தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் பி. வாசு பேசுகையில்..
” நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ…! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.
இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரே காணும் போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.
இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான் . இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.
சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.
நான் எப்போதுமே ஓம் என்று எழுதி தான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சிஇஓ தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.
ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.
அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம்.
அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.
ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.
நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது சந்திரமுகியை தவிர. சந்திரமுகி நடிக்கவிருப்பது யார்?என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார்? என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன்.
ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.
இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும் போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார்.
“அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
நான் எப்போதும் படத்தை தொடங்கும் போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்.
ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.
சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”என்றார்.
Not only Vettaiyan one more character is there says Vasu