தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகி பாபு, சிங்கம் புலி, பூஜா தேவ்ரியா, நாசர், தீபா, ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : சண்முக சுந்தரம்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்
கதைக்களம்…
காந்தி (விஜய் சேதுபதி) மற்றும் பாண்டி (யோகி பாபு) இருவரும் நண்பர்கள்.
ஊரில் ஏற்பட்ட கடன் தொல்லையால், ஊரில் தலைக் காட்ட முடியாமல் லண்டன் சென்று சம்பாதிக்க நினைக்கின்றனர்.
பாஸ்போர்ட் எடுக்க சென்னை வருகின்றனர். ஆனால் உடனடியாக பாஸ்போஸ்ட் வேண்டும் என்பதால், ஏஜெண்ட்களை நாடுகின்றனர்.
அவர்களோ லண்டனில் செட்டில் ஆகிவிட இலங்கை அகதி போல் செட்டப் செய்யலாம் என்று கூறி, இங்கே தவறான முகவரிகளை கொடுக்க சொல்கின்றனர்.
இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும் மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் பாஸ்போர்ட் ரெடி செய்து விடுகின்றனர்.
ஆனால் இண்டர்வியூவில் அவர் பெயில் ஆகிவிட யோகிபாபு மட்டும் லண்டன் செல்கிறார்.
அதன்பின்னர் மனைவி பெயரை எடுக்க விஜய்சேதுபதி போராடும் போராட்டங்களே இப்படத்தின் மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…
எந்த வேடம் என்றாலும், அதிலும் தன் யதார்த்த நடிப்பை கொடுத்து அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி.
காந்தி என்ற பெயரில் நேர்மையாக இருக்க முடியாமலும், தவறான வழியில் செல்லும் போதும் முகபாவனைகளால் ரசிக்க வைக்கிறார்.
அதிலும் ஊமையாக நடிக்கும்போது ரசிகர்களுக்கு கலகலப்பாக்கியிருக்கிறார்.
இறுதிச்சுற்று ரித்திகா சிங்கா இது…? இதில் முற்றிலும் ஆளே மாறியிருக்கிறார். ஆனாலும் மீடியா பெண்ணாக போல்டாக நடித்திருக்கிறார்.
படம் முழுவதும் இவர் வரவில்லையே என யோகிபாபு ஏங்க வைக்கிறார். படத்தின் எனர்ஜிக்கு முக்கிய காரணமாகிறார் யோகிபாபு.
இவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு சென்னையில் வீடு தேடும் காட்சிகள் நிச்சயம் எவராலும் மறக்க முடியாது.
இவர்களுடன் நாசர், பூஜா தேவ்ரியா, தீபா, உள்ளிட்டோர்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கே இசையில் பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை. பின்னணி இசை ஓகே.
சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில் கோர்ட், சென்னை வாடகை வீடுகளின் அவலம் என அனைத்தையும் சல்லடை போட்டு காட்டியிருக்கிறார்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிகண்டன்.
இதிலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். சென்னையில் வீடும் தேடுபவர்கள் பிழைப்புக்காக மட்டுமே சென்னை வருகிறார்கள். அவர்களை அசிங்கபடுத்த வேண்டாம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்.
பாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் எவ்வளவு பேர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? அகதிகள் என்றாலும் அவர்களுக்கும் அழகான மனசு இருக்கிறது என்று கூறும்போது கண்கலங்க வைக்கிறார்.
நாயகன், நாயகியை கதை சுற்றி வந்தாலும், இருவருக்கும் காதல் இல்லாமல் கடைசியில் முடிச்சு போடுவது அருமை.
ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டும் என்பதை கோர்ட் காட்சிகளிலும், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் இருக்கும்போது ஏஜெண்டுகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்பதையும் பாஸ்போர்ட் ஆபிஸ் காட்சிகளிலும் விளக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை… பாஸ்போர்ட்டுக்கான பயணம்