தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : உதயநிதி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி, மயில்சாமி, சர்மிளா ரோஷி மற்றும் பலர்.
இயக்கம் : தளபதி
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பாலசுப்ரமணியம்
எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா
தயாரிப்பு : ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
கதைக்களம்…
கூத்தப்பாடி என்ற கிராமத்தில் வசிப்பவர் கணேசன் (உதயநிதி). இவரது ண்பர் டைகர் பாண்டி (சூரி).
இருவரும் ஊர் சுற்றினாலும் ஏதாவது ஊருக்கு நல்லது செய்ய நினைக்கின்றனர். அப்படி செய்து சில வம்பிலும் மாட்டிக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்). மிகப்பெரிய பணக்காரர்.
இவர் ஒரு புகழ் அடிமை. அதாவது விளம்பரப் பிரியர். இவரே வீட்டை கொளுத்திவிட்டு அதற்கு நஷ்ட ஈடும் கொடுப்பதும் வழக்கம்.
அதுபோல் இவரது தங்கையை கல்யாணம் செய்துக் கொடுத்த ஊருக்கு பல நன்மைகள் செய்துக் கொடுத்து பெயர் வாங்குகிறார்.
தங்கை புகுந்த ஊருக்கே இப்படி செய்கிறாரே, இவரின் மகளை மணந்தால் என்னவெல்லாம் செய்வார்? என கணக்கு போட்டு அவரின் மகள் நிவேதாவை காதலிக்கிறார் உதயநிதி.
ஆனால் பெயர் எடுப்பதில் கணேஷ் தன்னை மிஞ்சிவிடுவானோ என எண்னும் பார்த்திபன் அவரை ஊர் மக்கள் உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
பின்னர் என்ன ஆனது? அவர் மறுபடி வந்தாரா? காதலியை கரம் பிடித்தாரா? பார்த்திபன் என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் அளித்துள்ளார் இயக்குனர் தளபதி பிரபு.
கேரக்டர்கள்…
படத்திற்கு படம் உதயநிதியின் நடிப்பு மெருகேறிவருகிறது என்பது உண்மை. பாட்டு, பைட்டு, வெட்டிபையன் என கலகலப்பாக வருகிறார்.
கிராமத்து இளைஞனாக ஜொலிக்கிறார். ஆனால் படம் முழுக்க கூலிங்கிளாஸ், கலர்புல்லாக பேண்ட் சர்ட்டில்தான் வருகிறார்.
சூரி மாதிரி சில காட்சிகளிலாவது லுங்கியில் வந்திருக்கலாம்.
சூரி காமெடிதான் படத்தின் ஹைலைட்ஸ். அதிலும் இவருடன் வரும் பல் துலக்காத நபரும் நல்ல தேர்வு.
தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியுடன் வில்லத்தனமும் செய்திருக்கிறார் பார்த்திபன். இனி வில்லனாகவும் ஜொலிப்பார்.
இந்த படம் மூலம் பார்த்திபன்-உதயநிதி-சூரி கூட்டணி உருவாகியிருக்கிறது. மூவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
மனதில் நிற்கும்படியான கேரக்டரில் மயில்சாமி. எடக்கு மடக்காக பேசி பார்த்திபனிடம் பம்முவது சூப்பர்.
கிராமத்து பைங்கிளியாக பளிச்சிடுகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் கோபம் படும் காட்சிகளில் முகபாவனைகளில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.
இவர்கள் தவிர படத்தில் ஊர் பெரியவர், மீசைக்காரர் என ஊர் பட்டாளமே நடித்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படம் முடியும் வரை ஏதோ ஊர் திருவிழாவுக்கு சென்று வந்து ஃபீலிங்கை தருகிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எல்லாம் கலர்புல். சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர்தான்.
இமானில் இசையில் மெலோடியும் சரி, குத்துபாட்டும் ரசிக்க வைக்கிறது.
சும்மா இருக்கிறது ஈசியில்லை என்ற பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சாயல் இருக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இயக்கம் பற்றிய அலசல்…
ஊருக்கு நல்லவராகவும் உள்ளத்தில் கெட்டவராகவும் பார்த்திபன் கேரக்டரை வடிவமைத்துள்ளது சபாஷ் போட வைக்கிறது.
இண்டர்வெல் காட்சியில் என்னவாகுமோ? என்ற ட்விஸ்ட் வைத்த டைரக்டர் அந்த ட்விஸ்ட்டை உடனே அவிழ்த்திருப்பது ரசிக்கவில்லை.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகம் என்னும் சொல்லும்மளவுக்கு அதே ரூட்டில் பயணிக்கிறார்.
இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் என்பதால் அவரைப் போன்றே கதையை கொடுத்து தன் வெற்றியை தக்கவைத்துள்ளார் தளபதி பிரபு. (ஆனால் குருவை மிஞ்சவில்லை)
பொதுவாக எம்மனசு தங்கம்… தங்கமின்னாலே மின்னும்