தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய அளவில் சிறந்த படமாக சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது.
சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் சூர்யாவும் (சூரரைப் போற்று), நடிகர் அஜய் தேவ்கனும் (தனாஜி:தி அன்சங் வாரியர்) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுக்கான வெள்ளித்தாமரையையும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் இருவரும் பகிர்ந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகையாக ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர் விருதை (பின்னணி இசை) ‘சூரரைப் போற்று’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறுகிறார்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
ஆக 5 விருதுகளை ‘சூரரைப் போற்று’ படம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூர்யா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வணக்கம்..
அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.
மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.
தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..
அன்புடன்,
சூர்யா.
23.07.22
இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Won 5 National Awards for ‘Soorarai Pottru’