தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிகர்கள் : சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், விக்ரம் சுகுமாரன், இந்திரகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : முத்தையா
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்
எடிட்டிங்: வெங்கடராஜன்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: சசிகுமார்
கதைக்களம்…
சசிகுமார் தன் சிறு வயதிலேயே தாயை இழக்கிறார். அன்றுமுதல் தன் தங்கை சனுஷாவை தன் பாதுகாப்பில் வளர்க்கிறார்.
தன் தங்கைக்காக எதையும் செய்ய துணிந்தவர் இவர்.
இவர் மஹிமாவை காதலிக்கிறார். இந்நிலையில் மஹிமாவின் அண்ணன் விதார்த்துக்கும் சசிகுமாரின் தங்கை சனுஷாவுக்கும் திருமணம் நடக்கிறது.
வருவாய்துறை அதிகாரியான வித்தார்த்தை வில்லன் பசுபதியும் இவரது தங்கை பூர்ணாவின் கணவன் இந்திரகுமாரும் எதிர்க்கின்றனர்.
விதார்த்தை போட்டுத் தள்ள அவர்கள் திட்டம்போட, தன் தங்கை கணவனை எப்படி சசிகுமார் காப்பாற்றினார்? என்பதே கொடிவீரன்.
கேரக்டர்கள்…
வழக்கமான கிராமத்து நாயகன் சசிகுமார். என்னடா வழக்கமான? என்கிறீர்களா?
பாய்ந்து பாய்ந்து ஆக்சனில் கலக்குவார். நாயகியை காதலிப்பார் ஆனால் காதலிக்கும் பெண் கட்டிபிடிக்க வந்தால் வேண்டாம் என்பார்.
இடுப்பில் அல்லது வாயில் கத்தி வைத்து முறுக்கு மீசை பார்வை பார்ப்பார் தானே… இதே வழக்கம் இதிலும் தொடர்கிறது.
கருப்பன் பட கெட்டப்பிலேயே இதிலும் வில்லனாக வருகிறார் பசுபதி. இதில் மிரட்டல் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது.
இவரின் உறவினராக குற்றம் 23 படத்தயாரிப்பாளர் இந்திரகுமார் நடித்துள்ளார். அதிகாரம் கேரக்டரில் அசத்தல். அதிக காட்சிகள் கொடுத்திருந்தால் இன்னும் கலக்கியிருப்பார்.
பாலசரவணன் இருந்தும் படத்தில் துளியும் காமெடியில்லை.
மலர் கொடியாக மஹீமா நம்பியார், வேல்விழியாக பூர்ணா, பார்வதியாக சனுஷா ஆகிய மூன்று நடிகைகள்.
இவர்கள் மூவரும் பாசமலர் தங்கைகளாக வருகிறார்கள்.
இதில் பூர்ணா அதிகம் ஸ்கோர் செய்கிறார். படத்தில் மொட்டை அடித்து மிரட்டியிருக்கிறார்.
விதார்த் இருக்கிறார். அவ்வளவுதான்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எஸ்.கதிரின் ஒளிப்பதிவில் கிராமம் பளிச். அந்த மீன் பிடி காட்சியும் பைட் சீனும் நன்றாக ரசிக்க வைக்கிறது.
என்ஆர் ரகுநந்தன் இசையில் தாலாட்டு பாடலும் டூயட் பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் சில நேரங்களில் அதுவே ரொம்ப இறைச்சலாக இருக்கிறது.
இயக்கம் பற்றிய அலசல்…
கிராமத்து மண்வாசனை படம் கொடுப்பதில் முத்தையா கெத்துதான். ஆனால் அதே பார்முலாவை கொஞ்சம் மாற்றுவது நல்லது.
சசிகுமாரின் தங்கை சனுஷாவை தாய்மாமன் பெண் கேட்க, நீ என்ன வேலை செய்ற? பெண் கொடுக்க என்கிறார்கள்? அதுசரி. படத்தில் சசிகுமார் என்ன வேலை பார்க்கிறார்? என்றே தெரியவில்லை.
அவரிடம் ஏது பணம்? அவருக்கு மட்டும் டீச்சராக வேலை பார்க்கும் மஹிமாவுடன் காதல், கல்யாணம் எல்லாம் ஓவர்.
கொடிவீரன்… கிராமத்தில் கொடி பறக்கும்