தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஜய்சேதுபதி, காயத்ரி, மகிமாநம்பியார், ரமேஷ்திலக், அர்ஜீனன் மற்றும் பலர்.
இயக்கம் : ரஞ்சித் ஜெயக்கொடி
இசை : சிஎஸ் ஷாம்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: பவன்ஸ்ரீகுமார்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஜே. சதீஷ்குமார்
கதைக்களம்…
படத்தின் முதல்காட்சிலேயே ஒரு கல்லூரியின் உயரமான கட்டிடத்தில் இருந்து ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏன்? என்ற புரியாத புதிரோடு கதை விரிகிறது.
ஒரு சாலையில் காயத்ரியை பார்க்கும் விஜய்சேதுபதி அவர் மீது காதல் கொள்கிறார்.
பின்னர் அவரும் காதலிக்கிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு காயத்ரியின் அந்தரங்கமான படங்கள் வருகிறது.
உடை மாற்றும் காட்சி, குளியல் காட்சி உள்ளிட்ட காட்சிகள். ஆனால் அந்த போனை இவர் தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவிக்கிறார்.
போலீசில் சொன்னாலும் தன் காதலி அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால் தானே அந்த நபரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
தான் சொன்னதை செய்தால் அந்த வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்யமாட்டேன் என்கிறார் அந்த மர்ம நபர்.
அவர் என்ன சொன்னார்? அவர் சொன்னதையெல்லாம் விஜய்சேதுபதி நிறைவேற்றினாரா? தன் காதலியை காப்பாற்றினாரா? இவரையும் காயத்ரியையும் அந்த நபர் பழிவாங்க என்ன காரணம்? என்பதை இந்த புரியாத புதிர்கள் சொல்லும்.
கேரக்டர்கள்…
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் விஜய்சேதுபதி இதிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
மர்ம நபர் யார்? என்று தெரியாமல் குழம்பி தவிக்கும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
எந்த இமேஜ்ஜீம் தனக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதே ரூட்டில் பயணித்தால் இதுபோன்ற வித்தியாசமான படங்கள் இவரிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.
விஜய்சேதுபதி காயத்ரி கெமிஸ்ட்ரி இதிலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
யதார்த்த பெண்ணாக மிகையில்லாத நடிப்பில் கவர்கிறார் காயத்ரி. தோழி, காதலி என இரண்டிலும் இந்த இரண்டிலும் நிறைவான நடிப்பு.
எவருமே எதிர்பாரா கேரக்டரில் மகிமா நம்பியார். சிறிய வேடம் என்றாலும் படத்தின் அச்சாணி இவர்தான்.
இவருடன் ரமேஷ்திலக், அர்ஜீனன் ஆகியோரும் உண்டு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடலின் வரிகள் பாடலுக்கு பலம் சேர்த்துள்ளன. ஷாமின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
உயரமான கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், தற்கொலை காட்சிகள் மனதை பதற வைக்கிறது. ஒளிப்பதிவாளர் எடிட்டரும் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர்.
இயக்கம் பற்றிய அலசல்…
இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப ஒரு படத்தை கொடுத்துள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.
2003ல் வந்த விசில் படத்தின் சாயல் இதில் கொஞ்சம் கலந்து இருக்கிறது. மேலும் அண்மையில் வெளியான லென்ஸ் பிரதிபலிப்பும் இருக்கிறது.
ஆனால் ஒரு ரொமான்டிக் மற்றும் த்ரில்லர் கலந்து இந்த புரியாத புதிரை சிறப்பாக செய்திருக்கிறார்.
எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அது தன் வீட்டில் நடக்கும்போது அந்த வலி தெரியும்.
ஒருவரின் அந்தரங்கத்தையும் பார்ப்பதும் அதை இணையத்தில் பரப்புவதும் பெரும் குற்றம். அதனால் எத்தனை குடும்பங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்.
விளையாட்டாக நம் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து வைத்தாலும் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கும் விளக்கமளித்திருக்கிறார்.
இதை பார்த்து சில விஷமிகள் திருந்தினால் அதுவே இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி.
புரியாத புதிர்…. அந்தரங்க விபரீதம்