தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன் லைன்…
ஊர் பஞ்சாயத்தில் ஒரு பிரச்சனை வரவே அந்த ஊரையே கபடி போட்டியில் எதிர்த்து நிற்கிறது ஒரு குடும்பம்.
கதைக்களம்…
கோத்தாரி ராஜ்கிரண். இவருக்கு ஜெயப்பிரகாஷ் – ஆர் கே சுரேஷ் – துரை. சுதாகர் ஆகிய மூன்று மகன்கள் ஒரு மகள். மகளைக் கட்டியவர் சிங்கம்புலி.
இதில் ஆர்கே சுரேஷ் ராதிகா தம்பதியரின் மகன் அதர்வா.
தனக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு தன் ஊருக்காகவே கபடி விளையாட்டில் முழு கவனம் செலுத்தியவர் ராஜ்கிரண். எனவே இவருக்கு ஊரில் கிராமத்தினர் சிலை வைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் கபடி விளையாடும் போது ஆர் கே சுரேஷ் மரணம் அடைய தன் கணவரின் சாவுக்கு ராஜ்கிரன் தான் காரணம் என குடும்பத்தை விட்டு பிரிந்து தன் மகனோடு செல்கிறார் ராதிகா.
சில வருடங்களில் வில்லன் கும்பலின் சூழ்ச்சியால் ஜெயப்பிரகாஷின் மகன் (கபடி வீரன்) தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த பிரச்சினையால் ஊரை விட்டு ராஜ்கிரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறது ஊர் பஞ்சாயத்து. இதனையடுத்து தங்கள் குடும்பம் சார்பாக ராஜ்கிரண் & அதர்வா இணைந்து ஒரு சவால் விடுகின்றனர்.
இந்த ஊரை எதிர்த்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கபடி விளையாட்டில் மோதுவோம்.
ஊர் ஒரு பக்கம். குடும்பம் ஒரு பக்கம்.. இறுதியில் வென்றவர்கள் யார்? என்பதே கதை.
கேரக்டர்கள்…
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அதர்வா பாஸ் மார்க் பெறுகிறார். கபடியை ஆடத் தெரியாத இவர் ஒரு தேசிய கபடி வீரரை வீழ்த்துவது எல்லாம் ஹீரோயிசம்.
கபடி வீராங்கனையாக ஆஷிகா. ஆனால் இறுதியில் கபடி ஆட்டத்தில் ஒரு பாயிண்ட் கூட பெற்று தரவில்லை. தொடை அழகை காட்டி ரசிகர்கள் மனதை தொடுகிறார். இதையெல்லாம் என்ன சொல்வது.?
ராஜ்கிரண் தன்னுடைய அனுபவ நடிப்பில் நன்றாகவே பின்னி எடுத்திருக்கிறார். 40 வயது வாலிபனாகவும் 70 வயது தாத்தாவாகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவரின் மகன்களாக நடித்த ஜெயப்பிரகாஷ் ஆர்.கே.சுரேஷ் துரை சுதாகர் உள்ளிட்டோர் யதார்த்த கிராமத்து மனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.
தன் அண்ணன் மகனுக்காக துரைசுதாகர் பாசத்தோடு அணுகும் காட்சிகள் சிறப்பு.
கொஞ்ச நேரமே வந்தாலும் ஆர் கே சுரேஷ் ராதிகாவும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். நாயகி ஆஷிகாவின் அம்மாவாக வரும் சிந்து அக்காவை போல இருக்கிறார். கொஞ்ச நேரமே என்றாலும் சிந்து சிறப்பு.
அதர்வாவின் நண்பராக பால சரவணன் பாவம் அவருக்கும் காமெடியும் பெரிதாக இல்லை காட்சியும் பெரிதாக இல்லை.
டெக்னீஷியன்கள்…
ஆடு பகை என்றால் குட்டியும் பகைதான் என்கிறார் ராஜ்கிரன். அதுபோல ஜெயப்பிரகாஷின் மகன் அதர்வாவிடம் பணத்தை வாங்கும்போது தடை போடுகிறார். அப்போதெல்லாம் வராத பாசம் திடீரென ஊர் பஞ்சாயத்தில் பாசம் வருவது புரியாத புதிராகவே உள்ளது. அதற்கான அழுத்தமான எந்த காரணங்களும் படத்தில் இல்லை.
பட்டத்து அரசன் என்ற தலைப்பு ஏன் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. காரணம் குடும்பமே பசி பட்டினி பஞ்சம் என்று இருக்கிறது. இதில் எந்த பட்டத்திற்கு யார் அரசன்? என்றே தெரியவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் ஊரை எதிர்த்து தாத்தா ராஜ்கிரன் முதல் பேரன் அதர்வா & குட்டி பையன் வரை அனைவரும் கபடி விளையாடுகின்றனர். அப்போதும் கூட அதர்வாஙுடன் கைகோர்க்க தவிர்க்கிறார் பெரியப்பா ஜெயப்பிரகாஷ். ஆனால் அடுத்த ரவுண்டில் கைகோர்த்து விளையாடுகிறானர். ஏன் மனம் மாறினார்.?
இந்த கபடி ஆட்டத்தில் மருமகன் சிங்கம் புலிக்கு காயம் ஏற்பட திடீரென ஆட்டத்தில் நுழைகிறார் நாயகி ஆஷிகா. இது ஒரு குடும்பம் ஆடும் ஆட்டம்.. நுழைய நீ யாரு என்று கேட்கிறார் வில்லன். உடனே அதர்வா-விடம் தாலி கட்ட சொல்கிறார் ஆஷிகா. முதலில் தயங்குகிறார் அதர்வா..
நீ இப்போ தாலி கட்டு.. மேட்ச் முடிஞ்ச உடனே தாலியை கழட்டு என்கிறார் ஆசிகா. அடடா இப்படி ஒரு கிராமத்து பெண்ணா.? என வியக்க வைக்கிறார் இயக்குனர். (ஹா..ஹா??!!..)
கிளைமாக்ஸ் காட்சியில் முக்கியமான ஒரு கபடி வீரர் நுழைகிறார்.. அவர் இந்தியளவில் ரூ. 5 கோடிக்கு ஏலம் போனவர். ஆனால் அவர் விளையாட தெரியாத அதர்வா குடும்பத்தாரிடம் தோற்றுப் போகிறார். அப்படின்னா எப்படிப்பட்ட கபடி வீரர் அவர் என பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அவர் அந்த காட்சிக்கு தேவையற்றவர். இப்படியாக பட்டத்து அரசனை பங்கம் செய்துள்ளனர்.
மற்றபடி படத்தில் ஒளிப்பதிவும் இசையும் நன்றாகவே உள்ளது. கிராமத்து காட்சிகள் அழகு சேர்க்கின்றன. இசை : ஜிப்ரான்.
கபடி பயிற்சி பெறும் போது சுற்றிலும் நெருப்பை எரிய விட்டு நடனமாடிக் கொண்டிருப்பது என்ன வகையான பயிற்சி.?
இயக்குனர் சற்குணம் திரைக்கதையில் சறுக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த அவர் திரைக்கதையும் வலுவாக அமைத்திருக்கலாம்.
ஆக.. பட்டத்து அரசன்… பஞ்சத்து அரசன்
Pattathu Arasan movie review and rating in tamil