தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏ வடிவேலு. இவரது பெயர்தான் மாமன்னன். வெறும் மண்ணாக கருதப்பட்ட இவரை மாமன்னனாக உருவாக்கிய மகன் உதயநிதியின் கதை தான் இது.
கதைக்களம்…
ஏழைக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவரும் உதயநிதியும் கல்லூரி தோழர்கள்.
கீர்த்தியின் இலவச கல்வியை பிடிக்காத தனியார் கல்வி நிறுவனர் சுனில் கல்வி கூடாரத்தை அடித்து நொறுக்குகிறார்.
இதனால் உதயநிதிக்கும் சுனிலுக்கும் மோதல் உருவாகிறது. சுனிலின் தம்பி பகத் பாசில்.
தான் மாவட்ட செயலாளராக இருக்கும் சமூக நீதி மக்கள் கட்சியின் எம்எல்ஏ வடிவேலுவின் மகன் தான் உதயநிதி என்பதால் இருவரையும் சமாதானம் பேச தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார்.
அப்போது பகத் பாசில் முன்னிலையில் தன் அப்பா வடிவேலுவை அமர சொல்கிறார் உதயநிதி. ஆனால் பகத் முன்னிலையில் இதுவரை உட்காராத வடிவேலு அதனை மறுக்கிறார்.
சமூக நீதிப் பேசும் கட்சியில் இப்படி ஒரு பிரிவினை வாதமா.? என்கிற தோணியில் உதயநிதிக்கும் பகத்துக்கும் மோதல் வெடிக்கிறது.
அதன் பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் இந்த ‘மாமன்னனின் அரசியல் விளையாட்டு.
கேரக்டர்கள்…
டைட்டில் கார்டில் தன்னுடைய பெயரை 4வது போட சொல்ல உதயநிதியின் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
எங்கும் மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்து அதிவீரன் கேரக்டரை வீரமாகவே செய்திருக்கிறார்.
உதயநிதி கேரக்டர் சீரியஸான ஒன்றுதான். படம் முழுக்க இறுகிய முகத்துடனே காணப்படுகிறார். முக்கியமாக கல்லூரி காதல் காட்சிகளிலும் கொஞ்சமாவது புன்னகை செய்து இருக்கலாம் உதயநிதி.
‘மாமன்னன்’ என்ற கேரக்டருக்கு மகா மகா பெருமை சேர்த்திருக்கிறார் வடிவேலு. பல படங்களில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் இதில் கண்கலங்க வைத்திருக்கிறார்.
எந்த இடத்திலும் காமெடி வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொடுத்திருக்கிறார் வடிவேலு. நிச்சயம் அவரது நடிப்பில் இது ஒரு மைல்கல்.
ஆனால் வடிவேல் தேர்தலுக்காக ரெக்கார்ட் செய்யும் ஒரு வீடியோவில் இன்னும் அழுத்தமான வசனங்களை கொடுத்திருக்கலாம்.
படத்தில் வில்லன் பகத் பாசில். ஆனால் ஹீரோவுக்கு நிகராக பட்டையை கிளப்பி இருக்கிறார். வெறித்தனமாக நாய்களை அடித்துக் கொல்வதும் அதே வெறியோடு மனிதர்களை கொல்வதும் என ரத்தம் தெறிக்க நடித்துள்ளார்.
கம்யூனிஸ்ட்டாக கீர்த்தி சுரேஷ். கல்லூரியில் நடக்கும் ஒரு பாடலுக்கு மட்டும் தாவணி போட்டு மற்ற காட்சிகளில் பேண்ட் சர்ட் போட்டு நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் வலுவில்லை என்றாலும் நாயகனோடு படம் முழுக்க வந்து நானும் இருக்கிறேன் என அட்டென்ட்ஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி.
பகத் மனைவியாக ரவீனா ரவி. இவர் படத்தில் ஊமையா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு காரணம் ஒரு டயலாக் கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை. பிரபல டப்பிங் கலைஞரான இவருக்கு டயலாக் இல்லை என்பது வருத்தம்..
முதலமைச்சராக மலையாள நடிகர் லால். சமூக நீதிக் காக்கும் தலைவனாக தன்னை தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்.
உதயநிதி நண்பனாக ராமகிருஷ்ணன் ஓரிரு காட்சிகளில் தலை காட்டி செல்கிறார்.
டெக்னீசியன்கள்…
ஏஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். ஹீரோ ஆவேசமாக எழும்போதும் அழும்போதும் என வித்தியாசம் காட்டி உயிரூட்டி இருக்கிறார்.
ஆனால் படம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் இரண்டாம் பாதியில் மெலோடி பாடல்கள் வந்து வேகத்தை தடுக்கின்றன.
உதயநிதி – கீர்த்தியின் நெஞ்சே நெஞ்சே பாடல் காதலருக்கு பிடித்தமானதாக அமையும்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.. முக்கியமாக நாய்களும் பன்றிகளும் மோதிக்கொள்ளும் காட்சி மிரட்டல் ரகம். பன்றிக் குட்டியை கூட இவ்வளவு அழகாக காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார்.
எடிட்டர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி காட்சிகளை வெட்டியிருக்கலாம்.. முக்கியமாக கோயில் குளத்தில் பட்டியலின சிறுவர்கள் 4 பேர் குளிக்கும் அந்த காட்சி முடிந்தும் நீண்ட நேரம் செல்வதாக தெரிகிறது.
அதுபோல இடைவேளை சமயத்தில் அதிரடியான காட்டப்படும் சண்டை அசத்தல். ஆனால் அதன் பிறகு வடிவேலு உதயநிதி பைக்கில் பயணிக்கும் காட்சி தேவையில்லாத ஒன்று. அதுபோல கிளைமாக்ஸ் காட்சிகளும் சட்டசபைக்கு பின்னர் காட்டப்படும் காட்சிகளும் தேவையற்றது .
பரியேறும் பெருமாள் கர்ணன் பட வரிசையில் இதுவும் மாரி செல்வராஜின் அக்மார்க் சமூக நீதிப் படமே. பல காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது.
இனி மாரி செல்வராஜ் படம் எல்லாம் இது போல தான் இருக்குமா? என்ற எண்ணமே நமக்கு மேலோங்குகிறது. அம்பேத்கர் பெரியார் புத்தர் ஆகிய குறியீடுகளை மாரி செல்வராஜ் எத்தனை படத்தில் தான் காட்டிக்கொண்டே இருப்பார் என தெரியவில்லை.
அதுபோல பன்றிகளையும் நாய்களையும் அடிக்கடி காட்டிக் கொண்டே இருப்பது போர் அடிக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல காட்சிகள் உள்ளன.. மீண்டும் ஆளுங்கட்சி ஆட்சிக்கு வருவது போலவும் காட்டப்படுகிறது. இது எதை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பது உதயநிதிக்கே வெளிச்சம்.
உன் அப்பாவை உட்கார வைக்காமல் இருப்பது என் அதிகாரம்.. உன்னை உட்கார சொல்வது எனது அரசியல்.. என்ற பகத் பேசும் வசனங்கள் அரசியல்வாதியின் புத்திசாலித்தனம்.
ஆக.. மாமன்னன்… பட்டியலினத்திற்கு பகுத்தறிவு தந்த மகுடம்.
Maamannan movie review and rating in tamil