தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி, சரத்லோகிஸ்த்வா மற்றும் பலர்.
இயக்கம் : பன்னீர்செல்வம்
இசை : இமான்
ஒளிப்பதிவு: சக்திவேல்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஏம்எம். ரத்னம்
கதைக்களம்…
வாடி வாசல் ஜல்லிக்கட்டு காளை என்றாலும் கருப்பன் விஜய்சேதுபதியை பார்த்தால் மிரளும்.
ஒருமுறை தன் ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் தன் தங்கையை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் பசுபதி.
அதன்படி காளையை விஜய்சேதுபதி அடக்க, அவருக்கு கழுத்தை நீட்டுகிறார் தன்யா.
பசுபதியின் மச்சான் பாபிசிம்ஹாவுக்கோ தன்யா மீது கொள்ளை ஆசை.
எனவே விஜய்சேதுபதியை அவளுடன் இருந்து பிரித்து மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார்.
அதன்பின்னர் அவர் என்ன செய்தார்? தான்யாவை அடைந்தாரா? விஜய்சேதுபதியை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
எந்த கேரக்டரா இருந்தா என்ன? கொடுங்கையா என்று கேட்டு வாங்கி அதில் தன்னை பேச வைப்பவர் விஜய்சேதுபதி.
அறிமுக காட்சியிலேயே ஒரு தாளத்திற்கு இவர் போடும் குத்தாட்டமே இவரது கிராமத்து உடல் மொழியை சொல்லிவிடுகிறது.
எம்ஜிஆர் பாடல்களுக்கு ஆடுவதாகட்டும், ஆலுமா டோலுமா ஆடிக்கொண்டே சண்டையிடுவதாகட்டும், மனைவியிடம் அன்பை பொழிவதாகட்டும், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதாகட்டும் கருப்பனுக்கு கண் திருஷ்டி படும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.
அழகான கிராமத்து பெண்ணாக வசீகரிக்கிறார் தான்யா. கணவனை கண்டிப்பதிலும், அரவணைப்பதிலும் மனைவி ஒரு மாணிக்கமாக வாழ்ந்திருக்கிறார்.
கூட இருந்துக் கொண்டே குழிபறிக்கும் வில்லனாக பாபிசிம்ஹா. கிராமத்து வில்லனாக ஜொலிக்கிறார். ஆனால் கதையில் ட்விஸ்ட் வைத்திருந்தால் இவரது கேரக்டர் பேசப்பட்டி இருக்கும்.
விஜய்சேதுபதியின் தாய்மாமனாக சிங்கம் புலி. நேத்து ராத்திரி அம்மா பாடலுக்கு ஆடும் நடனம் ரசிக்கவைக்கிறது. செண்டிமென்ட்லும் கலக்கியிருக்கிறார்.
பசுபதி மற்றும் சரத் லோகிஸ்தவா கேரக்டர்களில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜல்லிக்கட்டு காட்சி கிராபிக்ஸ் என்றாலும் அதை ரசிக்கும்படி அருமையாக படமாக்கியுள்ளனர். ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
இமான் இசையில் பின்னணி இசை பேசப்படும். பாடல்கள் கிராமத்து சூழலில் இருந்தாலும் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங் என்று தோன்றுகிறது.
சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரையும் அந்த மக்களும் படத்திற்கு பலம்.
ரேனிகுண்டாவில் கலக்கிய இயக்குனர் பன்னீர் செல்வம் இதில் இன்னும் மிரட்டியிருக்கலாம்.
விவசாயம் பற்றிய காட்சிகள் ஆரம்பிக்கும்போது எதோ சொல்ல வருகிறார்கள் என்றால் அதை திடீரென முடித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
வழக்கமான குடும்பத்து கதை ரசிக்கும்படி இருந்தாலும் ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
கருப்பன்… எதிர்பார்ப்பு இல்லாமல் ரசிக்கலாம்