திருடன் போலீஸ் ஆட்டம்..; ஜெயில் விமர்சனம் 3/5

திருடன் போலீஸ் ஆட்டம்..; ஜெயில் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. ஈசிஆர் & வட சென்னை பட கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.

கதைக்களம்..

சென்னை காவேரி நகர் பகுதியில் தன் அம்மா ராதிகாவுடன் வசிக்கிறார் ஜிவி பிரகாஷ். இவரது நண்பர் நந்தன் ராம். இவர்களின் தொழிலே பிக்பாக்கெட் தான். அடுத்தவன் உழைப்பை திருடும் திருட்டு கும்பல் இது. மேலும் போதை பொருளை கைமாற்றி விடும் பழக்கமும் உள்ளது.

இதனிடையில் இவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும் போலீசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிடுகிறது. மற்றொரு நண்பராக வருகிறார் பசங்க புகழ் பாண்டி.

ஒரு சிலரின் திருட்டு பழக்கத்தால் இந்த ஏரியா பசங்களுக்கு எங்கும் சென்றாலும் வேலை தர மறுக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு பிரச்சினையில் நந்தன்ராமை போட்டுத் தள்ளுகிறது மற்றொரு கேங்க் கானா முத்து. அந்த ஆத்திரத்தில் அந்த கானா கேங்க் கலியனை கொன்று விடுகிறார் பாண்டி. இதனால் சிறைக்குச் செல்கிறார் பாண்டி.

தன் 2 நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜிவி பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்.

அதன்பிறகு என்ன செய்தார்? நேர்மையாக உழைத்து கொடுத்தாரா? மறுபடியும் திருட ஆரம்பித்தாரா? நண்பனை ஜெயிலில் இருந்து காப்பாற்றினாரா? நண்பர்களுக்காக பழி தீர்த்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நாச்சியார் படத்திற்கு பிறகு அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை பாலா, வசந்தபாலன் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களே கொண்டு வருகின்றனர். எனவே ஜிவி பிரகாஷ் சரியான இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும்.

வட சென்னை பாஷையில் வெளுத்து கட்டியிருக்கிறார். நண்பர்களுக்காக போலீசிடம் டீல் பேசுவது முதல் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது என பிரித்து மேய்ந்திருக்கிறார். பேச்சுலர் படத்தை தொடர்ந்து ஜெயில் படத்திலும் முத்த கமல்ஹாசனாக மாறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.

ராதிகா எவ்வளவு பெரிய நடிகை. அவருக்கு ஏன்? பெரிதாக காட்சிகள் இல்லை என்பது தெரியவில்லை. சமீபகாலமாக ராதிகாவின் படங்களும் இப்படிதான் உள்ளது. கொடுத்த கேரக்டரில் கச்சிதம் அவ்வளவுதான்.

சேரி பகுதியில் பலரை கெட்டவர்களாக சித்தரித்தாலும் ராதிகா, நந்தன் ராம் அக்கா கேரக்டர்கள் நிச்சயம் நல்லவர்களை அடையாளம் காட்டும்.

நாயகனின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் அருமையான தேர்வு. எங்கும் மிகைப்படுத்தப்படாத நட்பு & நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜெயில் நாயகியாக அபர்ணதி… அபாரம். அருமை… என சொல்லிக் கொண்டே போகலாம். ப்பா…. சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

காத்தோடு காத்தானேன் பாடலில் ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணதி ரொமான்ஸ் வேற லெவல். உணர்ச்சியின் உச்சக்கட்டம் எனலாம்.

பல படங்களில் காமெடி கேரக்டரில் கலக்கிய வில்லன் ரவிமரியா இதில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் மிரட்டலை கொடுத்திருக்கலாம்.

பாண்டிக்கு ஜோடியாக வந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்ணாக சரண்யா ரவிச்சந்திரன். இவருக்கு வசனங்கள் குறைவு. ஆனால் கண்களில் பேசியிருக்கிறார். காதல்.. ஏக்கம்.. தவிப்பு… பிரிவு என உணர்ந்து நடித்திருக்கிறார்.

புலி பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இந்த படத்தில் வருகிறார் அவ்வளவுதான்.

டெக்னீஷியன்கள்..

படத்தின் இசை ஜிவி. பிரகாஷ்தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சிறப்பு. காத்தாடு காத்தானேன் பாடல் ரொமான்டிக் வகை என்றால்.. முட்டை பரோட்டா முத்தம் தரட்டா பாடல் ஆட்டம் போட வைக்கும்.

நடிகர் தனுஷிடம் இருந்து இப்படி ஒரு மெலோடி பாடலா? என வியக்கும் வகையில் உள்ளது காத்தோடு காத்தானேன் பாடல்.. ஆனால் முதல் பாதியில் இத்தனை பாடல்கள் தேவையா? என்பதே கேள்விக்குறி.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கண்களுக்கு நல்லதொரு படைப்பு. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் பெரிதாக சொல்லும்படி இல்லை.

வசந்தபாலன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகர்கள்.. அருமையான காட்சியமைப்பு என சரியாக செய்துள்ளார். ஆனால் திரைக்கதை என்னவோ வழக்கமான வடசென்னை கதைதான். அந்த பகுதி மக்கள் லேப்டாப் திருடுவதும், கஞ்சா விற்பதும் என பல படங்களில் பார்த்த காட்சிகளாகவே உள்ளது.

புலம் பெயர்ந்து வரும் குடிவாசிகளின் வலியை சொல்லாமல் அவர்களின் நிலை இன்றும் இப்படித்தான் என சொல்லியுள்ளார் வசந்தபாலன். வடசென்னையும் திருந்தவில்லை.. காவல்துறையும் திருந்தவில்லை. இதற்கு தீர்வுதான் உண்டோ?

ஆக.. ஜெயில்… திருடன் போலீஸ் ஆட்டம்…

Jail movie review and rating in tamil

ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படம் விவரம்.

ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்துள்ளார் பகவதி பாலா.

புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி என பலரும் நடித்துள்ளனர்.

தேவா இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் பாடல்களை எழுதி உள்ளனர். ராம் நாத் படத்தொகுப்பையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

கதைக்களம்.. நாயகன் ராகுல் மற்றும் செல்வா இருவரும் நண்பர்கள். பலரை ஏமாற்றி பணம் பறிப்பதை இவர்களின் வேலை.

ஒரு கட்டத்தில் பக்கத்து ஊருக்கு சென்று மற்றொரு நண்பன் கொட்டாச்சி உதவியுடன் போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிக்கின்றனர்.

அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருக்கும் சுந்தர்ராஜன். இம்முறை தேர்தலில் நிற்காமல் தன் சகோதரரான வையாபுரியை நிறுத்த முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வையாபுரியை தன் சூழ்ச்சியால் வென்று எம் எல் ஏ-வாகி விடுகிறார் கராத்தே ராஜா.

ஆனால் ஒரு கட்டத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். எம் எல் ஏ. அத்துடன் அந்த பிணத்தை காணவில்லை.

எம்எல்ஏவை கொலை செய்தது யார்.? பிணம் என்னாச்சு? ஹீரோ என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

நாயகன் ராகுல் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுக்க வேண்டும். ஆக்‌ஷன் காட்சியில் அசத்தல். நாயகியை வெறுக்கும் காட்சிகளில் இன்னும் முகபாவனைகள் போதவில்லை.

ரவுடி போல நாயகி அனிதா. நல்ல உடல்மொழி.. உச்சரிப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் ஓவராக தெரிகிறது. இவரும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருசில காட்சிகள் மட்டுமே வருகிறார் நளினி. வில்லனாக கராத்தே ராஜா.

வையாபுரி மற்றும் செளந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.

சில இடங்களில் காமெடி காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் பகவதி பாலா. அத்துடன் சமுதாய கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

தேவாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ”லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்” பாடல் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.

இயக்குனர் பகவதி பாலாவே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

Aal Illatha Oorla Annan Than Mla movie review and rating in Tamil

சீரழிந்த (அழகிய) சித்திரம்.; சித்திரைச் செவ்வானம் 3.25/5

சீரழிந்த (அழகிய) சித்திரம்.; சித்திரைச் செவ்வானம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… அப்பா மகள் பாசத்தை சொல்லும் மற்றொரு சித்திரம். பிரபல சண்டை இயக்குனர் சில்வா இயக்கியுள்ள முதல்படம்.

கதைக்களம்..

விவசாயி சமுத்திரக்கனி. தன் மனைவி வித்யா பிரதீப். இவர்களது மகள் மானஸ்வி ஆகியோருடன் செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள் மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி மரணமடைகிறார் வித்யா.

தங்கள் கிராமத்தில் மருத்துவமனையோ மருத்துவரோ இருந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும். இனி தன் கிராமத்தில் எந்த உயிரும் இதுபோன்ற காரணத்தால் மரணிக்கக்கூடாது என நினைத்து தன் மகளை டாக்டராக்க படிக்க வைக்கிறார்.

குட்டிப் பெண் மானஸ்வி வளர்ந்து பூஜா கண்ணனாக மருத்துவம் படிக்கிறார்.

ஒரு பிரச்சினையால் பூஜாவை பழிவாங்க நினைக்கிறார்கள் அவருடன் படிக்கும் மாணவர்கள். எனவே பூஜா குளிக்கும் வீடியோவை மறைமுகமாக எடுத்து அதை இணையத்தில் பகிர்கின்றனர். இவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள்.

இதனால் பூஜா மாயமாகிறார். தன் மகளை தேடி அலைகிறார் சமுத்திரக்கனி. அந்த வீடியோவை எடுத்தவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்தாரா? என்ன செய்தார்? மகள் எங்கு போனார்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

ஒரே மாதிரியான கேரக்டர்களை செய்யாமல் அடிக்கடி கதைக்களத்தை மாற்றும் சமுத்திரக்கனியை நிச்சயம் பாராட்டலாம். வயதான கேரக்டரை அருமையான தன் உடல்மொழியால் செய்திருக்கிறார் கனி.

மகளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வரும் காட்சிகளில் நிச்சயம் நம்மையே அழவைக்கிறார் சமுத்திரக்கனி.

அதுபோல் அம்மா இறந்துவிட்ட காட்சியில் மானஸ்வி அழும் காட்சியில் நம் கண்களும் குளமாகும். அந்த காட்சியில் கிளிசரின் இல்லாமலே அவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் குட்டி நட்சத்திரம் மானஸ்வி.

நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா தான் இப்பட நாயகி. தன் முதல்படத்திலேயே அருமையான நடிகை என பாராட்டுக்களை பெறுவார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை தவிர்த்திருக்கலாம்.

அழகான அன்பான அம்மாவாக வித்யா பிரதீப். பூஜாவை மிரட்டும் 3 இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தாரின் நடிப்பும் சிறப்பு. அரசியல்வாதி சுப்ரமணிய சிவா நடிப்பு மிரட்டல்.

போலீசாக வரும் ரீமா கல்லிங்கள் அசத்தல். பூஜா வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் இவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பு. அதுபோல் மற்றொரு போலீஸ் பாண்டியனும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்..

சாம் சி எஸ் பின்னனி இசை மிரட்டல். அப்பா சென்டிமெண்ட்டில் வைரமுத்து வரிகளில் ஒரு அருமையான பாடலை கொடுத்துள்ளார். இனி தந்தையர் தினங்களில் அந்த பாடல் அடிக்கடி ஒலிக்க கேட்கலாம்.

அழகான காட்சிகளை கொடுத்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். இரவு காட்சிகளும் ரசிக்க தக்க வகையில் உள்ளது.

படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை வைக்காமல் அழகான குடும்ப படத்தை கொடுத்துள்ளார் ஸ்டன்ட் சில்வா. ஒரு அறிமுக இயக்குனராக மாஸ்டர் சில்வா வெற்றிப் பெற்றுள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதி தயாரித்துள்ளார்.

க்ளைமாக்ஸ் ஏற்கும்படியாக இல்லை. தவறே செய்யாத சமுத்திரக்கனி அந்த முடிவை எடுப்பது ஏன்? என்பதுதான் இயக்குனரிடம் பெரிய கேள்வி.

ஆக இந்த சித்திரைச் செவ்வானம்.. சீரழிந்த (அழகிய) சித்திரம்.

Chithirai Sevvanam movie review and rating in tamil

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன் : லிவிங் டுகெதர் கலாச்சார உறவால் ஏற்படும் சிக்கல்கள்..

கதைக்களம்..

கோயம்புத்தூர் வாசி நாயகன் டார்லிங் (ஜிவி பிரகாஷ்). இவர் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் தான் நாயகி திவ்யபாரதியும் பணிபுரிகிறார்.

எதை பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக சுற்றித் திரியும் கேரக்டர் ஜிவி. ஒரு கட்டத்தில் தன் நண்பனின் உதவியால் ஒரு ப்ளாட்டில் நாயகி (சுபு) உடன் தங்கும் சூழ்நிலை உருவாகிறது.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் நெருக்கமாகி விடுகின்றனர். இவர்களின் நெருக்கத்தால் திவ்யா கர்ப்பமாகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத ஜிவி. கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார்.

ஆனால் தன் கருவில் வளரும் இரண்டு உயிர்களை கொல்வது பாவம் என மறுக்கிறார் திவ்யா.

இந்த பிரச்சினை வக்கீலாக இருக்கும் திவ்யாவின் அக்கா கணவர் வரை செல்ல, ஜிவி மேல் வழக்கு போடுகிறார்கள். இதனால் ஜிவியின் குடும்பம் பல பிரச்சினைகளை சந்திக்கிறது.

அதன்பின் கரு கலைக்கப்பட்டதா? திருமணம் செய்தார்களா? இருவரின் குடும்பமும் என்னானது என்பதே படத்தின் மீதிக் கதை.. க்ளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று.

கேரக்டர்கள்..

டார்லிங் ஜிவி பிரகாஷ்க்கு இந்த கேரக்டர் செம பொருத்தம். பெண்ணை ரூட் போடுவது.. காதலிக்காமல் அவள் பின்னால் சுற்றுவது… என விளையாடியிருக்கிறார்.

படத்தில் ஹீரோவுக்கு பெரிதாக வசனங்களே இல்லாத நிலையிலும் படத்தை ஒத்துக் கொண்டுள்ளார் என்பதே பெரிய விஷயம்தான். அதில் முடிந்தவரை தன் முகபாவனைகளில் சொல்லிவிட்டார் ஜிவி.

நல்ல உடற்கட்டுடன் நாயகி திவ்யா பாரதி. இவரது இன்ட்ரோ காட்சியிலேயே பின்னழகு பின்னுகிறது. இவரது நடிப்பை பாரத்தால் யாரும் முதல் படம் என சொல்லமாட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் லிவிங் டுகெதர் உறவில் வாழும் ஆண்களுக்கு ஆப்பு அடித்துள்ளார் திவ்யபாரதி.

ஜிவி பிரகாஷ் உடன் வரும் நண்பர்கள் செய்யும் சிறுசிறு சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. பகவதி பெருமாள், முனிஷ்காந்த் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதுபோல் திவ்யபாரதி மற்றும் ஜிவி. பிரகாஷின் குடும்பத்தார் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு கருக்கலைப்பு வழக்கு என்று வந்தால் எந்த மனநிலையில் இருப்பார்களோ? அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளனர்.

மிஷ்கின் வரவு படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட். ஓரிரு நிமிடமே என்றாலும் மனிதர் ரசிக்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்..

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காட்சிகளை ஜஸ்ட் ஓகே என்று சொல்லிட முடியாது. அப்படியொரு நேர்த்தியாக வண்ணங்களாய் கொடுத்துள்ளார்.

சவுண்ட் டிசைனர்களை (SYNC CINEMA) கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதுபோல் ஆடியோகிராபி டைரக்டர் ராஜகிருஷ்ணனை வாழ்த்தவேண்டும். உடைந்த பாட்டில் முதல் பறவைகள் சத்தம் என அனைத்தையும் லைவ்வாக கொடுத்துள்ளனர்.

சித்து குமார் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கும். பச்சிகளாம் மற்றும் கவன் பாடல்கள் ரிப்பீட் செய்து கேட்கலாம்.

படத்தின் பெரிய குறையே எடிட்டர்தான். ஷான் லோகேஷ் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டு தேனீக்கள் காட்சி.. மற்றும் கோர்ட் காட்சிகளை நிறையவே வெட்டியிருந்தால் படம் இன்னும் நிறைவான அனுபவத்தை கொடுத்திருக்கும்.

தன் அறிமுகப்படத்திலேயே சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் சதீஷ் செல்வகுமார். இதுபோன்ற கதைகளை சில ஹீரோக்களே செய்யத் தயங்குவார்கள். அதை சிறப்பாக கையாண்டு நாயகியை சிறப்பித்துள்ளார்.

ஐடி கலாச்சாரத்தில் மாறியிருக்கும் நவீன சமூகத்தை பேச்சுலர் என்ற பார்வையில் கொஞ்சம் ரிப்பேர் செய்துள்ளார். அதேசமயம் எங்குமே ஆபாசமோ வன்முறையோ இல்லாத அளவிற்கு தரமாக கொடுத்துள்ளார்.

ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ் சார்பாக டில்லிபாபு தயாரித்துள்ளார். சக்திவேல் பிலிம் பாக்டரி நிறுவனம் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

ஆக.. இந்த பேச்சுலர்.. லிவிங் டுகெதர் உறவில் வாழ்பவர்களுக்கு பாடம்.

Bachelor movie review and rating in Tamil

மலை(க்கும்)யாள பிரம்மாண்டம்..; மரைக்காயர் : அரபிக் கடலின் சிங்கம் 3.75/5

மலை(க்கும்)யாள பிரம்மாண்டம்..; மரைக்காயர் : அரபிக் கடலின் சிங்கம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால், சுனில் ஷெட்டி, சுஹாசினி, அசோக் செல்வன், ஹரீஸ் பீராடி, நெடுமுடி வேணு, முகேஷ் மற்றும் பலர்.

இசை : ராகுல்ராஜ், அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல்
ஒளிப்பதிவு : திரு
கலை : சாபு சிரில்.
இயக்கம் : பிரியதர்ஷன்
தமிழ் வசனம் & பாடல்கள் : ஆர்பி. பாலா
தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்.

ஒன்லைன் : 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்ற கடற்படை தலைவன் பற்றிய வீர வரலாறு.

கோழிக்கோடு நாட்டை ஆண்ட சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதியாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வாழ்க்கை கதை.

கதைக்களம்..

பெரும் செல்வந்தர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார் குஞ்ஞாலி மரைக்காயர். இதனால் இவரது சமூகத்தில் இவரது செல்வாக்கு மேலோங்கி நிற்கிறது.

ஒரு கட்டத்தில் கோழிக்கோடு சாம்ராஜ்யத்தை ஆளும் சாமூத்ரி ராஜ்ஜியத்தின் நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கின்றனர்.

இதனால் கொள்ளைக்காரனான குஞ்ஞாலியின் உதவியை நாடுகின்றனர் சாமூத்ரிகர்கள். அதன்படி அரசின் கடற்படைத் தளபதி பதவியும் கொடுக்கப்படுகிறது.

குஞ்ஞாலி மரைக்காயர் எப்படி போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

மேலும் குஞ்ஞாலியின் தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் உணர்வுப்பூர்வமான காதல் கதையும் உண்டு.

இதனிடையில் குஞ்ஞாலிக்கு கொடுக்கப்பட்ட பதவி சில சிற்றரசர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் அரசவையில் இருந்தும் கொண்டும் வெளியேறியும் குஞ்ஞாலிக்கு எதிராக சதிதிட்டம் போடுகின்றனர்.

இதனை முறியடித்தாரா குஞ்ஞாலி..?

கேரக்டர்கள்..

போர்ச்சுக்கீசியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த குஞ்சாலி மரைக்காயர் கேரக்டரில் மோகன்லால். உடல்மொழியும் தமிழ் உச்சரிப்பும் கூடுதல் ப்ளஸ். ஆக்சனிலும் அசத்தல் இந்த குஞ்ஞாலி லாலேட்டன்.

இளமைப்பருவ கேரக்டரில் அவரது நிஜ மகன் பிரணவ் மோகன்லாலே நடித்துள்ளார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரணவ் பின்னி எடுத்துள்ளார். இவரின் அம்மாவாக சுகாசினி. பாசமான அம்மாவாக கவர்கிறார்.

அழகான நாயகியாக வந்து சில நிமிடங்களிலேயே உயிரை விடுகிறார் கல்யாணி. இவர் இப்பட இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

ஹரீஷ் பெராடியின் மகன்களாக அர்ஜுன் & அசோக் செல்வன் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட வில்லன் வேடத்தில் அசோக் செல்வன். ஆனாலும் அசத்தல். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு வில்லத்தனம் செய்திருக்கிறார் அசோக் செல்வன்.

ஆக்சன் கிங் என்பதால் அர்ஜூனுக்கு ஏற்ற அனல் பறக்கும் சண்டைகளும் உள்ளன. ஆனால் இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.

முகேஷின் மகளாக கீர்த்தி சுரேஷ். கேரளத்து அழகில் கிறங்கடித்துள்ளார். அதுவும் அந்த சைனீஷ் வீரன் + கீர்த்தி காதல் வேற லெவல். டூயட் பாடலில் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி.

சைனீஷ் நடிகர் ஜெய் ஜே ஜக்ரிட்டின் ஆக்சன் காட்சிகள் அசத்தல்.

மோகன்லாலில் நண்பனாக பிரபு. சீரியஸ் படத்தில் கொஞ்சம் கலகலப்பூட்டி இருக்கிறார். உடல் எடையை குறைக்கலாமே சார்.

தலையில் முக்காடு.. வாடிய முகம்.. கணவனை இழந்த விதவை என கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர். இவரது கேரக்டர் க்ளைமாக்ஸ் எதிர்பாரத்த ஒன்றுதான். ஆனாலும் ஸ்கோர் செய்கிறார் மஞ்சு.

மோகன்லாலின் சித்தப்பாவாக சித்திக், நல்ல ராஜாவாக மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அமைச்சராக சுனில் ஷெட்டி & ஹரீஷ் பெராடி என அனைவரும் நம் மனதில் நிறைகின்றனர்.

டெக்னீஷியன்கள்..

ராகுல்ராஜின் பின்னணி இசையுடன் அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல் ஆகியோரின் பாடல்களும் பின்னணி இசையும் தெறிக்கவிட்டுள்ளனர்.

கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் போற்றப்பட வேண்டியவர்கள். காட்சிகளை அவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளனர்.

தமிழில் வசனம் & பாடல்கள் எழுதிய ஆர்.பி. பாலாவின் பங்கு அளவிட முடியாது. மலையாள மணமே தெரியாத அளவிற்கு தமிழ் வாசனையை படரவிட்டுள்ளார்.

இடைவேளை சமயத்தில் வரும் கடல் சண்டை அசத்தல். தண்ணீரே இல்லாமல் ஃகிராபிக்ஸ் வைத்து சூட் செய்துள்ளனர். கலை இயக்குனருக்காவே இந்த படத்தை மற்றொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுத்துள்ளார் சாபுசிரில்.

போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. சாமுத்ரி & மரைக்காயர் படைகள் மோதும் யுத்த களம் வேறலெவல்.

பொதுவாக இதுபோன்ற பாகுபலி படத்துடன் ஒப்பிடப்படும். பாகுபலியில் 2000 போர் வீரர்கள் இருந்தால் இதில் 500 வீரர்கள் உள்ளனர். படத்தின் பட்ஜெட்டால் அது அப்படி அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட அரண்மனையை வெளியே காட்டாமல் உட்புறத்தில் காட்டியுள்ளனர்.

படத்தின் பெரிய பிரச்சினையே மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைக்கதை தான். ஆங்காங்கே யூகிக்க முடியாத சில ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

கிராபிக்ஸ், சிறந்த நடிகர்கள், பின்னணி இசை, கலை ஒளிப்பதிவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் உலகத் தரத்தில் ஒரு மலையாள சினிமாவை கொடுத்துள்ளார் தேசிய விருதுகளை வென்றுள்ள பிரியதர்ஷன்.

இந்த பிரம்மாண்ட மரைக்காயர் படத்தை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

ஆக… மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படம் மலையாள சினிமாவின் மலைக்க வைக்கும் பிரம்மாண்டம்.

Marakkar: Arabikadalinte Simham Movie Review and rating in Tamil

இயற்கை இல்லையேல் இன்பமேது..? வனம் விமர்சனம்… 2.75/5

இயற்கை இல்லையேல் இன்பமேது..? வனம் விமர்சனம்… 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… இயற்கையின் முக்கியத்துவத்தை மறுபிறவி, பழி வாங்கல் என திகிலோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.

கதைக்களம்..

அழகம் பெருமாள் FINE ARTS கல்லூரியை நடத்தி வருகிறார். அங்குள்ள விடுதியில் 1013 என்ற அறையில் தங்கி படித்து வருகிறார் நாயகன் வெற்றி.

அந்த அறையில் தொடர் தற்கொலைகள் நடக்கிறது. ஒரு பட்டாம் பூச்சி பறந்துவரும் போதெல்லாம் இந்த சம்பவம் நடப்பதை அறிகிறார் வெற்றி. அப்போது தன் சிறுவயது தோழி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு தன்னுடைய யூடிப் சேனலுக்கு டாக்குமெண்டரி படம் எடுக்க வருகிறார்.

அப்போது அந்த தொடர் தற்கொலைகள் குறித்தும் அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது குறித்தும் ஸ்மிருதியிடம் சொல்கிறார் வெற்றி.

எனவே இவர்கள் இணைந்து சில ஆராய்ச்சிகளை செய்து அந்த தற்கொலைக்களுக்கான காரணங்களை தேடுகின்றனர்.

வெற்றி அதை கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க என்ன காரணம்? அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

நாயகனாக ஜீவி படத்தில் நடித்த வெற்றி நடித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. தன் கேரக்டரில் நிறைவு.

ஆனால் இவரைப் போன்ற நடிகர்கள் ஏன் தாடியை எடுப்பதில்லை என்று தெரியவில்லை. தாடியுடன் இருப்பதால் இவரை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. (எல்லாம் மாணவர்களுமே இப்போது தாடியுடன் தான் இருக்கிறார்கள் என்பது வேறுகதை.)

வண்ணாத்திப்பாறை என்ற அழகிய கிராமத்திற்கு ஏற்ப மிக அழகாக இருக்கிறார் அனு சித்தாரா (இவர் மலையாள சினிமாவில் பிரபலம்). தன் உருண்ட விழிகளால் நம்மை ரசிக்கவும் வைக்கிறார். அழவும் வைக்கிறார்.

ஆனால் இவர் மட்டும் இவ்வளவு அழகாக சிகப்பாக இருக்கிறார். மற்ற மனிதர்கள் கறுப்பாக அழுக்காக இருக்கிறார்கள். எனவே அந்த கிராமத்து மனிதர்களுடன் இவரது கேரக்டர் ஒட்டவில்லை.

ஸ்மிருதி வெங்கட் அழகான திறமையான நடிகை. தடம் மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்தவர் இந்த ஸ்மிருதி. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளார்.

வெற்றிக்கும் ஸ்மிருதிக்கும் உள்ள டூயட் பாடல் அழகு. ஆனால் ரொமான்ஸ் தான் பத்தவில்லை.

அழகம் பெருமாள் திடீரென மாறுவது திரைக்கதையில் ட்விஸ்ட். வேல ராமமூர்த்தி வழக்கம்போல தன் கேரக்டரில் மிரட்டல். இவரின் சுயசரிதையை எழுத வரும் அந்த நபரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கலை இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே வேண்டும். ஜமீன்தார் காலத்திலும் சரி.. பைன் ஆர்ட்ஸ் காஜேஜ் என்பதாலும் அதற்காக நிறைய உழைத்துள்ளார். பழைய காலத்து பொருட்களை அடுக்கி வைத்து நம்மை அசரவைத்துள்ளார். சபாஷ் சார்.

த்ரில்லர் படங்கள் என்றால் இசையமைப்பாளருக்கு ஸ்வீட் சாப்பிடுவது போல. அதை சரியாக உணர்ந்து இசையை மிரட்டலாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோன் எதான் யோஹசன். பாடல்களும் ஓகே.

பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து பறக்க புறப்படும் காட்சி அழகோ அழகு. வண்ணாத்திப்பாறையை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். சில காட்சிகள் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்வது போல உள்ளது.

இன்றைய காலக்கட்டம்… அன்றைய ஜமீன்தார் காலம் என இரண்டையும் மாயக்கண்ணாடி மூலம் இணைத்திருப்பது நல்ல விஷயம்.

விவசாயத்தை காக்க விவசாயிகள் சிலர் தற்கொலை செய்வது போல காடுகளை காக்க அந்த மக்கள் இறப்பது நம்மை கண்கலங்க வைக்கும். ஆனால் எவரும் இறந்து எதையும் காப்பாற்றிட முடியாது. வாழ்ந்துதான் நமக்கு தேவையானவற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தொடர் தற்கொலைகள் நடந்தாலும் யாரும் எதையும் கண்டுக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்ப்பது சரியில்லை தானே. ஒரு போலீஸ் கூட வரவில்லையே. இதுபோன்ற லாஜிக்கை கவனித்திருக்கலாம்.

கதை சொன்ன விதத்தில் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஆர்ட்.. ஒளிப்பதிவு… இசை.. நடிகர்கள் என கவனம் செலுத்திய இயக்குனர் இன்னும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அந்த அறையில் உள்ளவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்பது என்ன காரணமோ? தெரியலையே. அவர்கள் செக்ஸ் வைப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு இந்த பிரச்சினை ஏன்.? அவரை குறிவைப்பது ஏன்.?

இறுதியாக இயற்கையை அழித்துவிட்டால் நமக்கு இன்பம் ஏது? என கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More Articles
Follows