தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், சிவகார்த்திகேயன், இளவரசு மற்றும் பலர்
இயக்கம் – அருண் ராஜா காமராஜ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
இசை – திபு நினான் தாமஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நேர்மையான மனிதர் சத்யராஜ் (முருகேசன்). கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆர்வம் இவருக்கு.
இவரைப் பார்த்து வளரும் மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) அப்பாவை போல் கிரிக்கெட் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்தியளவில் சாதித்து அப்பாவை பெருமைப்படுத்த நினைக்கிறார்.
இவருக்கு சில ஆண் நண்பர்கள் உதவ, நன்றாக விளையாடி சாதிக்க புறப்படுகிறார்.
ஆனால் அம்மாவுக்கோ கிரிக்கெட் மீது துளியளவு கூட ஆர்வம் இல்லை.
இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி இந்திய கிரிக்கெட் பயிற்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பயிற்சி தோல்வியில் முடிகிறது.
மற்றொரு புறம் தண்ணீர் இல்லாத பிரச்சினையால் விவசாயமும் பாதிக்கிறது. இதனால் விவசாய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார் சத்யராஜ்.
வீட்டை ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சத்யராஜ்.
மகளின் கனவும் வீணாகியது. விவசாயமும் பாதிக்கிறது. அதன்பின்னர் தந்தையும் மகளும் இணைந்து என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கௌசல்யா முருகேசன் என்ற கேரக்டரை தன் உணர்வில் கலந்துக் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை கேரக்டர்கள் வரிசையில் இந்த படம் இவரது நடிப்புக்காகவே நிச்சயம் பேசப்படும். தமிழ் சினிமாவுக்கு ஒரு தமிழச்சியே சிறந்த நடிகையாக கிடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கிரிக்கெட் ஆர்வம், விளையாட்டுத்தனம், பிடிவாதம், தோல்வி, வெற்றி என ஒவ்வொரு காட்சியிலும் பந்து போடாமலே சிக்ஸர் அடித்துள்ளார். அதற்கு ஏற்ப பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது.
இவருடன் சத்யராஜ்ம் தன் பங்குக்கு அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். விவசாயி முருகேசனாக அந்த கேரக்டரை முறுக்கேற்றியிருக்கிறார்.
சத்யராஜின் மனைவி, அவரின் நண்பர் இளவரசன், ஹீரோ தர்ஷன், அவரின் நண்பர்கள் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என அனைவரும் மனதில் நிறைகின்றனர்.
கௌசிக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கும் அத்தனை அண்ணன்மார்களும் அருமை.
சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் என்றாலும் அவரின் காட்சிகளும் வசனங்களும் படத்தை வெற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒரு நிஜ கிரிக்கெட் போட்டியை திரையில் காட்டி நம்மை சீட்டின் நுனிக்கே வரவைத்துவிட்டார் அருண்ராஜா காமராஜ். ஒவ்வொரு பந்தும் நம் கண்களை விட்டு அகலாது நிற்கிறது.
படத்தின் வசனங்களே செஞ்சுரி அடிக்கிறது. உதாரணத்திற்கு
லஞ்சம் கொடுத்தவருக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டு அவன் இவன் என சத்யராஜ் பேசுவது செம.
11 பேர் சேர்ந்து நம்ம கிரிக்கெட் டீமை காப்பாத்திட்டோம். ஆனால் விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தியர்கள் அதை காப்பாத்தல என ஐஸ்வர்யா பேசும்போது குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.
ஜெயிச்சவங்க சொல்றதத்தான் இந்த நாடு கேட்கும். நீ எது பேசினாலும் ஜெயிச்சிட்டு வந்து பேசு.
உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல. உன்ன… என்ற டயலாக்குகள் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
விவசாயம் கிரிக்கெட் என இரண்டையும் பேட்டிங், பீல்டிங் போல கலந்து கொடுத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
திபு நினான் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள… கண்ணே என் கண்ணழகே… சவால் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கிரிக்கெட் பாடல் உத்வேகத்தை கொடுக்கும்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன் இருவரும் அருமையான பணியை செய்துள்ளனர்.
க்ளைமாக்ஸில் வரும் அந்த கிரிக்கெட் மேட்ச் பைனல் காட்சிகளும் அந்த மேக்கிங்கும் அருண்ராஜா அவர்கள் அருமைராஜா ஆக மாறியிருக்கிறார்.
மொத்தத்தில் கனா… விவசாய விக்கெட்!