விளையாட்டுத்தனம்; ஜீனியஸ் திரை விமர்சனம்

விளையாட்டுத்தனம்; ஜீனியஸ் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி, ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து மற்றும் பலர்.
இயக்கம் – சுசீந்திரன்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – குருதேவ்
எடிட்டர் – தியாகு
தயாரிப்பு – ரோஷன்
பிஆர்ஓ – ஜான்சன்

கதை

படிப்பு படிப்பு படிப்பு… இப்படி எந்நேரமும் மாணவர்களுக்கு / குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே திணித்தால் அவர்களின் மனநிலை என்னாகும்..? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? என்பதே இந்த ஜீனியஸின் மையக்கரு.

சாதாரணமாகவே பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவன் பட நாயகன் ரோஷன் (படத்தில் தினேஷ்). தன் மகன் படிப்பில் அக்கறை எடுக்காமல் இருக்கிறார் ஆடுகளம் நரேன்.

பள்ளி ஆண்டு விழாவில் தன் மகனுக்கே அனைத்து முதல் பரிசுகளும் கிடைக்கிறது. இதனால் ஆனந்தமடையும் அப்பா, இன்னும் தீவிரம் காட்டி பர்ஸ்ட் ரேங்கை தவிர எதுவும் எடுக்கக்கூடாது என அனைத்து பொழுது போக்குகளையும் கட் செய்து விடுகிறார்.

கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு கூட போகாமல் செய்துவிடுகிறார்.

படிப்பு படிப்பு என எந்நேரமும் இருக்கும் ரோஷன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்.

அதனையடுத்து நன்றாக படித்து ஐடி கம்பெனியில் சேர்கிறார். அங்கும் இவரின் புத்திசாலித்தனத்தால் எல்லாம் வேலைகளையும் இவரிடமே கொடுக்கிறார் ஓனர்.

ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை கூட ஒரே வாரத்தில் முடிக்க சொல்லி நிர்பந்திக்கிறார். இதனால் இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்கிறார் நாயகன்.

இதனால் மைண்ட் ப்ளாக் ஏற்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார்கள். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். இதனால் வேலையும் பறி போகிறது.

திருமணம் செய்து வைக்கலாம் என்று பார்த்தால் ரோசனின் லூசு தனத்தால் அதுவும் பாதிக்கப்படுகிறது.

இதனை பார்க்கும் ஆடுகளம் நரேனின் நண்பர் சிங்கம் புலி அவர்கள் ரோசன் குணமடைய புதிய யுக்தியை கையாள்கிறார். என்ன செய்தார் மாமா? ரோசன் முற்றிலும் நலமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.

genius still 1


கேரக்டர்கள்…

நாயகன் ரோஷன் மற்றும் நாயகி பிரியா லால் இருவரும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். (பிரியா மலையாளத்தில் 5 படங்களில் நடித்திருக்கிறார்).

படத்தின் ஆரம்ப காட்சிகளில் ரோஷன் செய்யும் கிறுக்குத்தனத்தை பார்த்தால் நமக்கே எரிச்சலாகும். என்னடா? இவர் ஜீனியஸ்? தானா என்பதில் சந்தேகம் எழும். அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.

படிப்பு மட்டுமே கவனத்தில் கொண்டதால் உடற்பயிற்சி இருக்காது. உடல் அமைப்பு நிச்சயம் பிட்டாக இருக்காது. அதற்கு ஏற்ப ஹீரோ ரோஷன் இருக்கிறார். கிறுக்குத்தனத்தில் கில்லியாக இருக்கிறார் ரோஷன். ஆனால் மற்ற காட்சிகளில் இன்னும் நிறைய பயிற்சி தேவை. மற்றபடி முதல் படம் என்பதால் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம்.

முதல் படத்தில் எவரும் ஏற்க மறுக்கும் கேரக்டரில் பிரியா லால். இடைவேளைக்கு பின்னர் தான் வருகிறார். நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார்.

ஆனால் நாயகிகளுக்கு சுசீந்திரன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக எழுந்துள்ளது. அதை இதிலும் நிரூபித்துள்ளார்.

கண்டிப்பான அப்பாவாக ஆடுகளம் நரேன். நடிப்பிலும் செம ஸ்ட்ரிக்ட். அம்மாவாக மீரா கிருஷ்ணன்.

படிப்பை மட்டுமே கொடுத்து மகனின் வாழ்க்கை இப்படி நாசமாக்கி விட்டாரே என்று கேள்வி கேட்கும் காட்சிகளில் பாசக்கார அம்மாவாக ஜெயித்து விடுகிறார்.

சிங்கம் புலி சில காட்சிகளில் வந்து சிரிப்பு மூட்டுகிறார். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

genius still 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே ரகம் தான். ‘நீங்களும் ஊரும்’, ‘சிலு சிலு’ஆகிய பாடல்களை ரசிக்கலாம்.

விளையாடு மகனே விளையாடு பாட்டு. இன்றைய பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் கேட்டு.

படத்தொகுப்பில் குறைவில்லை. 2 மணி நேரம் கூட படமில்லை என்பது பெரும் ஆறுதல்.

ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சிட்டி காட்சிகளில் ஏதோ ஒரு டல் பீலிங் வருகிறது.

genius still

இயக்கம் பற்றிய அலசல்….

முதல் பாதியில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது. பிள்ளைகள் விளையாடும் வயதில் அவர்களை விளையாட விட வேண்டும் என்பதை சொன்ன சுசீந்திரனுக்கு ஒரு சபாஷ்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. மாலை வேளையில் குழந்தைகள் நன்றாக விளையாடினால் தான் அவர்களுக்கு அசதி வரும். அப்போதுதான் இரவில் நன்றாக உறங்கி காலையில் படிப்பார்கள் என்று ஆணித்தரமாக சொல்லியுள்ள சுசீந்திரனை பாராட்டலாம்.

சமூகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்தி கொள்ள பிள்ளைகளின் படிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் சில பெற்றோர்கள். அவர்களுக்கு இந்த ஜீனியஸ் ஒரு படிப்பினையை கொடுப்பார்.

விபச்சார விடுதிக்கு சென்ற பின் ஹீரோ மனநிலை மாறுவது எல்லாம் ரொம்ப ஓவர். எல்லாம் ஜீனியஸ் இப்படி செய்துவிட்டால் என்னாவது..?

முதல் பாதியை பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பார்க்கலாம். ஆனால் 2ஆம் பாதியை மாணவர்களை வைத்து பார்க்க முடியுமா..?

சொல்ல வந்த விஷயத்தை கமர்ஷியல் கலந்து வேறு ரூட்டில் சொல்ல பயணித்துவிட்டதால் ஜீனியஸ் சற்று தடுமாறி விட்டார்.

ஜீனியஸ்… விளையாட்டுத்தனம்

திகட்டாத திருவிழா..; சண்டக்கோழி 2 விமர்சனம்

திகட்டாத திருவிழா..; சண்டக்கோழி 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி மற்றும் பலர்.
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சக்திவேல்
எடிட்டர் – பிரவீன்
இயக்கம் – லிங்குசாமி
தயாரிப்பு – விஷால்
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்….

சாப்பாட்டில் ஆட்டுக்கறி இல்லாத பிரச்சினையால் வரலட்சுமியின் கணவன் ஒருவனை வெட்ட, பின்னர் அவர்கள் வரலட்மியின் கணவரை வெட்டுகிறார்கள்.

இந்த கலவரத்தால் ஊர் திருவிழா தடைப்படுகிறது. இனி திருவிழா நடந்தால் தன் கணவரை வெட்டியவனின் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என சவால் விடுகிறார் வரலட்சுமி.

ஒரு சிலரை அப்போதே வெட்டிவிட்டு ஹரி என்ற ஒருவனை வெட்ட அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறார்.

கலவர காரணத்தால் திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கிறார் கலெக்டர்.

இந்நிலையில் 7 வருடங்களாக நின்றுப் போன ஊர் திருவிழாவை நடத்த 7 கிராம மக்களையும் கூட்டி சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார் ராஜ்கிரண்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தில் இனி உயிரிழப்பு இருக்காது. அவர்களுக்கு நான் பாதுகாப்பு என பொறுப்பேற்று கொள்கிறார் ராஜ்கிரண். இவருக்கு துணையாக களத்தில் நிற்கிறார் விஷால்.

திருவிழா அமைதியாக நடந்ததா.? அந்த குடும்பத்தை காக்க வீச்சருவாளை எடுத்தாரா விஷால்? ராஜ்கிரண் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா? வரலட்சுமி ஹரியை வெட்டினாரா? என்பதே மீதிக்கதை.

sandakozhi 2 stills

கேரக்டர்கள்…

13 வருடங்களுக்கு முன் சண்டக்கோழி படத்தில் பார்த்த போது விஷால் எப்படியிருந்தாரோ? அதே போலத்தான் இதிலும் இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம்.

அப்போது அப்பாவித்தனம் இருந்தது. இதில் படம் முழுக்க சீரியஸ் ஆகவே இருக்கிறார். ரொமான்ஸ் அதிகம் இல்லை என்றாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கவிட்டுள்ளார்.

மீரா ஜாஸ்மின் ரேங்சுக்கு நாம் கீர்த்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தன் பாணியில் அசத்தியிருக்கிறார். கோயில் திருவிழாவில் கீர்த்தி போடும் குத்தாட்டம் செம அப்ளாஸை அள்ளும்.

கிராமத்து பெண்களுக்கு உரித்தான துடுக்குத்தனத்தால் மனதில் நிறைகிறார் கீர்த்தி. வாயாடி பெண்ணாக துறுதுறுவென ரசிக்க வைக்கிறார். (கிராமத்து பாஷை சில காட்சிகளில் செயற்கையாக உள்ளது)

ஆரம்பம் முதலே மிரட்டலான பார்வையில் வருகிறார் வரலட்சுமி. இடையில் அமைதியாக இருக்கும் இவர் க்ளைமாக்ஸ் பைட்டில் மிரள வைத்துள்ளார்.

அழகான வில்லிகள் இங்கே இல்லை என்பதால் வரலட்சுமி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ராஜ்கிரணை பார்த்தால் நமக்கே ஒரு கம்பீரம் வரும். அதே மிடுக்கு. அதே பேச்சு. துரை ஐயாவாக வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல ஒரு பெரியவர் இருந்தால் ஊரே நன்றாக இருந்துவிடும்.

கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி என ஒவ்வொரு காட்சியிலும் ஊரே திரண்ட உணர்வு. நிச்சயமாக இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கிய லிங்குசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.

sandakozhi 2 stills keerthy

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இதுபோன்ற ஆக்சன் படங்ளுக்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். அதை உணர்ந்து பின்னி எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு சீனுக்கும் அதிர வைத்துள்ளார்.

கம்பத்து பொன்னு, மீசைக்கார, பாடல்கள் ரசிக்க வைக்கும். ஆளாள பாட்டு இதமான ராகம்.

சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. கீர்த்தி மற்றும் வரலட்சுமியை ரசித்து ரசித்து க்ளோஸ்அப் ஷாட்டுக்கள் நிறைய வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் பைட் சீன் முதல் பார்ட்டில் பார்த்த அதே லொக்கேசன் உணர்வு.

எடிட்டர் பிரவீனின் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.

பிருந்தா சாரதி, எஸ்.ரா இருவரும் எழுதியுள்ள வசனங்கள் சில இடங்களில் கைத்தட்டல்கள் பெறுகிறது.

sandakozhi 2 stills vishal varu keerthi

இயக்கம் பற்றிய அலசல்…

சண்டக்கோழி முதல் பார்ட் வந்தபோது நடிகராக மட்டுமே இருந்தார் விஷால். தற்போது 13 வருடத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டதால் அவருக்கு ஏற்ப காட்சிகளில் ஃபயர் ஏற்றியுள்ளார் லிங்குசாமி.

சண்டக்கோழி2 என தலைப்பிட்டதாலோ என்னவோ படத்தில் பாதி சண்டைக்காட்சிகளே உள்ளது. ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.

லிங்குசாமி படங்கள் என்றால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதை இதிலும் காப்பாற்றியிருக்கிறார்.

விஷால் அட்வைஸ் செய்தவுடன் வரலட்சுமி கண்ணீர் விடுவதும் மழை பெய்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

திருவிழா கடைசி நாளில் ராஜ்கிரண் திடீரென வருவது நம்புறமாதிரி இல்லையே.

முனீஷ்காந்த் ராஜ்கிரணாக வேஷம் போடுவதும் ஊர் மக்கள் முன்னிலையில் காரில் அமர்ந்திருப்பதும் நம்பும்படியாக இல்லை. கார் சைடு மிரரில் முகம் தெரியாது ஓகே. முன் கண்ணாடியிலுமா? தெரியாது. லிங்கு சாரே என்ன சார்?

சண்டக்கோழி 2… திகட்டாத திருவிழா

Sandakozhi 2 review rating

வசீகரிக்கும் சென்னை…; வடசென்னை விமர்சனம்

வசீகரிக்கும் சென்னை…; வடசென்னை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், பவன், ராதாரவி, டேனியல் பாலாஜி மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டர் – வெங்கடேஷ் மற்றும் ராமர்
இயக்கம் – வெற்றிமாறன்
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ. – ரியாஸ்

கதைக்களம்….

வன்முறையும் வட சென்னை மக்களின் வரலாறும் இப்படத்தின் தான் ஒன்லைன்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனியும் அவரது கூட்டாளிகள் கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் அந்த கொலையை செய்கின்றனர்.

அதன்பின்னர் சின்ன குற்றத்திற்காக தனுஷ் ஜெயிலுக்கு செல்கிறார். பின்னர் வாய்ஸ் ஓவரில் ஜெயிலுக்குள் நடக்கும் கோடிக்கணக்கான கஞ்சா தொழில் முதல் பணப் பரிமாற்றம் வரை அத்தனையும் சொல்கிறார்கள்.

பின்னர் ஒவ்வொருவரின் கேரக்டர் பற்றிய சுவராஸ்யத்தை உடைக்கிறார் டைரக்டர். அதற்காக 1980 முதல் ஆரம்பித்து 2003 வரை கதைக்களம் அமைத்து இருக்கிறார்.

அவை எல்லாம் சொல்லிவிட்டால் சில சுவாரஸ்யங்கள் இருக்காது. நாம் பல சினிமாக்களில் பார்த்து பார்த்து பழகின போன கதை தான்.

வடசென்னையின் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சி செய்யும் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் கதை.

இதனிடையில் கேரம்போர்டு வீரராக நுழையும் அன்பு என்ற தனுஷ் எப்படி அந்த வடசென்னையை மாற்றி அமைக்கும் கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.

புத்தகத்தில் வரும் பாகங்கள் போல, திரைக்கதையை தனி தனி பாகங்களாக பிரித்துள்ளார். கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றை மாறி மாறி காட்டியுள்ளார்.

இடையில் கதையின் முக்கிய முடிச்சுகளை அவிழ்த்து விட்டு திரைக்கதையை ரசிகன் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

முதல் பார்ட்டில் தனுஷின் ஆரம்ப கால காதல், ஜெயில் கதைகளே வருகிறது. இரண்டாம் பார்ட்டில்தான் அத்தனையும் காட்டப் போகிறார் வெற்றிமாறன்.

vadachennai stills

கேரக்டர்கள்…

ஏற்கெனவே தனுஷ் மீது ரசிகர்களுக்கு அன்பு அதிகம். அவர்கள் இந்த அன்பு கேரக்டரை பார்த்தால் இனி அன்பை விடவே மாட்டார்கள். கேங்ஸ்டர் கதை என்றாலும் இதில் தன் அருவாளை அவ்வளவாக பயன்படுத்தவில்லை.

மாறாக ரொமான்ஸில் ஐஸ்வர்யாவை கட்டம் கட்டிவிட்டார். விட்டால் கிஸ் அடிப்பதில் கமலுக்கு போட்டியாக தனுஷ் வந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

அப்பாவியாக இருந்து படிப்படியாக கேங்ஸ்ட்ராக உயர்வது என தன் தோற்றத்துக்கு ஏற்ப தனுஷ் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

சாமி ஸ்கொயரில் மாமி கேரக்டரில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் தன் பெயரை ஒரு படி மேலே எடுத்துச் சென்றுள்ளார். பத்மா கேரக்டரில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ராஜன் கேரக்டரில் அமீர். குணா கேரக்டரில் சமுத்திரக்கனி. செந்தில் கேரக்டரில் கிஷோர். சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா. என ஒவ்வொருவரும குறையே சொல்ல முடியாத படி வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.

தாதாவின் மனைவிகள் எப்படி இருப்பார்கள்.? சைலண்ட்டாக இருந்து காயை நகர்த்துவதில் ஆண்ட்ரியா அசத்தல். அமீரின் மனைவியாக இருப்பவர் எப்படி சமுத்திரக்கனியை வளைத்தார் என்பது எல்லாம் செம ட்விஸ்ட்.

வழக்கமான பெரியவர் கேரக்டரில் ராதாரவி. அதட்டல். அசத்தல்.

நாம் வழக்கமாக பார்க்கும் டேனியல் பாலாஜி இதில் வித்தியாசம் காட்டியுள்ளார். ப்ளாஷ்பேக்கில் வேறுமாதிரியாகவும் நிகழ்காலத்தில் சாமியார் போன்றும் வேறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார். பவன் கேரக்டரும் பளிச்.

vadachennai dhanush kiss

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இருவரும் வடசென்னைக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களை படத்துடன் ஒன்ற வைக்கிறது. மேலும் பின்னணி இசையில் செம மிரட்டல். சந்தோஷமய்யா சந்தோஷ்.

ஒவ்வொரு ஆங்கிளையும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் வேல்ராஜ்.

கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். அந்த காலத்து லைட், போஸ்டர், கிரைண்டர், போன் முதல் வரை ஆண்கள் ஆடை, ஆண்கள் முடி அலங்காரம் வரை பார்த்து பார்த்து வைத்துள்ளனர்.

இயக்கம் பற்றிய அலசல்…

வடசென்னை மக்களின் வாழ்க்கை, அவர்களின் பேச்சு வழக்கம், பொழுதுபோக்கு, தொழில், மனைவி, மக்கள், அரசியல்வாதிகளின் சதி வேலை என ஒவ்வொன்றையும் இன்ச் பை இன்ச் ஆக சொல்லிவிட்டார்.

சதுரங்க ஆட்டத்தில் உள்ள காய் போல ஒவ்வொரு கேரக்டரையும் நகர்த்தி அதற்கான திரைக்கதை அமைத்து நம்மையும் அந்த ஆட்டத்தில் சேர்த்து வெற்றி காண்கிறார் டைரக்டர்.

இனி எவரும் வட சென்னை மக்களின் வாழ்க்கை என்று எதையும் புதிதாக சொல்லிவிட முடியுமா? தெரியல. ஒருவேளை புதிய டைரக்டர் எடுக்க வந்தால் வடசென்னையில் வெற்றிமாறன் காட்டிட்டாரே என்று ரசிகனே சொல்லிவிடுவார்கள்.

இதன் க்ளைமாக்ஸ் “வட சென்னை 2 – அன்புவின் எழுச்சி” குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ப்ளாஷ்பேக் இருப்பதால் வன்முறை விரும்பாத சிலர் பொறுமை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இது 18க்கு வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படமே. வடசென்னை மக்களின் வாயில் இருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? வரும் என்பது வியக்க வைக்கிறது. அதிலும் பெண்கள் பேசும் அந்த பச்சை பச்சை வார்த்தைகள் மகா கொடுமை.

இந்த படத்தை பார்த்தால் பாளையங்கோட்டை, புழல் ஜெயிலிக்குள் சென்று ஜெயில் வாழ்க்கை வாழ்ந்த உணர்வு ஏற்படும்.

தயவுசெய்து பள்ளி மாணவர்கள், மாணவிகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்.

வடசென்னை… வசீகரிக்கும் சென்னை

VadaChennai review rating

தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்

தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விவேக், தேவயாணி, அழகம்பெருமாள், ரிஷி, செல் முருகன், பிரேம்குமார், போலீஸ் ஜெயச்சந்திரன் மற்றும் பலர்.
இசை – கணேஷ் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா
எடிட்டர் – கார்த்திக் ராம்
இயக்கம் மற்றும் தயாரிப்பு – விஜி
பிஆர்ஓ. – குமரேசன்

கதைக்களம்….

விவேக் & தேவயானி இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் அர்ஜீன். பள்ளியில் படிக்கும் மாணவன். வசதியான குடும்பம்

அர்ஜீனுக்கு 5 ஏழை நண்பர்கள். 3 பையன்கள் 2 பெண்கள். இவர்கள் அனைவரும் பாக்ஸிங், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட ஒவ்வொரு தற்காப்பு கலைகளில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.

அழகம் பெருமாளின் சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அக்டமியில் பயிற்சி பெறுகிறார்கள்.

இவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு நேஷ்னலுக்கு செலக்ட் ஆக வேண்டும் என தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் இவர்கள் 5 பேரையும் அழகம் பெருமாள் தன் பயிற்சி மையத்தில் இருந்து நீக்கி விடுகிறார்.

இதில் அர்ஜீன் மட்டும் பாக்ஸிங்கில் நேஷ்னல் லெவலுக்கு செல்க்ட் ஆகிறார்.

அந்த போட்டியில் ஜெயிக்கும் போது மிகுந்த உற்சாகத்தில் இவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த நிமிடமே மரணமடைகிறார்.

இதனால் தன் மகனின் ஆசைப்படி ஒரு ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆரம்பித்து அர்ஜீனின் 5 நண்பர்களுக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி கொடுக்கிறார் விவேக்.

இதனால் விவேக்கிற்கும் அழகம் பெருமாளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. தன் பண பலத்தாலும் அதிகார வர்கத்தாலும் விவேக்கின் மாணவர்களை தடுக்க நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? மாணவர்கள் ஜெயித்தார்களா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கிருத்திகா, தீபிகா இவர்கள்தான் படத்தின் மெயின் கேரக்டர்கள். விவேக் போடும் உற்சாக பந்தால் 6 பேரும் சிக்ஸர் அடித்துள்ளனர்.

சிலம்பம், பாக்ஸிங், கராத்தே என ஒவ்வொருவரும் நம்மை மிரள வைத்துள்ளனர். இந்த பயிற்சியை நாம் கற்றுக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நம்மையே ஏங்க வைத்துள்ளனர்.

தன் பிள்ளைக்கு உற்சாக டானிக் தரும் தம்பதிகளாக விவேக் மற்றும் தேவயானி நடித்துள்ளனர்.

விவேக் பேசும் வசனங்கள் மாணவர்களுக்கு வீரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

ஆனால் இந்த தம்பதியரின் ஒரே மகன் அர்ஜீன் இறந்த பிறகு இவர்களிடம் அவ்வளவு சோகமில்லை என்பது வருத்தம்தான்.

போலீஸ்காரர்களாக வரும் பிரேம் குமார் மற்றும் சிங்கம் ஸ்டைல் மீசைக்காரர் ஜெயச்சந்திரன் இருவரும் நல்ல தேர்வு. இடைவேளைக்கு பிறகு வரும் ஜெயச்சந்திரன் நம் கவனத்தை அதிகமாகவே ஈர்க்கிறார்.

ஹீரோ போல ரிச் தோற்றம் இருந்தாலும் வில்லனாக நடித்துள்ளார் ரிஷி. பாவம் மாணவர்களிடம் அதிகமாகவே அடி வாங்கிவிட்டார். பைட் செம ப்ளஸ்.

மற்றொரு வில்லனாக அழகம் பெருமாள். தன் நடிப்பில் கச்சிதம். செல் முருகன் காமெடி சுத்தமாக எடுப்படவில்லை. (செல் பழைய மாடலோ..?)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கணேஷ் சந்திரசேகரின் இசையில் உருவான எங்கே நீ போனாய்… பாடலும் அந்த வரிகளும் நிச்சயம் நம்மை தாலாட்டும். ஆனால் அந்த பாடலை தனுஷை விட்டு பாட வைக்காமல் சிறந்த பாடகரை வைத்து பாட வைத்திருக்கலாமே சார்..?

அனிருத் குரலில் உருவான எழு… எழு பாடலும், யோகி பி குரலில் ஒலிக்கும் போராடுடா பாடல்களும் மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா வைட்டமின். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில் க்ளைமாக்ஸ் பைஃட் மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும் எடிட்டர் கார்த்திக் ராமும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்களை விட்டுவிட்டு இன்று கராத்தே மற்றும் பாக்ஸிங் விளையாட்டுக்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம். அதையே முறையாக பயின்றால் நம்மை தற்காத்து கொள்ள முடியும் என வகுப்பு எடுத்துள்ளனர்.

ஆனால் படத்தின் முதல் பாதியில் நடக்கும் நிறைய போட்டிகள் ஏதோ 20 பேர் முன்னிலையில் நடக்கும் போட்டியாகவே உள்ளது. விஜி சார் இன்னும் கூட்டம் சேர்த்திருக்கலாமே.

டாப் ஹீரோக்களுக்கு இணையான அந்த க்ளைமாக்ஸ் பைட் நிச்சயம் ரசிகர்களை கவரும். ஃபைட் அதிக நேரமிருந்தாலும் மாணவர்களின் சாகசத்தால் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

இந்த படம் பார்த்தால் வீடியோ கேம் விளையாடும் மாணவர்கள் இனி வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட ஆசைப்படுவார்கள்.

குடும்பத்துடன் பார்க்க, நண்பர்களுடன் பார்க்க, காதலருடன் பார்க்க என பல படங்களை பார்த்திருப்போம். இது மாணவர்கள் ஆசிரியர்களுடன் பார்க்க கூடிய படம்.

எழுமின்… தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை

மலையாளிகளின் மைந்தன்..; காயம்குளம் கொச்சுன்னி விமர்சனம்

மலையாளிகளின் மைந்தன்..; காயம்குளம் கொச்சுன்னி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : பினோத் பிரதான்
கதை : பாபி-சஞ்சய்
டைரக்டர் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
தயாரிப்பு : ஸ்ரீகோகுலம் கோபாலன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர்தான் மலையாளத்தில் மோகன்லால்-நிவின்பாலி நடித்த இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த கதையானது 1800களில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

மிகப்பெரிய கொள்ளைக்காரனாக வாழ்ந்த கொச்சுன்னி, ஏழைகளுக்கு வாரி வழங்கும் ராபின்ஹூட்டாக கோலோச்சிய காலத்தை இந்த படம் சொல்கிறது.

இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கொச்சுன்னி. இவனின் தந்தை ஒரு திருடன் என்பதாலும் வறுமை குடும்பத்தை வாட்டுவதாலும் இவனது அம்மா ஊரை விட்டு போக சொல்கிறார்.

வேறு ஊருக்கு செல்லும் கொச்சுன்னி அங்கு ஒரு மளிகைகடையில் வேலைக்கு சேர்கிறார். திருடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

அந்த ஊருக்கு களரி வித்தையை சொல்லிக் கொடுக்க வரும் பாபு ஆண்டனியுடம் சில தடங்கலுக்கு பிறகு வித்தைகளை கற்கிறார். அங்கு பணிபுரியும் பிரியா ஆனந்துடன் காதல் கொள்கிறார்.

ஒரு சூழ்நிலையில் மேல் சாதியினர் ஆற்றில் இருக்கும் புதையலை எடுக்க சொல்லி கொச்சுன்னியிடம் கேட்கின்றனர். அப்போது அவருக்கு சில பவுன்களையும் தருவதாக சொல்கின்றனர்.

இதனை நம்பும் கொச்சுன்னி அந்த புதையலை எடுத்து வருகிறார். பரிசாக சில பவுன்களையும் அவர்களிடம் இருந்து வாங்குகிறார்.

ஆனால் கொச்சுன்னி திருடிவிட்டதாக அவர் மீது பழியை போட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு பெரும் தண்டனை கொடுக்கின்றனர்.

நிவின் பாலியின் நல்ல உள்ளத்தை அறிந்த இத்திக்கார பக்கி (மோகன்லால்) அவரை அந்த தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறார்.

நீ நல்லவனாக வாழ்வதில் அர்த்தமில்லை. உன் சாதியினருக்கு உதவ நீ களத்தில் இறங்க வேண்டும். மேல் சாதியினரிடம் உள்ள பொன் நகைகளை கொள்ளையடித்தால் தப்பே இல்லை என சில பயிற்சி யுக்திகளை சொல்லிக் கொடுத்து செல்கிறார்.

அதனை கற்ற நிவின்பாலி என்ன செய்தார்? திருட சென்றாரா? தன் சமூக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாரா? ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? மேல் சாதியினரை எதிர்த்த எப்படி போராடினார்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

எப்போதும் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசம் காட்டுபவர் நிவின்பாலி. இதில் முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாம் பாதியில் அதிரடி கொச்சுன்னியாகவும் வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் ஏழைகளுக்காக அள்ளி கொடுப்பதை போல் நடிப்பையும் க்ளைமாக்ஸில் ரசிகர்களுக்காக அள்ளி கொடுத்திருக்கிறார் நிவின்பாலி.

இடைவேளையில்தான் வருகிறார் மோகன்லால். ஆனால் அவரின் மேனரிசம் படம் முழுவதும் பேசப்படும் வகையில் செய்திருக்கிறார்.

குதிரை சவாரி, சண்டைப் பயிற்சி வித்தைகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கும்.

வெறுமனே நாயகியாக இல்லாமல் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரியா ஆனந்த், ஆனால் இவரது தோற்றம்தான் அந்த 1800 காலகட்டத்திற்கு ஒத்துப் போகவில்லை. டல் மேக்அப் போட்டு இருக்கலாம்.
பெரும்பாலான காட்சிகளில் எம்.எஸ். பாஸ்கர் இருக்கிறார். ஆனால் ஓரிரு வார்த்தைகள் அவருக்கு வசனங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
களரி வித்தைக்காரராக பாபு ஆண்டனி. சைலட்டாக வந்து க்ளைமாக்ஸில் வைலண்டாக மாறி அசத்தியிருக்கிறார்.

பாபு ஆண்டனியின் முன்னாள் மாணவராக இருந்து பின்னர் காவல் துறை அதிகாரியாக மாறும் சன்னி வெயின் செம வெயிட்டு. கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

மேல் சாதியினராக தன்னை காட்டிக் கொள்ளும் அந்த கும்பல் அனைவருமே நடிப்பில் கச்சிதம். ஆங்கில ஆட்சியாளர்களும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் பெரிய பலமே கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்தான். 1800 ஆண்டுகளில் இப்படிதான் சந்தை, கோயில், களரி பயிற்சி, நடைமுறைகள், உடை வழக்கம், படகு, இயற்றை காட்சிகள் இருந்திருக்குமோ? என ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான் அனைத்து காட்சிகளையும் கண்களை விட்டு அகலாத வண்ணம் கொடுத்துள்ளார்.

கோபி சுந்தரின் பின்னணி இசை மிரட்டல். மோகன்லால் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமாக்ஸ் சீன் வரை பின்னி எடுத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஒரே மாதிரி கதையை எப்போதும் எடுக்காமல் வெரைட்டி காட்டும் டைரக்டர் ரோசன் ஆண்ட்ரூஸை வெகுவாக பாராட்டலாம்.

வரலாற்று ஆய்வுகளை திறம்பட செய்து, அதை இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி திறமையான கலைஞர்களை வைத்து விருந்து வைத்துள்ளார்.

காயம்குளம் கொச்சுன்னி… மலையாள மக்களின் மைந்தன்

Kayamkulam Kochunni movie review rating

கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு சினிமாவுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டிங்கை சூட்டிங் முடித்தவுடன் சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் பட தயாரிப்பாளர்.

அங்கு வசிக்கும் சீனியர் துணை நடிகைதான் ஊர்வசி. அவரின் மகன்தான் இப்பட நாயகன் ராஜ்குமார்.

அவரும் அவரது நண்பர்களும் இணைந்து சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டே ஒரு நடன குழுவை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் மற்றொரு இடத்தில் நாயகியும் அவரது அக்காவும் பரதநாட்டிய நடனப் பள்ளி நடத்தி வருகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் செட் போட்ட தயாரிப்பாளர் தனக்கு பணம் தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்ய சொல்கிறார். இல்லை என்றால் ஒரு கோடியை அங்குள்ள குடும்பங்கள் சேர்ந்து கொடுத்தால் அந்த இடத்தை விட்டு தருகிறேன் என்கிறார்.

எனவே பணத்தை திரட்ட உலகளவில் நடக்கும் ஒரு நடனப் போட்டியில் கலந்துக் கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார்.

அதுப்போல் நாயகி ஸ்ரிஜிதா தன் வீட்டை அடமானத்தில் இருந்து காப்பாற்ற அந்த நடன போட்டியில் கலந்துக் கொள்கிறார்.

இந்த நடன குழுக்களுக்கு பலத்த போட்டியாக உள்ளவர்தான் நாகேந்திர பிரசாத். அவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள வருகிறார்.

இறுதியில் யார் ஜெயித்தார்கள்? இடத்தை நாயகன் நாயகி மீட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ராஜ்குமார் நடிப்பை விட சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரம். எனவே ஆக்சன் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

நாயகிகள் 3 பேர் உள்ளனர். ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாகேந்திர பிரசாத். நடனத்தில் கவர முயற்சித்துள்ளார். நடிப்பில் அதே பழைய பார்முலாதான்.

துணை நடிகை படும் பாட்டை வெகு இயல்பாக காட்டியுள்ளார் ஊர்வசி. ஆனால் இவருக்கு இருக்கும் அந்த ப்ளாஷ்பேக் தேவையில்லாத ஒன்று.

ஏதோ நாயகன் நாயகியிடம் சொல்வதற்காக வைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.

நாகேந்திர பிரசாத்தும் நாயகியின் அக்காவும் ஆடும் காட்சி நன்றாக உள்ளது. மேலும் ஒரு சில நடன காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.

மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல். பாலாஜியின் இசையில் பாடல்கள் ஓகே. டி.ஆர். பாடிய சங்கிஸ்தான் மங்கிஸ்தான் பாடல் தாளம் போடும் ரகம்.

கதைக்கு கொடுத்த வலுவை திரைக்கதையில் கொடுத்திருக்கலாம் இயக்குனர் வெங்கி.

கூத்தன்… டான்ஸ் பிடிக்கும்னா பாருங்க ஜீ

More Articles
Follows