தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு காலத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட கமல்ஹாசனை இன்று உலக சினிமா போற்றும் உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.
தனது 4 வயதிலேயே தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்றும் அதே உற்சாகத்தோடு புதுமைகளை செய்து வருகிறார்.
இந்திய ரசிகர்களால் இவர் கலைக்கடவுளாக பார்க்கப்படுகிறார். இன்று அவர் தன் 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
எனவே அவரைப் பற்றிய சில சுவையான குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்….
இவர் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் இவருக்கு உண்டாம்.
ஆனால் இவரிடம் நடிப்பு பயில ஆயிரக்கணக்கான நடிகர்கள் காத்து இருப்பது வேறுகதை.
நான்கு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் கமல். படிப்பைத் தவிர்த்து கலைகளில் அதிகம் ஆர்வம் இருந்ததால் அதில் சிறுவயதிலேயே ஈடுபட்டார். பின்னர் தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
உலகநாயகன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மாணவன் (1970)
தமிழ் சினிமாவில் முதன்முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. படம்: சட்டம் என் கையில்.
நடிப்பைத் தவிர, பல படங்களில் பாடல்கள் எழுதியும் இருக்கிறார் பாடியும் இருக்கிறார். மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடியிருக்கிறார். இதுவரை கிட்டதட்ட 62 பாடல்களை பாடியுள்ளாராம்.
பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரின் இயக்கத்தில் நடித்திருந்தாலும் மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கவில்லை.
கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும் (அண்ணன் மகள்), ஆக மூன்று பேருமே தேசிய விருதை வென்றவர்கள்.
கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள்.
அப்போது அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா ஆகியோரை அழைத்து, என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று கூறி அவர்களையும் கொள்ளி வைக்க சொன்னார் கமல்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.
அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன். இவ்விருதை பிரான்ஸ் அரசாங்கம் ஆகஸ்ட் 21, 2016 அன்று அறிவித்தது.
திரைத்துறை மட்டுமில்லாமல், இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை அனைத்தையும் அறிந்தவர்.
கமல்ஹாசன் முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பதால் பல படங்களுக்கு நடனக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ரஜினியும் நானும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவர்கள் என்று அடிக்கடி கூறுவார்.
அதே சமயம் கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி எங்களிடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் இருக்கும் என்பார்.
சினிமாவின் ஒரே காலக்கட்டத்தில் இரு பெரும் துருவங்களாக இருந்தாலும், இவர்களும் இருவரும் நட்பு பாராட்டி வருவது எல்லா தலைமுறை நடிகர்களுக்கும் ஆச்சரியம்தான்.
நடிப்பு, நடனம் என்று இல்லாமல் இயக்கம், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ளவர் கமல்.
தமிழ் இலக்கியத்தில் மீது இவருக்கு காதல் இருந்ததால் ‘மையம்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இந்த இதழை இவரது நற்பணி மன்றம் தற்போது இயக்கி வருகிறது.
பல மொழிகளில் ஏறக்குறைய 70 பாடல்கள் பாடியுள்ளார். இவர் நடித்த 6 திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன.
இவர் 10 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. ‘நந்தி’ உட்பட 4 விருதுகளையும் பெற்றுத் தந்தது.
மேலும் தனது ரசிகர் மன்றம் மூலமாக சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். ரசிகர்களையும் ஈடுப்படுத்தி வருகிறார். சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் இவர் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘ஹ்ருதயராகம் 2010’ என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஒரு அனாதை இல்லத்தை அமைத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி உதவி அளித்தும் வருகிறார்.
அவ்வை சண்முகி என்ற படத்தில் முழு பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் இருந்தார.
தன் குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1978ஆம் ஆண்டில் வாணி கணபதியை மணமுடித்த கமல் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து செய்தார்.
பின்னர் நடிகை சரிகாவை மணமுடித்தார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் இப்போது நடிகைகளாக உருவெடுத்துள்ளனர். பின்னர் சரிகாவும் கமலிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார்.
அதன்பின்னர் நடிகை கௌதமியுடன் 12 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். தற்போது அவரையும் பிரிந்து விட்டார்.
திரையுலகில் 50 வருடங்களாக நடித்து வந்தாலும் சமூகம் சார்ந்த அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
ஆனால் முதன்முறையாக ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தின் விளம்பரத்தில் இந்தாண்டு நடித்தார்.
மேலும் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் டிவியில் நடுவராக பணியாற்றினார்.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கமல் ஒருவர் மட்டுமே காரணம்.
இதுநாள் வரை உலகநாயகனாக அறியப்பட்ட கமல், இந்தாண்டு 2017 முதல் ட்விட்டர் நாயகனாகவும் புகழ் பெற்றார்.
அதில் தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார். இதனையடுத்து பல எதிர்ப்புகள் உருவாகவே தன் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
அதன்முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன் தன் ரசிகர்களை சந்தித்து பேசினார்.
அதன்படி தன் அரசியல் வருகையை உறுதியும் செய்துவிட்டார்.
இன்று பிறந்தநாளில் கமல் தன் ரசிகர்களை இணைக்க ஒரு புதிய மொபைல் செயலிலை அறிமுகப்படுத்துகிறார்.
விரைவில் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
உலகநாயகன் அரசியல் அரங்கிலும் நாயகனாக உயர வாழ்த்துகிறோம்.
கமல்ஹாசன் பெற்ற விருதுகளில் சில…
தனது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
1990ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
20 முறை ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
பத்ம ஸ்ரீ செவாலியே கமல்ஹாசன் அவர்களை ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துகிறோம்.