தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்.. ஈசிஆர் & வட சென்னை பட கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.
கதைக்களம்..
சென்னை காவேரி நகர் பகுதியில் தன் அம்மா ராதிகாவுடன் வசிக்கிறார் ஜிவி பிரகாஷ். இவரது நண்பர் நந்தன் ராம். இவர்களின் தொழிலே பிக்பாக்கெட் தான். அடுத்தவன் உழைப்பை திருடும் திருட்டு கும்பல் இது. மேலும் போதை பொருளை கைமாற்றி விடும் பழக்கமும் உள்ளது.
இதனிடையில் இவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும் போலீசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிடுகிறது. மற்றொரு நண்பராக வருகிறார் பசங்க புகழ் பாண்டி.
ஒரு சிலரின் திருட்டு பழக்கத்தால் இந்த ஏரியா பசங்களுக்கு எங்கும் சென்றாலும் வேலை தர மறுக்கின்றனர்.
இந்த நிலையில், ஒரு பிரச்சினையில் நந்தன்ராமை போட்டுத் தள்ளுகிறது மற்றொரு கேங்க் கானா முத்து. அந்த ஆத்திரத்தில் அந்த கானா கேங்க் கலியனை கொன்று விடுகிறார் பாண்டி. இதனால் சிறைக்குச் செல்கிறார் பாண்டி.
தன் 2 நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜிவி பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்.
அதன்பிறகு என்ன செய்தார்? நேர்மையாக உழைத்து கொடுத்தாரா? மறுபடியும் திருட ஆரம்பித்தாரா? நண்பனை ஜெயிலில் இருந்து காப்பாற்றினாரா? நண்பர்களுக்காக பழி தீர்த்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
நாச்சியார் படத்திற்கு பிறகு அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை பாலா, வசந்தபாலன் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களே கொண்டு வருகின்றனர். எனவே ஜிவி பிரகாஷ் சரியான இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும்.
வட சென்னை பாஷையில் வெளுத்து கட்டியிருக்கிறார். நண்பர்களுக்காக போலீசிடம் டீல் பேசுவது முதல் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது என பிரித்து மேய்ந்திருக்கிறார். பேச்சுலர் படத்தை தொடர்ந்து ஜெயில் படத்திலும் முத்த கமல்ஹாசனாக மாறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.
ராதிகா எவ்வளவு பெரிய நடிகை. அவருக்கு ஏன்? பெரிதாக காட்சிகள் இல்லை என்பது தெரியவில்லை. சமீபகாலமாக ராதிகாவின் படங்களும் இப்படிதான் உள்ளது. கொடுத்த கேரக்டரில் கச்சிதம் அவ்வளவுதான்.
சேரி பகுதியில் பலரை கெட்டவர்களாக சித்தரித்தாலும் ராதிகா, நந்தன் ராம் அக்கா கேரக்டர்கள் நிச்சயம் நல்லவர்களை அடையாளம் காட்டும்.
நாயகனின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் அருமையான தேர்வு. எங்கும் மிகைப்படுத்தப்படாத நட்பு & நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஜெயில் நாயகியாக அபர்ணதி… அபாரம். அருமை… என சொல்லிக் கொண்டே போகலாம். ப்பா…. சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.
காத்தோடு காத்தானேன் பாடலில் ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணதி ரொமான்ஸ் வேற லெவல். உணர்ச்சியின் உச்சக்கட்டம் எனலாம்.
பல படங்களில் காமெடி கேரக்டரில் கலக்கிய வில்லன் ரவிமரியா இதில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் மிரட்டலை கொடுத்திருக்கலாம்.
பாண்டிக்கு ஜோடியாக வந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்ணாக சரண்யா ரவிச்சந்திரன். இவருக்கு வசனங்கள் குறைவு. ஆனால் கண்களில் பேசியிருக்கிறார். காதல்.. ஏக்கம்.. தவிப்பு… பிரிவு என உணர்ந்து நடித்திருக்கிறார்.
புலி பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இந்த படத்தில் வருகிறார் அவ்வளவுதான்.
டெக்னீஷியன்கள்..
படத்தின் இசை ஜிவி. பிரகாஷ்தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சிறப்பு. காத்தாடு காத்தானேன் பாடல் ரொமான்டிக் வகை என்றால்.. முட்டை பரோட்டா முத்தம் தரட்டா பாடல் ஆட்டம் போட வைக்கும்.
நடிகர் தனுஷிடம் இருந்து இப்படி ஒரு மெலோடி பாடலா? என வியக்கும் வகையில் உள்ளது காத்தோடு காத்தானேன் பாடல்.. ஆனால் முதல் பாதியில் இத்தனை பாடல்கள் தேவையா? என்பதே கேள்விக்குறி.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கண்களுக்கு நல்லதொரு படைப்பு. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் பெரிதாக சொல்லும்படி இல்லை.
வசந்தபாலன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகர்கள்.. அருமையான காட்சியமைப்பு என சரியாக செய்துள்ளார். ஆனால் திரைக்கதை என்னவோ வழக்கமான வடசென்னை கதைதான். அந்த பகுதி மக்கள் லேப்டாப் திருடுவதும், கஞ்சா விற்பதும் என பல படங்களில் பார்த்த காட்சிகளாகவே உள்ளது.
புலம் பெயர்ந்து வரும் குடிவாசிகளின் வலியை சொல்லாமல் அவர்களின் நிலை இன்றும் இப்படித்தான் என சொல்லியுள்ளார் வசந்தபாலன். வடசென்னையும் திருந்தவில்லை.. காவல்துறையும் திருந்தவில்லை. இதற்கு தீர்வுதான் உண்டோ?
ஆக.. ஜெயில்… திருடன் போலீஸ் ஆட்டம்…
Jail movie review and rating in tamil