தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் (மகிழ்திருமேனி டப்பிங்), விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஷி கண்ணா, மானஷ்வி (நடிகர் கொட்டாச்சி), உதய் மகேஷ் மற்றும் பலர்.
இயக்கம் – அஜய் ஞானமுத்து
இசை – ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : கேமியோ பிலிம்ஸ்
கதைக்களம்…
அடுத்தடுத்து கடத்தல், கொலைகள் நடக்கிறது. அதை நயன்தாரா தலைமையிலான சிபிஐ டீம் விசாரிக்கும்போது அது 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை பாணியில் ஒத்துப் போகிறது.
மேலும் கடத்தல்காரன் பணத்தை கேட்டு மிரட்டிவிட்டு பணம் கைக்கு வந்த உடன் ஆளை கொலை செய்துவிடுகிறான்.
அந்த கொலைக்காரன் ருத்ரா முன்பே இறந்துவிட்டான். அப்படி என்றால், அவன் பெயரில் கொலைகளை செய்வது யார்?
அவனின் சவால்கள் அனைத்தும் நயன்தாராவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
ஒருமுறை பணத்தை கொடுத்து விட்டு மறைந்து இருந்து கண்காணிக்கிறது சிபிஐ. அந்த பணத்தை எடுத்து செல்கிறார் அதர்வா.
அதர்வா நயன்தாராவின் தம்பி. அப்படியென்றால் அவர்தான் கொலை செய்கிறாரா? என்ற பாணியில் களம் இறங்குகிறது சிபிஐ டீம்.
நயன்தாராவின் தம்பி அதர்வா என்பதால், நயன்தாரா மீது நம்பிக்கை இழக்கின்றனர். எனவே தேவன் தலைமையிலான அணி விசாரணையில் இறங்குகிறது.
அதன்பின்னர் என்ன ஆனது? அதர்வா ஏன் அப்படி செய்தார்? அவர் கொலை செய்ய காரணம் என்ன? நயன்தாரா பணி என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
படத்தில் நயன்தாரா, அதர்வா ஆகிய பிரபலங்கள் இருந்தாலும் அவர்களை மிஞ்சிய நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.
இவரை பார்த்தால் நமக்கே கோபம் வெறி வரும். ஐ லவ் கில்லிங் என்று இவர் சொல்லும்போது? என்னடா இவன் சைக்கோ மாதிரி பேசுறானே என கடுப்பேற்றுவார். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்துள்ளார்.
கவர்ச்சியில்லாமல் ஆக்சனில் கவர்ந்திருக்கிறார் நயன்தாரா. மிரட்டல் பார்வை, மிடுக்கான தோற்றம் என ஈர்க்கிறார்.
முதல்பாதியில் லவ், ப்ரேக் அப் என வலம் வந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளார் அதர்வா.
நயன்தாராவின் கணவராக சில காட்சிகளில் வருகிறார் விஜய்சேதுபதி. நடிப்பில் குறை இல்லையென்றாலும், இந்த சின்ன வேடத்திற்கு அவர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது.
அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் கொடுத்துள்ள மகிழ்திருமேனியை பாராட்டியே ஆக வேண்டும். மிரட்டல் குரல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாராவின் மகளாக நடித்துள்ள மானஷ்வி க்யூட். பேச்சிலும்தான். இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள். ஆனால் சொட்டை சொருகிடுவேன் என ஒரு பெரியவரை பார்த்து பேசுவது எல்லாம் ரொம்பவே ஓவர்.
இதுபோன்ற படைப்புகளால் நம் வீட்டிலுள்ள பிள்ளைகளும் இப்படி பேசுவார்கள்தானே…
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இந்த த்ரில்லர் சப்ஜெக்ட்டுக்கு செம சாப்பாடு போட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. (தீனி என்று சொன்னால் கொஞ்சமா இருக்கும்தானே… அதான் சாப்பாடு என்றோம்.. ஹிஹி..ஹி)
விளம்பர இடைவெளி ரெமான்டிக் என்றால், நீயும் நானும் அன்பே இதமான ராகம். காதலிக்காதே பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம்.
ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஆனால் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்தான் நம்மை சோதித்து விட்டார்.
படத்தில் அதர்வா ராஷிகண்ணா ரொமான்டிக்கில் கத்திரி போட்டு இருக்கலாம். நயன்தாராவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அதர்வாவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அனுராக் காஷ்யப்புக்கு ஒரு ப்ளாஷ் பேக். முடியலட சாமி.
ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முயற்சித்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஆனால் திரைக் கதையில் நிறைய லாஜிக்கை மறந்துவிட்டார்.
அதர்வாவை மாறி மாறி சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உடம்பில் காயத்தையும் காட்டவில்லை. கட்டையும் காட்டவில்லை. சட்டை ஓட்டையை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.
போலீஸ் படையே துரத்தும் போது அதர்வா சைக்கிள் ஓட்டியே காப்பாற்ற செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ். இன்னுமா? மக்களை இப்படி எல்லாம் ஏமாத்துறீங்க…?
இமைக்கா நொடிகள்… எடிட்டர் வெட்டினால் இமைக்காமல் பார்க்கலாம்