தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விக்ரம்பிரபு, நிக்கிகல்ராணி, பொன்வண்ணன், மதுசூதனன் ராவ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சங்கீதா, வருண், ராஜசிம்மன், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : அசோக்குமார்
இசை : ஷான்ரோல்டன்
ஒளிப்பதிவு: ஆர்டி. ராஜசேகர்
எடிட்டர்: தியாகு
கலை: பிரபாகரன்
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு : விக்ரம்பிரபு, இசக்கிதுரை, அஜய்குமார்
கதைக்களம்…
போலீஸ் கேரக்டர்களை பல படங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் தீ அணைப்பு வீரர்களை மையமாக கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
தீயை பார்த்தால் நாம் விலகி பயந்து ஓடுவோம். ஆனால் தீயணைப்பு வீரர்கள் மட்டுமே தீயை நோக்கி ஓடுவார்கள். அப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து அதை அனல் பறக்க சொல்லியிருக்கிறார்கள்.
தீயணைப்பு வீரராக வேண்டும் என சிறுவயது முதலே ஆசைக் கொண்டவர் விக்ரம்பிரபு. இவரைப்போல 4 நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதன்படி தாங்கள் வைத்திருக்கும் தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அரசாங்க வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரம்பிரபுவின் நண்பர் தற்செயலாக ஒருவரை தள்ளிவிட அவர் மரணமடைகிறார்.
இதனால் அவர்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார்கள்? என்பதே இந்த நெருப்புடா.
கேரக்டர்கள்…
வாகா, வீரசிவாஜி பட தோல்விகளால் துவண்டு போயிருந்த விக்ரம்பிரபுவுக்கு இந்த நெருப்புடா படம் புதிய தெம்பை கொடுக்கும்.
அவரின் உயரம், அவரின் பாடிலேங்ஜ்வுக்கு ஏற்ற கதைக்களத்தை செலக்ட் செய்து அதில் சிக்ஸர் அடிக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கு அவ்வளவு காட்சிகளில் இல்லையென்றாலும், கிடைக்கும் கேப்பில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வருபவர்கள் நல்ல தேர்வு.
மொட்டை ராஜேந்திரன் தன் காமெடி ரூட்டை மாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதுவும் முகத்தை அடிக்கடி க்ளோசப்பில் காட்டுவதை தவிர்த்தியிருக்கலாம்.
மிரட்டல் வில்லனாக மதுசூதனன் மகுடம் சூடுகிறார்.
க்ளைமாக்ஸில் எவரும் எதிர்பாராத சவாலான கேரக்டரில் வரும் சங்கீதா தன் முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஷான் ரோல்டான் இசையில் ஆலங்கிளியே, அந்தப் பொண்னு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஆலங்கிளி பாடல் பாடிய பாடகருக்கு ஹைபீச் எடுக்கவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு உயிரே என்ற வார்த்தைகளை பாடும்போது காட்டுகிறது.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. தீயை அணைக்கும் காட்சிகளில் அந்த வீரர்கள் மீதான மதிப்பை கூட்டுகிறது.
கலை இயக்குனரின் கைவண்ணத்தில் காட்சிகள் அருமை. ஒரு குப்பம் பகுதியாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி தந்திருக்கிறார்.
இயக்குனர் அசோக்குமார் புதிய களத்தை தேர்ந்தெடுத்து அதில் விளையாடியிருக்கிறார். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து அதை கையாண்ட விதமும் அருமை.
ஆனால் மதுசூதனன் இறக்கும் காட்சியில் அவரின் சட்டை முழுவதும் ரத்தக்கரை இருக்கிறது.
அதன்பின்னர் கயிற்றில் தொங்கும்போது ரத்தக் கரை கொஞ்சமே இருக்கிறது. அதையும் கவனித்திருக்கலாமே.
நெருப்புடா.. தியேட்டர நெருங்குடா