தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன், பவெல் நவகீதன், மாதவன், விதார்த், லுத்புதீன் மற்றும் பலர்.
இயக்கம் : பிரம்மா
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: மணிகண்டன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : 2டி என்டர்டெயின்மென்ட், க்ரிஸ் பிக்சர்ஸ் சூர்யா
கதைக்களம்…
இது முழுக்க முழுக்க பெண்களுக்கான எடுக்கப்பட்ட ஆண்கள் படம்.
கோமாதா- ஊர்வசி, ராணி அமிர்தகுமாரி – பானுப்ரியா, சுப்புலட்சுமி சரண்யா பொன்வண்ணன்… இவர்கள் பியூசி படிக்கும் காலத்திலேயே குறும்புக்கார தோழிகள்.
ஒரு சூழ்நிலையால் பிரியும் இவர்கள் பின்னர் திருமணத்தால் பிரிந்து எங்கெங்கோ சென்றுவிடுகின்றனர்.
இதில் ஊர்வசியின் மகன் மாதவன் காதலிக்கும் பெண் ஜோதிகா.
ஜோதிகா பெண்களை பற்றி குறும்படம் எடுக்கும்போது, தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கும் பெண்கள் பற்றி தெரிந்துக் கொள்கிறார்.
எனவே, தன் வருங்கால மாமியாரின் ஆசையான பள்ளித் தோழிகளை சேர்த்து வைக்க முற்படுகிறார்.
மேலும் அவர்கள் மட்டும் தனியாக சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஊர்வசி தன் பள்ளித் தோழிகளை பார்த்தாரா? சுற்றுலா சென்றார்களா? எல்லார் வீட்டில் அனுமதி கிடைத்ததா? என்பதே இப்படக்கதை.
கேரக்டர்கள்…
ஜோதிகா தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். தன் மாமியாரை தோழியாக பாவித்து அவருக்காக எல்லாம் செய்வது ரசிக்க வைக்கிறது.
ஆனால் அந்த பழைய துறுதுறு இப்போதைக்கு ஜோதிகாவிடம் இல்லை.
மாமியாரையும் அவரின் தோழிகளையும் பேர் சொல்லி அழைப்பது ரொம்ப ஓவர். அதுவும் ராணி என்ற இரண்டு எழுத்து பெயரை கூட ரா என்று அழைப்பது டூமச்.
ஊர்வசி, சரண்யா, பானுப்ரியா மூவரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப சூழ்நிலையறிந்து அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கிறார்கள்.
பெண்கள் படம் என்பதால் நாசர், லிவிங்ஸ்டன், மாதவன், பவல், அம்புலி கோகுல் கேரக்டர்கள் வலுவில்லை. ஆனால் தம் வீட்டுப் பெண்களையே மதிக்காத சில கேரக்டர்கள் இவர்களால் வெளிச்சத்து வருகிறது.
விதார்த் மற்றும் லுத்புதீன் ஒரு காட்சியில் வந்து செல்கிறார்கள்.
பள்ளித் தோழிகளாக நடித்த அந்த 3 பெண்களும் நல்ல தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது. படத்தில் ட்விஸ்ட் காட்சிகள் ஏதாவது வைத்திருந்தால் பின்னணி இசையிலும் பின்னியிருப்பார் இவர்.
மணிகண்டனின் ஒளிப்பதிவு வட இந்தியா பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறது. சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பில் இன்னும் சில காட்சிகளை கத்திரி போட்டியிருக்கலாம்.
இயக்கம் பற்றிய அலசல்…
ப்ளாஷ்பேக் காட்சிகள் நன்றாக உள்ளது. ஆனால் அதை இடை இடையில் சொருகாமல் ஒரே நேரத்தில் சொல்லியிருக்கலாம்.
இல்லத்தரசிகளாக வாழும் பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. வெளியே செல்லும் ஆண்களை விட அதிகமான வேலைகளை ஓய்வின்றி வாழ்க்கை முழுவதும் செய்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
அதற்காக இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
குற்றம் கடிதல் என்ற யதார்த்தமான படத்தை கொடுத்த பிரம்மா இதில் சற்று சறுக்கியிருக்கிறார்.
இதில் காட்சிகள் உயிரோட்டமாக இல்லை. சொல்லிவைத்தாற் போல் காட்சிகள் நகர்கின்றன.
மேலும் 50 வயதை கடந்த பெண்கள் எல்லாம் பேஸ்புக் பக்கத்தில் இருக்கிறார்களா என்ன? அதுவும் குடும்பமே கதி என இருக்கும் பானுப்ரியா பேஸ்புக் பக்கத்தில் இருப்பாரா? என்று எண்ணவும் தோன்றுகிறது.
சொல்ல வேண்டிய விஷயத்தை இன்னும் யதார்த்தம் மற்றும் ட்விஸ்ட் வைத்து சொல்லியிருந்தால் இளைஞர்களும் ரசித்திருப்பார்கள்.
மகளிர் மட்டும்.. பெண்களை மதிக்காத ஆண்கள் பார்க்கனும்