீரென காட்சிகளை மாற்றி செல்வது படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது.
இடைவேளைக்கு முன்பு வரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையில் பல முடிச்சுகளை அவிழ்கிறார்.
ஆக.. யூகி.; யூகிக்க முடியாத ஸ்கிரீன் ப்ளே