தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் – குருசோமசுந்தரம், சிபி புவன சந்திரன், விஷாகன், ஜான்விஜய், அனிஷா ஆம்புரோஸ், சாந்தினி தமிழரசன், அழகம்பெருமாள், வாசு விக்ரம், மற்றும் பலர்.
இயக்குனர் – மனோஜ் பீதா
கதை & வசனம் – விநாயக்
இசை – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு – ரோட்ரிகோ டெல் ரியோ, சரவணன் ராமசாமி
பிஆர்ஓ- சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
ஜெயப்பிரகாஷ் மற்றும் சாந்தினி கணவன் மனைவி. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அருகில் வீட்டில் இருக்கும் நாயகன் சிபி சந்திரன், திருமணமானவள் சாந்தினி என்பதை தெரியாமல் காதல் கொள்கிறார். இருவரும் செக்ஸ்ம் வைத்துக் கொள்கின்றனர்.
இதனிடையில் ஒரு நாள் சாந்தினி கொலை செய்யப்படுகிறார். இதனால் காரணம் தெரியாமல் தவிக்கிறார் சிபி. ஆனால் உண்மையை வெளியே சொன்னால் தாம் மாட்டிக் கொள்வோம் என்பதால் மறைக்கிறார்.
இதை போலீஸ் ஒரு புறம் விசாரிக்கிறது. மற்றொரு புறம் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இதில் துப்பு துலக்க இறங்குகின்றனர்.
இந்த இரு விசாரணைகளும் ஒவ்வொரு பக்கம் செல்கிறது.
அதன்பின்னர் என்ன ஆனது? அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? சிபி மாட்டிக் கொண்டாரா? அவரின் லீலைகள் தெரிந்துவிட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் படத்தின் ஹீரோவா அல்லது வில்லனா? என்பதே தெரியாத அளவுக்கு ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் ஸ்கோர் செய்கிறார்.
ஏன்டா? டான் எல்லாம் 6 அடிதான் இருக்கனுமா? என்னைப் போல 5.5 அடி இருந்தால் நம்ப மாட்டீங்களா? என்று போலீசை போட்டுத் தள்ளும்போது ரசிக்க வைக்கிறார்.
மாணவன், கேங்ஸ்டர் என இரண்டில் பயணித்தாலும் மாணவன் கேரக்டரில் இவரின் முக முதிர்ச்சி காட்டிக் கொடுத்து விடுகிறது. ஆனால் அதில் இவருக்கும் இவரது நண்பருக்கும் உள்ள உறவு நெருடலாக உள்ளது.
நாயகன் சிபி சந்திரனுக்கு இதுதான் முதல் படம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு கூலாக வருகிறார். தன்னுடன் பணி புரியும் பெண்ணைத் திட்டும் போது கெத்து காட்டுகிறார்.
ஆனால் சாந்தினியை திட்டும் போது டயலாக்கை மறந்துவிட்டது போல தோன்றுகிறது. நிறுத்தி நிறுத்தி பேசுவதை தவிர்த்திருக்கலாம்.
சாந்தமாக வந்து நடிப்பை ரசிக்க வைத்துள்ளார் சாந்தினி.
கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாளர்களாக வரும் ஆண், பெண் இருவரும் நல்ல தேர்வு. அந்த பெண் அனிஷா ஆம்ப்ரூஸ்ம் ரசிகர்களை ஈர்ப்பார்.
இவர்களுடன் ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி உள்ளிட்ட பாத்திரங்கள் கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
வசனங்களால் வர வைக்க முடியாத சிரிப்பை சில காட்சிகளில் சைகையால் வர வைத்துவிட்டார் டைரக்டர்.
முதல் பாதியை முழுவதுமாக கண் கொட்டாமல் பார்த்தாலும் பலருக்கும் படம் புரிய வாய்ப்பு இல்லை. இடைவேளை வரை என்ன படம்? என்பதை குழப்பமாகவே நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியில் நல்லவேளையாக காப்பாற்றி விட்டார்.
புதுவிதமாக ஒரு படத்தை கொடுக்க நினைத்துள்ளார் மனோஜ் பீதா.
நிறைய காட்சிகளை வெட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் எடிட்டர் கவனிக்கவில்லை போலும். ஜான் விஜய் கடலில் பேசும் காட்சிகள் எல்லாம் நீளத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
பின்னணி இசையில் தன் மிரட்டலை கொடுத்துள்ளார் சாம்.சி.எஸ்.. வன்முறை காட்சியில் ஒரு கர்நாடிக் பாடலை போட்டு வித்தியாசம் காட்டியுள்ளார். பாடகியின் குரலும் அந்த காட்சிக்கு வலு சேர்த்துள்ளது.
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.
வஞ்சகர் உலகம்… வித்தியாச உலகம்
Vanjagar Ulagam Movie review rating