தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிகா, தம்பி ராமய்யா, அபிநயா மற்றும் ஒரு பாடலுக்கு டிஆர்.
இயக்கம்: மீரா கதிரவன்
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்
இசை: சத்யன் மகாலிங்கம்
தயாரிப்பாளர்: மீரா கதிரவன்
கதைக்களம்….
மாலை முதல் அடுத்த நாள் அதிகாலை வரை (12 மணி நேரத்தில்) நடக்கும் கதை இது.
இதில் 4 கதைகளை ஒரு புள்ளியில் இணைக்கிறார் இயக்குநர்.
தொலைந்து போன தன் நாயை தேடும் சாரா. இவருடன் கண் தெரியாத அப்பா வெங்கட் பிரபு. நாயை தேடும் வேளையில் அந்த சிறுமி தேடும் அவஸ்தைகள்.
தாங்கள் செய்த ஒரு குற்றத்திற்கான ஆதாரம் பத்திரிகையாளர் எஸ்பி. சரணிடம் சிக்க, அவரை கொலை செய்ய திட்டமிட்டு சுட்டு விடுகின்றனர் வில்லன் கோஷ்டியினர்.
அங்கிருந்து தப்பி ஓடும் இவர் டிரைவர் கிருஷ்ணாவில் காரி ஏற, அவருடன் காரில் பயணிக்கிறார் கிருஷ்ணா. போலீசுக்கு செல்லலாம் என்று நினைக்கையில் அந்தக் குற்றத்தில் போலீசுக்கும் சம்பந்தமிருக்க அவர் ஓடுகிறார்.
திருட சென்ற இடத்தில் தன்ஷிகாவை பார்க்க, அவரும் திருட வந்திருக்கிறார் என்று தெரிய வர, அவரிடம் உள்ள பணப் பையை பங்கு போட திட்டமிடுகிறார் விதார்த்.
விக்ரம் விஸ்வநாத் என்ற பணக்கார இளைஞன் தன் பிறந்த நாளை கொண்டாட ஸ்டார் ஓட்டலுக்கு செல்ல, அங்கு ஒரு அழகியை பிக் அப் செய்ய திட்டமிட்டு அவருடன் காரில் சென்னை வரை பயணிக்கிறார்.
இதனிடையில் கிருஷ்ணாவுக்கு உதவும் ரேடியோ ஜாக்கி அபிநயா.
இப்படியான கதைகளை எப்படி கிளைமாக்ஸில் இயக்குனர் இணைக்கிறார் என்பதே கதை.
கேரக்டர்கள்…
படத்தில் முக்கியமாக நான்கு கதைகள் இருந்தாலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பல கேரக்டர்கள் வந்து செல்கிறார்கள்.
குடும்ப பாசம் கொண்ட கிருஷ்ணா அப்பாவித்தனம் கலந்த நடிப்பில் ஈர்க்கிறார். இறுதியில் மனதை கலங்கடிக்கிறார்.
விதார்த் மற்றும் ஹன்சிகா தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். இந்த கேரக்டர்களில் தம்பி ராமையா இணைய கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்று நினைத்தால் மிஸ்ஸிங். காமெடி கூட இல்லையே சார்?
இதில் டிஆர் பாடல் வேற. பாடல் நன்றாக இருந்தாலும் படத்திற்கு தேவையா? என கேட்கத் தோன்றுகிறது.
நாய் தேடும் சாரா மற்றும் வெங்கட் பிரபு கேரக்டர்கள் ரசிக்க வைக்கிறது. கண் தெரியாத அப்பாவை இப்படி அலையவிடுகிறாளே சாரா? என நினைக்கத் தோன்றும்.
எரிகா, அபிநயா என மற்ற இரு நாயகிகளும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள்.
சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு இதில் வில்லனாக மிரட்டியுள்ளார். இவருடன் சுதா சந்திரன்,
தொழில்நுட்ப கேரக்டர்கள்…
விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சென்னையில் இரவு நேர வாழ்க்கை, அது தொடர்பான காட்சிகள் என வியக்க வைக்கிறார்.
சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசை படத்துக்கு இன்னொரு பலம்.
க்ளைமாக்ஸ் காட்சியில் தன் சமூக அக்கறையை சொன்ன இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
படத்தின் கேரக்டர்கள் முத்துக்குமார், திலீபன் என கிடைத்த கேப்பில் எல்லாம் இயக்குனர் தன் சமூக பற்றை காட்டியுள்ளார்.
முதல் பாதியில் விறுவிறுப்பான கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்க, அதை சரி செய்திருக்கலாம்.
கிருஷ்ணாவுடன் அடிக்கடி பேசும் அவரது தங்கைக்கு அண்ணனின் குரல் தெரியாதா? விதார்த் பேசும்போது நீங்க யார்? என்று கேட்க கூட இல்லையே?
அதற்கு பதிலாக டப்பிங் கலைஞரான வெங்கட் பிரபுவை பேச வைத்திருக்கலாமே. அது இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.
விழித்திரு.. பார்க்கலாம்.