தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
2006 ஆண்ட நடந்த +2 பொது தேர்வில் 1200க்கு 1156 மார்க் எடுக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அந்த மார்க்கை பார்த்தால் அப்பா திட்டுவார் என பயப்படுகிறார்.
அந்த நேரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஆப்ரேசனுக்காக 1 லட்சம் தேவைப்படுகிறது. அப்பாவின் உயிரை காப்பாற்ற பணத்துக்காக தன் மார்க் ஷீட்டை விற்றுவிடுகிறார்.
உயிர் பிழைத்த அப்பா இவரை திட்டி வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். இதனால் தவறான வழியில் செல்கிறார் சிவகார்த்திகேயன்.
டூப்ளிகேட் மார்க் ஷீட்டுக்களை பிரிண்ட் செய்வதும் பெரிய பெரிய காலேஜ்ஜில் சீட்டுக்களை பெற ப்ராடு செய்வதுமாக இருக்கிறார்.
அப்போது தான் தன் தங்கை போன்ற இவானாவுக்கு உதவ நினைக்கிறார். அவரை ஏரோ நாட்டிக்கல் படிக்க வைக்க நினைக்கிறார். ஆனால் மார்க்கோ குறைவாக எடுத்துள்ளார்.
அந்த சூழ்நிலையில் பெயில் ஆன மாணவர்களை வைத்து அர்ஜீன் நடத்தும் பயிற்சி கூடத்தில் இவானா கண்டுபிடித்த சால்ட் வாட்டரில் ஓடும் மோட்டார் இருப்பது தெரிய வருகிறது.
அதனை வைத்து சீட்டும் வாங்குகிறார் சிவா. ஆனால் இவானா கண்டுபிடிப்பு மெஷின் நிஜமல்ல பொய் என வழக்கு போட அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.
இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாற நினைக்கிறார். அப்படி என்ன செய்தார்? அர்ஜீன் யார்? கல்வி சிஸ்டமே சரியில்லாத இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் சிவா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
வேலைக்காரன் சாயலில் சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு படம் இது. படம் முழுவதும் சீரியசாகவே இருக்கிறார். முகத்தில் வேற ப்ரெஷ்னஸ் இல்லை. ரொமான்ஸ் சுத்தமாக இல்லை. ஆக்சனும் பெரிதாக இல்லை. அடி வாங்குகிறார்.
திறமை இருக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால் நம் நாட்டின் நிலைமை என்னாகும் என பேசும்போது இளைஞர்களிடம் கைதட்டு வாங்குகிறார். அவரிடம் இருக்கும் கலகலப்பு இதில் மிஸ்ஸிங்.
கல்யாணி பிரியதர்சன் நாயகியாக நடித்துள்ளார். அழகாக அறிமுகம் தமிழில். ஆனால் ரொம்ப சின்ன பெண்ணாக இருப்பதால் சிவாவுக்கு ஜோடியாக செட்டாகவில்லை. அதுபோல் அவரது டப்பிங் குரலும் நான் சிங்கியே செல்கிறது.
ஆக்சன் கிங் அர்ஜீன் அசத்தல். ஒரு மனிதனை அழித்தாலும், அவனுடைய ஐடியாலஜியை அழிக்க முடியாது என அவர் கொடுக்கும் பயிற்சிகள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு.
பெயில் ஆன மாணவர்களுக்கு அவர்களின் திறமை அறிந்து பயிற்சி கொடுத்தபின் அவர்களை வெளிநாட்டுக்கு அர்ஜீன் பேக் அப் செய்வது ரொம்ப ஓவர்.
இளைஞர்கள் நம்பும் அவர் இந்தியாவை நம்பவில்லை. அது சிவகார்த்திகேயன் வந்து சொன்ன பின்புதானா அவருக்கு தெரியும்.? சில காட்சிகளை பார்க்கும்போது ஜென்டில்மேன் படம் நினைவுக்கு வருகிறது.
ரோபோ சங்கர் இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை. இதில் நாங்களே சிரிச்சிக்கிறோம் என அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள்.
வில்லனாக அபேய் தியோல் மிரட்டலான நடிப்பு. மாணவர்கள் படிக்கலாம். ஆனால் கற்கக்கூடாது என்று இவர் எடுக்கும் முடிவுகள் நாட்டில் கல்வியின் வியாபார ஊழலை காட்டுகிறது.
மதியாக நடித்துள்ள இவானா கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். அப்பாவியான முகம். அழகான தேர்வு. அருமையான கண்டுபிடிப்பு.
இவர்களுடன் அழகம் பெருமாள், குமரவேல், நளினா, ரிஷிகாந்த் ஆகியோரும் உண்டு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பொன் பார்த்திபன் மற்றும் அந்தோனி பாக்யராஜின் வசனங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும்.
யுவனின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி பெரிதாக கை கொடுக்கவில்லை. என்னாச்சு ப்ரோ..? க்ளைமாக்ஸ் பாடல் மட்டும் ஓகே.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.
கலையை செல்வகுமார் செய்துள்ளார். கண்டுபிடிப்புகள் சாதனங்களை அவர் செய்த விதம் பாராட்டுக்குரியது.
இரும்பு திரை படத்தை இயக்கிய மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் செல்போன் ஆபத்தை கூறியிருந்தார்.
இதில் நாம் படிக்கிறோம் ஆனால் கற்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். அவரும் ஓரிரு காட்சியில் நடித்துள்ளார்.
கல்வி ஊழலை ஒழிக்க திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
மாணவர்களை பெருமளவில் வைத்திருக்கும் இந்தியாவில் வெறும் 12000 கண்டுபிடிப்புகளே உள்ளன. ஆனால் அந்த மாணவர்களை கூட யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பதை முறையாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் அதை சூப்பர் ஹீரோ கதையாக வைத்து சொல்ல முற்பட்டு கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூட லாஜிக் இல்லாமல் மேஜிக் போல சொல்லிவிட்டார் என்பது தான் மைனஸ் ஆக அமைந்துவிட்டது.
அதற்கு சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்திருப்பது கூட குறையாகவே உள்ளது. சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ என சொல்லி முடித்துள்ளார். கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த ஹீரோவை பிடிக்கும்.
மற்றபடி நம்மில் எத்தனை திறமையானவர்கள் இருந்தாலும் நம் சிஸ்டம் சரியாகும் வரை ஒன்றும் நடக்க போவதில்லை.
ஆக இந்த ஹீரோ…. சிஸ்டம் சரியில்ல..