தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி ஆசியுடன் பி. வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.
இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாரன்சுக்கு அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் அளிக்க, அதை அப்படியே கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார் லாரன்ஸ்.
இதன்பின்னர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் தான் நடிக்கவுள்ள ஒரு சம்பளத்திலிருந்து 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையை அளித்துள்ள்ளார் லாரன்ஸ்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் இயக்குனர் டி. ராஜேந்தர் கூறியிருப்பதாவது:
“எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர்.
தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித்தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம்.
அந்தத் திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் எடுக்காமல் இருந்த நான் ‘இன்னிசைக் காதலன்’ என்ற படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருந்தேன்.
ஆனால் கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நாடெங்கும் ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் என் நினைவுக்கு வந்தவர் என் நண்பரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.
இந்நிலையில் எங்கள் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காகச் செய்தால் போதும்” என்றேன்.
உடனே ராகவா மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைத்தார்.
நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் இந்த உலகத்தில் கடந்த காலத்தை மறக்காத அந்த கனிந்த உள்ளத்துக்கு நன்றி. அவரின் தர்ம சிந்தனையும், தயாள குணமும் தழைக்கட்டும்.
என் சார்பாகவும் எங்கள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும் அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றி
நண்பர் ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல மனிதநேயம் படைத்த நெருங்கிய திரையுலகத்தினரிடம் சங்க நல அறக்கட்டளைக்காக நிதி கேட்டு இருக்கிறேன். அவர்களும் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள்.
நலிவடைந்த விநியோகஸ்தர்களுக்கு கரோனா பாதிப்பு சமயத்தில் உதவுதோடு அல்லாமல் தொலைநோக்குப் பார்வையோடு மாதா மாதம் ஒரு சின்ன உதவித்தொகை வழங்க முயற்சிக்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.