தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி, மைம் கோபி, வேல ராமமூர்த்தி, பாலசரவணன் மற்றும் பலர்
இயக்கம் : பிஜி. முத்தையா
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா
படத்தொகுப்பு – பிரவீன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: பி.ஜி மீடியா ஒர்க்ஸ்
கதைக்களம்…
படத்தின் தலைப்பே சொல்லும் மதுரையில் நடக்கும் கதைக்களம் இப்படம்.
மதுரையில் இருந்து ஒரு தன் சின்ன வயதிலேயே மலேசியாவிற்கு செல்கிறார் சண்முகபாண்டியன்.
பெரியவன் ஆனதும் தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது அம்மாவுடன் அங்கு வருகிறார்.
ஆனால், தன் தந்தை சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளவே அங்கு வருகிறார்.
அத்துடன் தன் தந்தை உயிரை விட்டதும் நின்ற ஜல்லிக்கட்டையும் தன் தலைமையில் நடத்த முயற்சிக்கிறார்.
இதனிடையில் ஜாதியின் பெயரால் ஊரில் இரு தலைகள் மோதிக் கொள்கின்றனர். ஒருவர் வேலாராமமூர்த்தி. மற்றொருவர் மைம் கோபி.
இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினால் பல ஜாதி பிரச்சினைகள் உருவாகும் என தடுக்கின்றனர்.
இந்த பிரச்சினைகளை சண்முக பாண்டியன் எப்படி எதிர் கொண்டார்-? தந்தையை கொன்றவரை கண்டு பிடித்தாரா? ஆகியவையே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
சண்முகபாண்டியன் படத்தின் ஹீரோ இல்லை. கதையின் நாயகன். எனவே கதைக்கு எது தேவையோ? அதை செய்து இருக்கிறார்.
அவரின் உயரத்திற்கு ஏற்ற வகையில் அடிதடி என துவம்சம் செய்கிறார்.
ஆனால் டான்ஸ், ரொமான்ஸ், காமெடி ஆகியவற்றிலும் இன்னும் கவனம் தேவை.
சமுத்திரக்கனியும் சரி. அவரது வசனங்களும் சரி செம கம்பீரம். ஜல்லிக்கட்டுக்காகவும் விவசாயத்திற்காகவும் ஊரின் ஒற்றுமைக்காகவும் இவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.
கதைநாயகியாக மீனாட்சி. கதை தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார்.
பாலசரவணனனின் டைமிங் காமெடி நன்றாகவே கைகொடுக்கிறது.
இவர்களுடன் மாரிமுத்து, பி.எல். தேனப்பன், வேல ராமமூர்த்தி, மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
மொட்ட ராஜேந்திரன் இருந்தும் காமெடியில்லை. அவர் கபாலியை கலாய்ப்பதை மட்டுமே செய்துள்ளார்.
சண்முக பாண்டியனின் நண்பர்களாக வரும் அருண்ராஜா மற்றவர்களும் சிறப்பு.
சண்முக பாண்டியனின் தாய் மாமனாக வரும் யோகேஷ் கிருஷ்ணா நம் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு முதல் படம் என்றாலும் நடிப்பில் தேர்ச்சி தெரிகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கிராமத்து மண்வாசனை ரகம்.
பின்னணி இசை ஜல்லிக்கட்டு காளைக்கு கொம்பு சீவியது போன்ற ஒரு ஈர்ப்பு.
படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பி.ஜி முத்தையா தான்.
எனவே தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டங்களை காட்டி இரண்டாம் பாதியை ஓட்டி விட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தின் போது விஜயகாந்த், விஜய் கொடுத்த வீடியோக்கள் ஒரு பாடலில் வருகிறது.
முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் பின்பாதியில் குறைகிறது.
சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற ட்விஸ்ட் நன்றாக உள்ளது. ஆனால் அந்த வில்லன் முடிவு ரசிக்கும்படியாக இல்லை. அதிரடியாக கொடுத்திருக்கலாம்.
மதுரவீரன்.. ஜல்லிக்கட்டு காளை