தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின், சூரி, ஹரிஷ் ராகவேந்தர், அப்புக்குட்டி, அருள்தாஸ், தீலிபன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவு: லஷ்மன்
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: அன்னை பிலிம் பேக்டரி ஆண்டனி
கதைக்களம்…
படத்தின் முதல் காட்சியே ஆஸ்பத்திரியில் தொடங்குகிறது. சந்தீப்பின் அப்பா சிவா ஒரு சிறிய சிகிக்சைக்காக ஆஸ்பத்திரியில் சேருகிறார். ஒரு போலி டாக்டர் ஆப்ரேசன் செய்ய அவர் மரணமடைகிறார்.
அதன்பின்னர் அதை வேறு ஒரு கோணத்தில் செல்கிறது.
கேட்ரிங் செய்துக் கொண்டே கறி வெட்டுவதை போல ஆட்களை காலி செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.
ஒருமுறை இவர் போடும் ஸ்கெட்சில் சிக்குகிறார் விக்ராந்த். தன் நண்பனை விக்ராந்த் வில்லனிடம் இருந்து காப்பாறும் சந்தீப், ஒரு பொய் குற்றச்சாட்டை கூறி தன் நண்பனையே சிறைக்குள் தள்ளுகிறார்.
தன் நண்பன் ஜெயிலில் இருந்து வெளி வரும் முன்னே, விக்ராந்த்தை கொல்ல திட்டமிட்டவர்களை தேடி அலைகிறார்.
இது தெரியாத விக்ராந்த், ஜாமீனில் வெளியே வரும்போது சந்தீப் மீது கோபமாக இருக்கிறார்.
அவர்கள் யார்? எதற்காக கொல்ல திட்டமிடுகின்றனர்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
மாநகரம் படத்தில் ரசிகைகளை கவர்ந்த சந்தீப் தான் இதில் ஹீரோ. நல்ல உடல்வாகு. ஆறடி உயரம். என முறுக்கேறி வருகிறார்.
இவர் சும்மா வந்து நின்றாலே அடிக்க வந்தது போல் இருக்கும். ஆனால் ஆக்சன் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதற்கு பதிலாக உடும்பு பிடி பிடிச்சி எதிரிகளை கட்டியணைத்து கொள்கிறார்.
தன்னுடைய பழைய பார்முலாவிலேயே இருக்கிறார் விக்ராந்த். சீரியசான கேரக்டர்கள் அழுத்தமான முகம் என்றால் இவரை கூப்பிடுகிறார்களா? எனத் தெரியவில்லை.
மனிதர் சிரிக்கவே மாட்டார் போல. ஆனால் உடல் இளைத்து வளைத்து நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.
சூரி, அப்புக்குட்டி ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். மாவீரன் கிட்டு படத்தில் ஒரு டயலாக் கொடுத்தார் சூரிக்கு. இதில் கொஞ்சம் அதிகம். வேறு ஒன்றுமில்லை.
வில்லன் அடியாள்கள் போல வரும் அருள்தாஸ், தீலிபன் ஆகியோர் சிறப்பு.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அடிக்கடி வந்தாலும், சந்தீப் தான் ஸ்கெட்ச் போட்டு கண்டு பிடிக்கிறார். இன்ஸ்பெக்டர் நீயா நானா கோபிநாத்தின் உறவினர் போலவே இருக்கிறாரே? யார் அவர்?
ஹரிஷ் உத்தமன் தாடியுடன் வருகிறார். அவருக்கு மிரட்டலான கெட் அப் இதுதான். நன்றாக பொருந்தியிருக்கிறது.
போலீசுக்கு சந்தேகம் வராமல் எதையும் அசால்ட்டாக ஸ்கெட்ச் போடுவது ஹரிஷ் உத்தமனின் தனி ஸ்டைல்.
விக்ராந்த் காதலியாகவும் சந்தீப்பின் தங்கையாக வரும் ஷாதிகா தன் நடிப்பில் கெட்டி.
என்னடா இது ஹீரோயின் மெஹ்ரின் பத்தி சொல்லவேயில்லை என்கிறீர்களா? படத்திலேயும் ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால், மெழுகு பொம்மை போல அழகாக இருக்கிறார் மெஹ்ரின்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எச்சச்ச எச்சச்ச, ஏய் அரக்கா, அறம் செய்ய விரும்பு ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
இமான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு ஒரு பிஜிஎம் என்றால் ஹீரோவுக்கு ஒரு பிஜிஎம் நன்றாக இருக்கிறது.
லஷ்மன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், க்ளைமாக்ஸ் பைட் லைட்டிங்கும் ரசிக்க வைக்கிறது.
ஆனால் எடிட்டர் தன்னுடைய வேலையை நிறைய இடத்தில் மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
அந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை காட்சி எதற்கு? க்ளைமாக்ஸ் முடியும் நேரத்தில் பின்னர் வரும் அந்த கோயில் காட்சிகள் எதற்கு?
இயக்கம் பற்றிய அலசல்…
காதல், மோதல், குடும்பம், கமர்ஷியல் என அனைத்தையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால் சுசீந்திரன் படங்கள் என்றால் அதைப் பார்க்கும்போது ஒரு சுகம் இருக்கும். இதில் முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் இருக்கிறது.
மருத்துவத் துறையில் போலி டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற கான்செப் உடன் முதல் காட்சி தொடங்க, அதை ஹீரோ ஒரு சின்ன டயலாக் பேசி முடித்து வைத்துவிட்டார் என்பது பெரும் குறை.
நெஞ்சில் துணிவிருந்தால்… பார்க்கலாம்