தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கார்த்தி, அதிதி ராவ், ஆர் ஜே பாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி மற்றும் பலர்.
இயக்கம் : மணிரத்னம்
இசை : ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ரவிவர்மன்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம்
கதைக்களம்…
ஒரு சில படங்களை மட்டுமே நாம் இயக்குனருக்காக பார்ப்போம். அதில் முக்கியமான நபர் மணிரத்னம். அவரை மட்டும் நம்பி இப்படத்திற்கு செல்லலாம்.
ஏர் போர்ஸ் போர் பிரிவில் ஹீரோ கார்த்தி (வருண்)க்கு வேலை. 1999ஆம் ஆண்டில் கார்கில் போரில் சண்டையிடும் போது பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கி கொள்கிறார்.
அதன்பின், தன் காதலி லீலா (ஆர்மி டாக்டர்) நினைத்து நினைத்து அவளை காண தப்பித்து செல்கிறார்.
அதன்பின் என்ன ஆனது.? காதலியை எப்படி கண்டுபிடித்தார்? பாகிஸ்தான் ராணுவம் அவரை என்ன செய்தது? மீண்டும் இந்தியா வந்தாரா? என்பதே கதை.
கேரக்டர்கள்…
பைலட் வருணாக படம் முழுவதும் பளிச்சென்று வருகிறார் கார்த்தி. படத்தின் ஒரு காட்சி மட்டுமே அந்த போர் காட்சிகள்.
படத்தின் முக்கால்வாசி மணிரத்னம் ஹீரோவாக வருகிறார். சில காட்சிகளில் கவுதம் மேனன் பட ஹீரோ போல மைண்ட் வாய்ஸில் (வாய்ஸ் ஓவர்) பேசிக் கொண்டே இருக்கிறார்.
மற்றபடி படம் முழுவதும் தென்றல் போல வரும் ரொமான்ஸ் காட்சிகள்தான்.
ஹீரோயின் அதிதி ராவ்.. காஷ்மீர் பனியை விட பளீரென்று வருகிறார். பெண்களுக்கே உரித்தான அதே சமயத்தில் தன் சுயகௌவரத்தை விட்டுக் கொடுக்காத கேரக்டரில் ஜொலிக்கிறார்.
வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாலும், காதலனை நம்பாமல் தன்னை நம்பி வாழும் கேரக்டரில் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.
ஆனால் ஏதோ ஹாலிவுட் பட ஹீரோயினை பார்ப்பது போன்ற உணர்வு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
அட படத்துல ஆர்.ஜே. பாலாஜி இருக்காருல்ல.. என்று வார்த்தையில் மட்டுமே சொல்லலாம். மணிரத்னம் படத்தில் நடித்தேன் என்று அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
இவர்களை தவிர மற்ற கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும், காதலர்களுக்கு மட்டுமே முழுப்படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
என்னடா இது படம் மெதுவாக செல்கிறதே என்ற எந்தவிதமாக சலிப்பை கொடுக்காமல் காஷ்மீரின் இயற்கை அழகை போதும் போதும் என்கிற அளவுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
ஓவியர் ரவிவர்மனை போல கேமரா ஓவியராக தெரிகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
ஒரு காட்சியில் அதிதியை கார்த்தி பிரியும்போது, காரின் லைட் வெளிச்சத்தில் அந்த காட்சியை கவிதையாக்கி இருக்கிறார்.
அதுபோல் பனிச்சரிவில் காதலர்கள் சண்டைபோடும்போது, அட நாமளும் இங்கே நிச்சயம் போகனும் என மனசு துடிக்கிறது.
போர் விமானம் பறக்கும் காட்சியில் காற்றை கிழித்துக் கொண்டு போவது என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் இசையில் அழகே மேரி மீ மேரீ மீ மற்றும் வான் வருவாய் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
போர் காட்சியில் தொடங்கி, கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் என பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.
இயக்கம் பற்றிய அலசல்…
எப்போதும் மணிரத்னம் படத்தில் இருட்டாகவே இருக்கும். ஆனால் இதில் முதன்முறையாக படம் முழுவதும் ப்ரைட் மணிரத்னத்தை பார்க்கலாம்.
உயிரைக்கொல்லும் போர் வீரன். உயிரை காக்கும் டாக்டர். இருவருக்கும் ஒரு காதல். அதில் சில மோதல் என ஒன்லைன் வைத்து படம் முழுவதும் ஆட்சி செய்கிறார் மணிரத்னம்.
கார்த்தியின் அண்ணன் காதலியை கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்வதும், அதில் வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக கொண்டாடுவதும் எல்லாம் இந்தியாவில் நடக்கிறதா?
சரி அவருடைய காதல்தான் அப்படியென்றால் கார்த்தியின் காதலையும் க்ளைமாக்ஸில் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது? எல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்குமா? என்று தெரியவில்லை.
காற்று வெளியிடை.. காதல் ஓவியம்