தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்..
அப்போது அவர் பேசியதாவது…
“எனக்கு களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது.
அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.
பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள் இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்.
அது இப்படத்திற்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வெளியூர் செல்லும் போது சோழர்களின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
மேலும், உங்களுடைய வாழ்த்துகள் எப்படி இருக்கும் என்று தெரியும். நேரில் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைவருடனும் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தார் கல்கி.
அதேபோல், மணி சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும்” என்றார்.