தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் பிரபல நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது.
ஆனால் இந்த முறை வெப் சீரிஸில் களம் இறங்கியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு எமனாக அமைந்துள்ள தமிழ் ராக்கர்ஸை அழிக்க இந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளாக ஆகஸ்ட் 19ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் இந்த வெப் சீரிஸ் ஓடுகிறது.
ஏ வி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் ஷ்யாம் தயாரிக்க, அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் , அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், வினோதினி, மாரி முத்து, தருண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒன் லைன்..
ஒரு புதிய திரைப்படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப்சைட்டில் (இணையதளத்தில்) வெளியாகி ஒட்டுமொத்த படத்தின் வசூலை பாதிக்கிறது.
இதனால் திரையுலகிற்கு தீராத தலைவலியாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது.
கதைக்களம்..
பிரபல நடிகர் அஜய் நடித்த மாய லோகம் படம் திருட்டுத்தனமாக வெளியானதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது சினிமா.
இதன்பின்னர்.. அதிரடி ஸ்டார் ஆதித்யாவை வைத்து ரூ. 300 கோடியில் ‘கருடா’ என்ற பிரம்மாண்ட படம் எடுக்கிறார் தயாரிப்பாளர் அழகம்பெருமாள்.
இந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சில காட்சிகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிறது. இதனால் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் தயாரிப்பாளர்.
ஆனாலும் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எங்கள் இணையத்தளத்தில் ‘கருடா’ படம் வெளியாகும் என சவால் விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். இதனால் ஆதித்யா ரசிகர்களும் டென்ஷன் ஆகின்றனர்.
இந்த பிரச்சனை திரையுலகிற்க்கும் காவல்துறைக்கு பெரிய சவாலாக அமைகிறது. இதனால் அருண் விஜய் அவரது உதவியாளர் வினோத் சாகர் மற்றும் சைபர் கிரைமில் உள்ள வாணி போஜன் மற்றும் வினோதினி ஆகியோர் களத்தில் இறங்குகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது.
இறுதியில் வென்றது யார்? கருடா படம் தியேட்டரில் வெளியானதா? இணையதளத்தில் வெளியானதா? ஆதித்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? அருண் விஜய் சவாலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அருண் விஜய். படத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் எங்கிருந்து செயல்படுகிறது என்பது பற்றி விசாரணையில் அருண் விஜய் இறங்கும் போது அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து.
இவரது மனைவியாக ஐஸ்வர்யா மேனன் கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் நடிப்பு என கவருகிறார்.
வாணி போஜன் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார். வாணி போஜனுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் வாய்ஸ் சூப்பர்.
அதிரடி ஸ்டார் ஆதித்யாக வருபவர் நடிகர் விஜய் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அவரின் முகத்தை திரையில் காட்டாவிட்டாலும்.. விஜய்யின் மேனரிசம் போலவே உள்ளன.
மேலும் விஜய் பண்ணை வீட்டில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து போடுவதும்.. ரசிகர்கள் அவருக்காக காத்திருப்பதும் என பல காட்சிகளை காட்டி உள்ளனர்.
மேலும் ஆதி்த்யாவின் அப்பாவாக வருபவரும் எஸ்ஏ சி போலவே செயல்படுகிறார். விஜய்க்காக அந்த காட்சிகளை மாற்றவும் இந்த காட்சிகளை மாற்றவும்… இந்த காட்சியை ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் நிபந்தனைகள் போடுவது அப்பட்டமாகவே தெரிகிறது.
சைபர் கிரைம் அதிகாரி வாணி போஜனின் அப்பா தமிழ் ராக்கர்சால் பாதிக்கப்பட்டு உடல் நல குன்றிய படத் தயாரிப்பாளர் ஆவார். அவர்தான் எம் எஸ் பாஸ்கர். ஒரே காட்சி என்றாலும் நடிப்பில் அசத்தல் சார்.
டெக்னீஷியன்கள்…
ராஜசேகரின் ஒளிப்பதிவும் சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு, விகாசின் பின்னணி இசையும் தரம்.
ஆனால் 5 எபிசோடில் சொல்ல வேண்டிய கதையை 7- 8 எபிசோடுகள் என இழுத்து இருப்பது ரொம்ப போர். ஒவ்வொரு காட்சியும் பாமர மக்களுக்கும் சென்று சேர கடுமையாக உழைத்துள்ளனர் எனத் தெரிகிறது.
மனோஜ் குமார் கலைவாணன் கதையில்,
அறிவழகன், மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சு நாத், முருகப்பன் மெய்யப்பன், சுப்ரியா கொப்பா, ஆகியோரின் திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ளது.
இயக்கம் பற்றிய அலசல்…
ஒரு சினிமா என்பது ஒரு பெரிய குழுவின் உழைப்பாகும். தயாரிப்பாளர்.. நடிகர்.. நடிகை.. பைனான்சியர் என்பது மட்டுமில்லாமல்.. தயாரிப்பாளர்களின் உதவியாளர்.. கார் டிரைவர்.. நடிகரின் அப்பா.. அவரின் குடும்பத்தார்.. நடிகரின் ரசிகர்கள்.. அவர்களின் குடும்பம் என திரைத்துறை சார்ந்த அனைவரையும் காட்டி உள்ளனர்.
ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் ஒரு நடிகருக்காக எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு விசிடி என்பது தமிழகத்தில் மிக பிரபலம். திருட்டு விசிடி விற்கும் போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு கும்பல் எடுக்கும் அவதாரமே தமிழ் ராக்கர்ஸ் என்பதாக காட்டியுள்ளனர்.. இது உண்மைதானா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.?!?!
மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு உதவி இயக்குனர்களே தமிழ் ராக்கர்ஸ் க்கு துணை போவதாகவும் காட்சிகள் உள்ளன.
ஒரு படம் ரிலீசுக்கு தயாரான சூழ்நிலையில் அந்த படத்தின் காப்பி டப்பிங் தியேட்டரில்.. எடிட்டிங் தியேட்டரில்.. டி ஐ ஸ்டுடியோவில்.. நடிகர் அலுவலகத்தில்.. பைனான்ஸ்சியர் அலுவலகத்தில்.. என பல வகையாக காப்பிகள் அனுப்பப்படுகிறது.
இதில் ஏதேனும் ஒரு இடத்தில் கறுப்பு ஆடுகளால் படம் லீக்காக கூடும் என்பதையும் காட்டியுள்ளனர்.
தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதும் பிளாக்கில் விற்கப்படுவதும் பாப்கார்ன் மற்றும் உணவு வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் தமிழ் ராக்கர்ஸ் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக காட்டப்படுகிறது.
தமிழ் ராக்கர்ஸ் என்ற எமனை அழிக்க வேண்டும் என்றால் திரையுலகினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சினிமாவில் போட்டி பொறாமை என்பது நீடித்தால் தமிழ் ராக்கர்ஸ் அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள் என்பதையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
தமிழ் ராக்கர்ஸ் ஒழிக்க இத்தனை ஆக்ஷன் காட்சிகள் தேவையா என்று கேள்வி எழுகிறது. அதே சமயத்தில் எவருக்குமே தெரியாமல் ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஒட்டு மொத்த சினிமாவை அழிக்கும் தமிழ் ராக்கர்ஸ் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ரசிகன் மனதில் எழும்.
Tamil Rockerz Review and Rating