தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
1980 களில் நடக்கும் திரைக்கதை இது.. அதாவது 1980இல் ரஜினி நடித்த முரட்டுக்காளை.. 82 இல் கமல் நடித்த சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வந்த பிறகு நடக்கும் காலகட்டம். அதுபோல 1987இல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு முன் நடப்பதாக காட்சிகள் உள்ளன.
சரி.. அப்படியென்ன கதை..
ஆர் சுந்தர்ராஜன் தாத்தா.. இவரது மகன் ஆடுகளம் நரேன்.. இவரது மகன் சந்தானம்.. சந்தானம் தங்கை சங்கீதா.. இவர்கள் ஜமீன்தார் குடும்பம்.
ஆடுகளம் நரேன் ஒரு குடிகாரன். சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரின் தாத்தா சுந்தர்ராஜன் தன்னை இளமையாக காட்டிக்கொள்ள ரஜினி ரசிகன் என்று சொல்பவர்.
இந்த டும்பத்தில் ஒரு அதிசய கத்தி இருப்பதால் அதனை திருட மன்சூர் அலிகான் மனோபாலா மொட்ட ராஜேந்திரன் மூவரும் உள்ளே நுழைகின்றனர். அப்போது அந்த கத்தியை ஆர் சுந்தரராஜனிடம் கேட்க கத்தி வேண்டுமானால் எனக்கு என்ன தருவீர்கள் என கேட்கிறார்? அதற்கு வைரங்கள் தருகிறோம் என கொடுக்கின்றனர்.
ஆனால் அவர் அந்த வைரக் கற்களை கற்கண்டுகள் என நினைத்து வாயில் போட்டு விழுங்கி விடுகிறார். சில நிமிடங்களில் ஷாக் அடித்து இறந்தும் போகிறார்.
எனவே போஸ்ட்மாடம் செய்யும் ஆனந்தராஜ் உதவியுடன் மன்சூர் கூட்டணி பாடியை அறுத்து வைரம் எடுக்க திட்டம் போடுகின்றனர்.
மரண செய்தி அறிந்த உறவினர்கள் அனைவரும் கிராமத்திற்கு வருகின்றனர். அப்போது தன் உறவுக்கார பெண் ராதிகா ப்ரீத்தி மீது காதல் கொள்கிறார் சந்தானம்.
இதனை கண்டுபிடிக்கும் சந்தானத்தின் தங்கை சங்கீதா ஒரு சவால் விடுகிறார். தாத்தா சடலத்தை எடுப்பதற்குள் அந்தப் பெண் உன்னை காதலித்தால் நாங்கள் மொட்டை அடித்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதனையடுத்து சந்தானம் முறைப்பெண் ராதிகாவை இம்ப்ரஸ் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.
ஒரு பக்கம் தங்கை சங்கீதாவோ பிணத்தை வேகமாக எடுக்க பல சதிகளை செய்கிறார். ஆனால் சந்தானமும் சடலத்தை எடுக்க விடாமல் நேரத்தை நீட்டுகிறார்.
இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்.. எமனாக கே எஸ் ரவிக்குமார், சித்தரகுப்தனாக முனீஸ்காந்த், விசித்திரகுப்தனாக ரெடின் கிங்ஸ்லீ அந்த குடும்பத்திற்குள் வருகின்றனர். அப்போது சுந்தரராஜனின் நிறைவேறாத ஆசைக்காக சில மணி நேரங்கள் காத்திருக்கின்றனர்.
இறுதியில் என்ன ஆனது காதலியை கவர்ந்தாரா சந்தானம்? சடலம் என்ன ஆனது? உறவினர்கள் என்ன செய்தார்கள்? போட்டியில் ஜெயித்தது அண்ணன்? தங்கை? வைரம் என்னாச்சு? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
நடிகர்கள் சந்தானம், ராதிகா பிரித்தி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, ஆடுகளம் நரேன், சங்கீதா, ஆர் சுந்தர்ராஜன், கலைராணி, கூல் சுரேஷ், சேசு, லொள்ளு சபா சுவாமிநாதன், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கீங்ஸிலீ உள்ளிட்ட கோலிவுட் முன்னணி காமெடி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்
சந்தானம் வழக்கம் போல தன்னுடைய டைமிங் காமெடி மூலம் பில்டப் கொடுத்திருக்கிறார். சந்தானம் நாயகனாக நடிக்க தொடங்கிய பின் பல படங்களில் தாடி வைத்து தான் நடித்து வருகிறார்.
ஆனால் இதில் 1980களில் உள்ள கமல்ஹாசனை போல ஹேர் ஸ்டைல் மீசை வைத்து ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருக்கிறார். படம் முழுக்க கமல் ரசிகராக வந்தாலும் ஒரே காட்சியில் முரட்டுக்காளை ரஜினியாக மாறி பில்டப் செய்திருக்கிறார்.
நாயகி ராதிகா ப்ரீத்தி.. தங்கை சங்கீதா இருவரும் கோலிவுட்டுக்கு கிடைத்த திறமை வாய்ந்த அழகிய ஹீரோயின்கள். சங்கீதா அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் அவர் போடும் ஆட்டவும் துள்ளலும் ரசிக்க வைக்கிறது.. ராதிகா நாயகிக்கு உரித்தான அப்பாவித்தனத்தை கொடுத்திருக்கிறார்.
மஞ்சக்கிளி ஆனந்த்ராஜ்.. பெண் வேஷம் போட்டு கரடு முரடு ஆண்டியாக வெளுத்து கட்டி இருக்கிறார். இவரது இடுப்பு அழகை ரசித்து அவரது மடியில் ஆடுகளம் நரேன் செய்யும் சில்மிஷங்கள் ரசிகர்களுக்கு காம நெடி விருந்து. அது போல சேசுவின் மனைவி & மயில்சாமி மற்றொரு வகையான காமெடி.
சொல்லப்போனால் ஆனந்தராஜ் & ஆடுகளம் நரேன் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
எமதர்ம கூட்டமாக கே.எஸ்.ரவிக்குமார, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் கலகலப்பூட்டி உள்ளனர். ரவிக்குமார் அடிக்கும் ஒன் லைன் பஞ்சுகளும் ரசிக்க வைக்கிறது.
மன்சூர் அலிகான் அடக்கி வாசித்திருக்கிறார். மனோபாலா மொட்ட ராஜேந்திரன் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கின்றனர்.
இங்கிலீஷ் திருடனாக கூல் சுரேஷ், சுபாஷினி கண்ணன் பழைய ஜோக் தங்கதுரை, மிட்புசாமி, அர்ஜய் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பயன் படுத்தப்பட்டுள்ளனர்.
கண்ட்ரி நன்றி என தங்கதுரை சொல்லும் போது அதற்கு சந்தானம் கொடுக்கும் அட்டாக் காமெடி வேற லெவல்.
டெக்னீசியன்ஸ்..
Directed by : S KALYAN
Director of Photography : JACOB RATHINARAJ
Music : GHIBRAN
Art : A.R. MOHAN
Editor : M.S.BHARATHI
Action : RAVI STUNT & HARI DINESH
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை சிறப்பு.. ஒய்யாரி ஒய்யாரி என்ற பாடல் நீண்ட காலம் ரசிகர்களால் ரசிக்கப்படும்.
கலை இயக்குனர் மோகனின் கைவண்ணம் அசத்தல்.. 1980களில் மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் பாத்திரங்கள் மின்விசிறி என அனைத்தையும் தேடி கண்டுபிடித்து பயன்படுத்தியிருந்தார்.
ஒளிப்பதிவு ஜேக்கப் ரத்தினராஜ் தன்னுடைய பணியை கவனத்துடன் மேற்கொண்டு ரசிக்கும்படி படமாக்கி கொடுத்திருக்கிறார்.
குலேபகவாலி ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இந்த படத்தையும் கலகலப்பாக கொடுக்க எல்லா வகையிலும் முயற்சித்துள்ளார். எந்த லாஜிக்கும் பார்க்காமல் காமெடியை ரசிக்க விரும்பினால் நிச்சயமாக பில்டப் படத்தை ரசித்து கொண்டாடலாம்.
எமதர்மன் வருவது எந்த உடை அலங்காரமும் இல்லாமல் யதார்த்தமாக வருவதற்கும் ரவிக்குமார் சொல்லும் காரணங்களும் ரசிக்க வைக்கிறது.
கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.. ஒரு பக்கம் சீரியஸ் ஆன படங்கள் ஒரு பக்கம் ஜாலியான படங்கள் என மக்களுக்கு தொடர்ந்து விருந்து கொடுப்பதை நாம் நிச்சயம் பாராட்டலாம்..
படம் முடியும் தருணத்தில் எதிர்பாராத விதமாக இரண்டாம் பார்ட்டுக்கும் லீடு கொடுத்திருப்பது டைரக்டர் டச்..
ஆக.. இந்த 80ஸ் பில்டப்… பில்டப் பின்றாப்ல
80s Buildup movie review and rating in tamil