தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.
கபாலியில் அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டு விட்டதாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன.
லிங்கா படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதம் கழித்து, ரஜினியை காண ரசிகர்கள் தவம் கிடந்துள்ளனர்.
அவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்துவிட்டதா என்பதை பார்ப்போம்…
கதைக்களம்…
மலேசியாவில் வசிக்கும் தமிழ் நேசன் (நாசர்) ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நினைக்கிறார். இதனை எதிர்க்கும் சிலர் நாசரை கொல்ல, கபாலி (ரஜினி) உருவெடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் எதிரிகளை இவர் வெட்டி கொல்ல ஜெயிலுக்கு செல்கிறார். எனவே, எதிர்ப்பு இல்லாத 43 என்ற கேங்ஸ்டர் கூட்டம் பெரியளவில் வளர்கிறது.
அதன்பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகும் கபாலி தன் மக்களுக்கு என்ன செய்கிறார்? என்பதே மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்…
ரஜினிக்கே உரித்தான மாஸ் தோற்றம். வயதானாலும் அவரது ஸ்டைலில் குறைவில்லை. கண்ணாடி அணிந்திருந்தாலும் அதை டீமீறியும் அவரது பார்வையில் ஒரு பவர் இருக்கத்தான் செய்கிறது.
ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நேராக வில்லனின் அடியாளை சந்திக்கும் காட்சிகள் மாஸ். அடி தூள் கிளப்பியிருக்கிறார். பின்னர் மகளுக்காக ஏங்குவதும் மனைவியை தேடி அலைவதும் ரஜினி கண் கலங்க வைக்கிறார்.
ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு மாஸ் ஆக்ஷன் இனி வருமா? என தெரியவில்லை.
ரஜினியின் மகளாக தன்ஷிகா பளிச்சிடுகிறார். தந்தையை காப்பாற்ற நினைப்பது முதல் ஒரு ஆண் பிள்ளையாக மாறியிருக்கிறார்.
ரித்விகா கொஞ்சம் நேரம் வருகிறார். அதில் தன் முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிறார்.
கலையரசன், ஜான்விஜய், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் பொருத்தமான (???) தேர்வு.
கிஷோர் தன் பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் டீசரில் பார்த்த அந்த வசனம்.. யாருடா? அந்த கபாலி. வரச்சொல்லுடா என்ற டயலாக் படத்திற்கு வேலையில்லை. கபாலியை நன்றாக தெரிந்தவர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும்.
வில்லன் வின்ஸ்டன் சவோ… பேசவே இல்லை. அப்படியே பேசினாலும் தமிழக ஜனங்களுக்கு புரிய போவதில்லை.
நாசருக்கு பெரிதாக வேலையில்லை. ரஜினி படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தால் யாருக்கு பெரிதாக வேலை இருக்காது. இதிலும் அதேதான்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜி. முரளியின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகளும் பிரம்மாண்டங்களும் ஓகே. ஆனால் எடிட்டர் பிரவீண் முதல் பாதியை நிறையவே வெட்டியிருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் நிச்சயமாக மனதில் நிற்காது.
ரஜினியின் இன்ட்ரோ பாடல் போல வரும்… ‘உலகம் ஒருவனுக்கா” தோன்றினாலும் எந்தவிதமான ஆட்டத்தையும் ரசிகர்களிடம் காண முடியவில்லை.
படத்தின் ப்ளஸ்…
- ரஜினி ரஜினி ரஜினி – 3 விதமான ரஜினியின் தரிசனம்
- தன்ஷிகா மற்றும் ராதிகா ஆப்தேவின் நடிப்பு
- காந்தி சட்டை போடாததற்கும் அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கு.. இதுபோன்ற சில வசனங்கள்
படத்தின் மைனஸ்…
- இது ரஜினியின் மாஸ் ஆக்ஷன் படமில்லை.
- மகிழ்ச்சி இருக்கட்டும். அதற்காக வில்லன் கோபமாக பேசினாலும் மகிழ்ச்சியா?
- டான் கதையில் இவ்வளவு சென்டிமெண்ட்ஸ் தேவையா?
- பாடல்கள் வருவதும் போவதும் தெரியவில்லை.
எதற்காக இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ரஞ்சித் என தெரியவில்லை. ராம்திலக் எதற்காக வருகிறார்? இவரை போல நிறைய மலேசிய முகங்கள் வருகிறார்கள்.
ரஜினிக்கென்று எப்பவும் கிராமத்து ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் முழுக்க மலேசியா, கிளப், தாய்லாந்து பார்ட்டி என் இருப்பதால் நிச்சயம் அவர்களை கவராது.
மேலும் வில்லன்கள் மலாய் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது தமிழில் சப் டைட்டில் போடுவது ஓகேதான். ஆனால் படிக்காதவர்களின் நிலைமை? இது இயக்குனருக்கு தெரியாதா?
கபாலி… மகிழ்ச்சி 60%