தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.
இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.
விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
*தொழில்நுட்பக் குழு*
ஒளிப்பதிவாளர் : சோட்டா K நாயுடு
தொகுப்பாளர்: VT விஜயன்
கலை இயக்குனர்: GK
சண்டை பயிற்சி: FEFSI விஜயன்
வரிகள்: கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து
கூடுதல் தகவல்கள்…
2000 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு இதுதான் முதல் ரஜினி படம்.
1999இல் வெளியான ரஜினியின் படையப்பா படத்திற்கு பிறகு வெளியான படம் தான் பாபா. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு தான் இந்த படம் வெளியானது.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படம் வெளியானதால் இந்த படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பாபா செய்திகள் என்று பல நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்திகள் வெளியானது.
மேலும் பாபா வெளியான சமயத்தில் பாமக கட்சியால் நிறைய பிரச்சனைகள் உருவானது. ரஜினி புகைப்பிடிப்பதால் இளைஞர்கள் சீரழிவதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாமக கட்சி.
மேலும் பாபா வெளியான தியேட்டர்களில் படப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடியதால் நிறைய திரை அரங்குகளில் படம் நிறுத்தப்பட்டது.
அன்று முதல் ரஜினி ரசிகர்களுக்கும் பாமக கட்சிக்கும் இடையே பெரும் மோதல்கள் உருவானது.
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது. தனது நிஜ வாழ்க்கையில் ஆன்மீகவாதியாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் ‘பாபா’ படத்தில் நாத்திகவாதியாக நடித்திருந்தார்.
எப்போதுமே ரஜினி படத்தை ரசிகர்கள் அவரது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள். எனவே இந்த படம் மிகப்பெரும் தோல்வியை அடைந்தது.
இதனால் விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் ரஜினியிடம் பணத்தை திருப்பி கேட்டனர். இதனை அடுத்து ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார்.
உலக சினிமாவிலேயே முதன்முறையாக படம் நஷ்டை அடைந்ததால் பணத்தை திருப்பி கொடுத்து நடிகர் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் ரஜினிகாந்த் அடைந்தார் என அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
பாபா படம் தோல்வியால் ரஜினியின் சினிமா பயணம் முடிந்தது என சிலர் பேசத் தொடங்கினர். எனவே தான் சந்திரமுகி பட விழாவில்..” நான் யானை அல்ல குதிரை.. விழுந்தால் டக்குனு எழுந்திருவேன்.” என ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். அதுபோல சந்திரமுகி படமும் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்த ஒன்றுதான்.