தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்…
இப்படத்தின் இசையமைப்பாளர் ஜான் பீட்டரிடம் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். ஒரு பாடகர் இருக்கிறார். இயக்குநர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இப்படி அவரிடம் பல முகங்கள் இருக்கிறது.
அவரிடம் இருக்கும் நல்ல மனசின் காரணமாகத்தான் சிக்கலான தருணத்தில் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீயை சீரியல்களில் பார்த்திருக்கிறேன். அருமையாக நடிக்கிறாரே…! இவர் ஏன் சினிமாவுக்கு வரவில்லை? என யோசித்திருக்கிறேன்.
அவரை சந்தித்து கேட்டபோது, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் அதன் பிறகு தான் அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் என்றே எனக்கு தெரியும்.
தந்தையின் பெயரை சொல்லி வாய்ப்பு கேட்காமல், தன் சுய முயற்சியால் இந்த உயரத்தை அவர் தொட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஸ்ரீயிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும். ஏதோ ஒரு தடை இருக்கிறதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு கலைஞருக்கு அவருடைய தன்மானம் தான் பெரிய தடை. தன்மானத்தை அதிக அளவில் வைத்திருந்தால் வாய்ப்பு கிடைக்காது. தன்மானத்தை கைவிட்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தப் படத்திற்கு பாடல் எழுதி இருக்கும் பாடலாசிரியர் இளைய கம்பன் என்னுடைய நண்பர். திறமையானவர். இளைய கம்பன் என்ற பெயரே அவர் மீது எனக்கு இருக்கும் பெரிய ஈர்ப்பு.
திரையுலகில் கதாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். ஏனெனில் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளர் மெட்டமைத்தாலும்.. பின்னணி பாடகர்கள் பாடினாலும்.. அதற்கு கதையை அறிந்து… சூழ்நிலை அறிந்து… பாடல் வரிகளை எழுதும் கவிஞர்கள்தான் முக்கியம்.
படமே எடுக்காமல் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டிருக்கும் மோசடி பேர்வழிகளை… ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் ‘என ஊடகங்கள் விவரிக்கிறது.
இதனை நிஜமாகவே படமெடுக்கும் இயக்குநர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் திரைப்பட இயக்குநர் என்ற வார்த்தையை இணைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனம் என்னைக் கவர்ந்திருக்கிறது. சட்டத்திற்கும் போலீஸிற்கும் நல்லவர்கள் தான் பயப்படுகிறார்கள்.
சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசுக்கு தர வேண்டியது கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.
சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசை மதிப்பதே இல்லை. யார் ஆட்சி செய்தாலும் போலீஸ், போலீசாக இருக்க வேண்டும்.
கடன் கொடுப்பவர்கள் பணத்தை கொடுக்கும் வரை கடவுளாக தெரிகிறார்கள். கடன் கொடுத்த பிறகு கடன்காரன் கடன் கேட்டு வந்தால், ‘சகுனம் சரியில்லை’ என்று கடன் காரன் கூறுகிறான். இதுபோன்ற நன்றிகெட்ட சூழலில் தான் நான் தற்போது வாழ்கிறோம்.
குடியால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை இயக்குநர் ‘ஈடாட்டம்’ மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
We are living in worst world says Perarasu