தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவக்குமார் விஜயன்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.
கதைக்களம்…
மூன்று பெண்களின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. ஒரு ஆண் மகனை சுற்றியுள்ள அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் வலி பற்றிய உலகம்தான் இந்த இறைவி.
இயக்கிய படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் குடிகார இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இவருக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி. ஒரு பெண் குழந்தை.
நேசித்து உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்ய முடியாத விஜய்சேதுபதி பின்னர் அஞ்சலியை மணக்கிறார்.
பெண்களை போற்றும் பாபி சிம்ஹா. பணத்திற்காக எதையும் துணிச்சலுடன் செய்பவர்.
காதலித்த கணவன் இறந்துவிட்டதால், ஆசைக்கு மேட்டர் வைத்துக் கொள்ளும் பூஜா தேவரியா.
இவர்கள் 6 பேரும் இணைந்த இக்கதையில் நடைபெறும் சின்ன சின்ன உணர்வுகளை காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
கதாபாத்திரங்கள்…
இருக்கு ஆனா இல்லை… இதை எஸ் ஜே சூர்யா சொல்ல கேட்டு இருப்போம். அதிகப்படியான நடிப்பு திறமை இருக்கு. ஆனால் இதுவரை இல்லாதுபோல் நம்மிடம் நடித்து இருக்கிறார் மனிதர்.
அப்படியொரு ஒட்டுமொத்த நடிப்பை இதில் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணி அடிக்காமல் இவர் குடிகாரனாய் பேசும் வசனக் காட்சி ஒன்றே போதும் இவரின் பெயரை சொல்லும்.
பாசமுள்ள அண்ணன், சிறந்த படைப்பாளி, அன்பான அப்பா, குடிகார கணவன் என எதிலும் குறை வைக்காமல் சிறப்பு சேர்த்துள்ளார். இனிமே நீங்க நடிச்சா மட்டும் போதும் சார்… வீ ஆர் வெயிட்டிங்…
தன்னுடைய டைரக்டர் என்பதால் எக்ஸ்ட்ரா நடிப்பை கொடுத்திருப்பாரோ விஜய் சேதுபதி. இவரும் சூர்யாவுக்கு போட்டியாக வந்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த கேப்பில் தன் பங்கை செய்திருக்கிறார்.
அதிலும் இவர் நடனம் ஆடும்போதும் மட்டும், ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது இவருக்கே வெளிச்சம்.
பூஜாவிடம் காதலை சொல்லும்போதும், அவளை தேடி போகும்போதும், நண்பனுக்காக சிறை செல்லும்போது என தேடி தேடி வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.
அஞ்சலியிடம் நடத்தையை சந்தேகப்பட்டு கேட்கும்போது தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முக்கால்வாசி படமே முடிந்துவிட்ட போதிலும், பைனல் டச் நான்தான் கொடுப்பேன் என்பது போல பாபி தன் கடமையை செய்திருக்கிறார்.
பெண்களுக்காக ஏங்குவதும், பெண்களை வெறுப்பதும் என இரண்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எத்தனை ஹீரோயின் இருந்தாலும் அஞ்சாத ஏஞ்சல் நானிருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.
தலதளபதி போன்று கணவனை எதிர்பார்க்கும் இவருக்கு தன் கணவன் அப்படி அமையவில்லையே என்ற தவிப்பை கண்களில் காட்டியிருக்கிறார்.
முதல் இரவில் ஏமாற்றம் வந்தபோது, அதை பெண்களிடம் விவாதிப்பது அருமை. தன் வாழ்க்கையில் கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இவர் பெண்களுக்கு ரோல்மாடல்தான்.
எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல சொல்லும்போது கணவனின் காதலும் கிடைக்கவில்லை என்பதை அருமையாக உணர்த்தியிருக்கிறார்.
நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கேட்கும்போது நான் அவன் கூட படுத்திருப்பேனா இல்லையா? நான் சொல்ல போறது இல்ல? நம்பிக்கை இருந்தா வாழு. நீ யோக்கியமா? என்று கேட்கும்போது நச்.
ஆமா நானும் காதலிச்சேன். அவன் கூட படுத்தா வெட்டிடுவியா? என ஒவ்வொன்றையும் சொல்லி கேள்வி கேட்கும்போது அப்ளாஸ் கொடுக்கலாம்.
ஹைடெக் வாழ்க்கை ஆசைப்பட்டு குடிகார கணவனிடம் குமுறும் பெண்ணாக கமாலினி முகர்ஜி. வேலைக்கு செல்லும் இடத்தில் வலிகளை மறைத்து வாழும் இன்னொரு வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
மற்றொரு திருமணத்திற்கு தயாராவதும் முடியாமல் தவிப்பதும், பெற்றோருக்காக சம்மதம் தெரிவிப்பதும் ஆண்களை சார்ந்து வாழும் பெண்களுக்கே உரிய இயல்பான நடிப்பு.
பூஜா தேவரியா… உயிருக்கு உயிராய் நேசித்த கணவனை இழந்தாலும் காசுக்காக எதையும் செய்யாமல் வாழும் ப்ராடிக்கல் லேடி.
செக்ஸ் மேட்டர் வேண்டும் என்பதை அழகாய் சொல்லி, கல்யாணம் செய்துக் கொள்ள வருபவனை உதறிவிட்டு அந்த கேரக்டராய் நிற்கிறார்.
இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், ராதாரவி, வடிவுக்கரசி, வைபவ் என ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். உணர்வுகளுக்கு இவரும் உயிரூட்டியிருக்கிறார்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ரயில், மழை காட்சிகள், கோயில் காட்சிகள், பாடல் என பேச வைத்திருக்கிறார்.
படத்தின் ப்ளஸ்…
- எஸ் ஜே சூர்யாவின் ஆணித்தரமான நடிப்பு
- யாரும் கேரக்டர்களாக தெரியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம்
- உறங்கும் உணர்வுகளை தட்டி பார்க்கும் வசனங்கள்
உதாரணத்திற்கு…
- சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆண்.. நெடில். பெண் குறில்…
- எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல…
- உன் மக உன்னை அங்கிள் கூப்பிட்டா எனக்கு மருமக தானே….
நிறைய சொன்னால் கதை தெரிந்துவிடும் என்பதால் இதுபோதும்.
படத்தின் மைனஸ்…
- தேவையில்லாத பீச் பாடல்
- பெண்களை போற்றுங்கள். ஆண்களில் நல்லவர்களே இல்லையா சார்?
- நீளமான சில காட்சிகள்
பெண்களின் வலியை நிறைய படங்களில் சொன்னவர் பாலசந்தர். அதை இன்றைய காலத்திற்கேற்ப சரியாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒவ்வொரு காட்சியும் நகரும்போது பெண்களின் இதயத்தினுள் நுழைந்து கதை எழுதியிருப்பாரோ? என எண்ணத் தோன்றுகிறது.
அதே சமயம், ஆணாதிக்கம் என்ற ஆயுதத்தையும் எடுத்து, அதை அவர்களுக்கே பாடம் சொல்லும் கத்தியாக தீட்டியிருக்கிறார் இயக்குனர்.
மழையில் நனையலாமா? என ஆரம்பத்தில் கேட்டு, க்ளைமாக்ஸில் சுதந்திரமாய் நனையவிட்டு முடித்திருப்பது சூப்பர்.
மொத்தத்தில் இறைவி… மனிதி சொல்லும் நீதி.!