தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னோட்டம்…
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை `800′ என்ற பெயரில் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கனிமொழி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
முதலில் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருந்தார். அதுபோல நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு வலுத்தது.
ஈழத்தில் நடைபெற்ற போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் (விடுதலைப்புலிகள்) போராளிகளை விமர்சித்து பேசியவர் முத்தையா முரளிதரன். எனவே, முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே விலகினார்.
இந்த 800 படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பட நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.
கதைக்களம்..
நடிகர்கள் நாசரும் ஹரிகிருஷ்ணனும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முத்தையா முரளிதரன் படைத்த சாதனை சந்திந்த சோதனை ஆகியவை குறித்து உரையாடி கொண்டிருப்பதாக கதை நகர்கிறது.
பெரும்பாலும் ஒரு விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் போட்டிகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் ஏழ்மை வறுமை ஆகியவை தான் எதிரியாக உருவெடுத்து இருந்திருக்கும்.
ஆனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை பொருத்தவரை அவர் வாழ்ந்த இலங்கையும் அதில் அவ்வப்போது நடைபெறும் போர்க்களமும் அவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்தன.
மேட்ச் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென எழும் வெடிச்சத்தம் துப்பாக்கிச் சூடு மற்றும் சிங்களர்கள் போராட்டம் விடுதலைப் புலிகளின் போராட்டம் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.
சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எதிர்கொண்ட சவால்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி அவர் படைத்த சாதனைகள் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இலங்கையை தாண்டி நடைபெற்ற போட்டிகளுக்காக அவர் இந்தியா வந்தது ஆஸ்திரேலியா சென்றது என அனைத்தையும் நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.
அவரின் இல்லற வாழ்க்கை.. சந்தித்த பிரச்சனைகள்.. வளைந்த முழங்கை.. பங்கேற்ற போட்டிகள்.. என அனைத்தையும் சுவாரசியமாக கொடுத்துள்ளனர்.
கேரக்டர்கள்…
கிரிக்கெட் போட்டி வாய்ப்புகள் அமைந்தாலும் அதில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது உடல் மொழியை மாற்றி கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் நாயகன் மதுர் மிட்டல்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நரேன் தோன்றியிருக்கிறார். இலங்கைத் தமிழ் கலந்த பாஷையை நரேன் பேசும்போது பிரபாகரன் பேசும் உணர்வை தருகிறது.
தலைவர் பிரபாகரனை மதுர்மிட்டல் சந்திக்கும்போது ‘ஆயுதத்தை எதிர்க்க ஆயுதம் ஏந்துவது சரியா?’ என கேட்கிறார். அந்த துணிச்சல் பாராட்டுக்குரியது.
அந்த நேரத்தில்.. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது எப்படி சரியாக இருக்கும் ? என பிரபாகரன் கேட்பது சாட்டையடி.
ஒரு தமிழனாக வளர்ந்து இலங்கை நாட்டுக்காக அவர் விளையாடும்போது இரு இனத்திற்காகவும் அவர் பேசும் வசனங்கள் அவரின் நடுநிலையை காட்டுகிறது.
மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
முத்தையா முரளிதரனின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, குட்டி பையன் முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, கிரிக்கெட் கோச்சாக சரத் லோகிதஸ்வா, விடுதலைப்புலி பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக காஸ்ட்யூமர் சத்யா என அனைத்தும் கச்சிதம். கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் கேரக்டர் தேர்விலும் இயக்குனர் அக்கறை காட்டி இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
டெக்னீசியன்கள்…
ஜிப்ரான் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
1980 – 90களில் அமைந்திருந்த கிரிக்கெட் ஸ்டேடியம்.. அப்போது பயன்படுத்திய கார்கள்.. உடைகள், கிரிக்கெட் யூனிபார்ம் என அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர்.
முக்கியமாக முத்தையா முரளிதரன் பங்கேற்ற போட்டிகள் நடைபெறும் இடங்கள் நடைபெற்ற சம்பவங்கள் என அனைத்தையும் திரையில் வார்த்தைகளாக காட்டுவதால் படத்தை எளிதில் புரிந்து கொண்டு அதனுடன் பயணிக்க முடிகிறது.
பின்னணி இசை ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறது. ஒளிப்பதிவு காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரனின் பௌலிங் ஆக்ஷன் சர்ச்சை, போட்டிக்கு வந்த தடை, பின்னர் மீண்டு வந்தது ஆகிய சம்பவங்களை அழகாக படமாக்கி இருக்கின்றனர்.
பல சர்ச்சைகள் பல தடைகளை தாண்டி சாதனை படைத்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும்போது எவருடைய மனதும் புண்படாமல் சர்ச்சையை உருவாக்காமல் ஸ்ரீபதி இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஆக 800 படம்… முத்தையா முரளிதரனின் சரித்திர கதை
800 movie review and rating in tamil