தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : அசோக் செல்வன், பிரியா ஆனந்த், பாலசரவணன், மாரிமுத்து, சமுத்திரக்கனி, நாசர், அனுபமா, ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : ஞானவேல்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: லியோ ஜான்பால்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : டிரீம் வாரியர்ஸ் எஸ்ஆர் பிரபு
கதைக்களம்…
பொதுவாக பல படங்களில் பர்ஸ்ட் பென்ச் மாணவனே ஹீரோவாக இருப்பார். அல்லது கடைசி பென்ச் மாணவன் அதிக கவனிக்கப்படுவான்.
சினிமாவில் மட்டுமில்லை. நம் வாழ்க்கையில் கூட இப்படி நடந்திருக்கும். ஆனால் இந்த படம் மிடில் பென்ச் மாணவனும் அவனது வாழ்க்கையும்தான்.
யாருக்கும் அதிக பரிச்சயமில்லாத கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறார் அசோக்செல்வன். ஜர்னலிசம் படிக்கும் இவருக்கு அனைத்திலும் முதல் மாணவி பிரியா ஆனந்த் மீது காதல்.
அவரிடம் காதலை இவர் சொல்ல, என்னை நீ காதலிக்க காரணம் இருக்கு. ஆனால் நான் உன்னை காதலிக்க என்ன காரணம் இருக்கு. நீ என்ன சாதித்துவிட்டாய்? என கேட்கிறார்.
இதன்பின்னர் அசோக் செல்வன் முன்னேறிவிடுகிறார் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.
அதுதான் இல்லை. இவருக்கு தெரியாமலே இவர் முதல் மாணவனாக வந்து, பெரியளவில் பேசப்படுகிறார்.
இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? எப்படி சாத்தியமானது? அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டாரா அசோக் செல்வன்? பின்னர் என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கேரக்டர்கள்…
அமைதியான நடிப்பு ஆனால் அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன். தன் கண்முன்னே தவறு நடந்தாலும் அதை கண்டுக் கொள்ளாத சராசரி மனிதனாக தன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றி ஜெயித்திருக்கிறார்.
பிரியா ஆனந்த், அழகான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் முகமெல்லாம் வீங்கியது போல உள்ளது. ஸ்லிம் ஆனதால் நல்லது.
பாலசரவணன் தன் பந்தை சரியாக வீசி அடிக்கடி கவுண்டர் கொடுக்கிறார். பல இடங்களில் இவரது காமெடி கைத்தட்டலை அள்ளுகிறது.
தாதாவாக காட்டப்படும் இன்னும் மிரட்டியிருக்கலாம். ஆனால் அவரும் சாந்தமாக வந்து செல்கிறார்.
ஜான்விஜய், நாசர், அனுபமா, பக்ஸ் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
நிவாஸ் கே பிரசன்னா இசையில் ஏன்டா இப்படி எனக்கு மட்டும் பாடல் ரசிக்க வைக்கிறது. அதன் பாடல்வரிகள் இரண்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றியிருப்பது சிறப்பு.
எஸ்பிபி வாய்ஸ் இன்னும் கூடுதல் பலம்.
பிகே. வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. க்ளைமாக்ஸ் இண்டர்வியூ காட்சிகள் நம்மை உருக வைக்கிறது.
இயக்கம் பற்றிய அலசல்….
படம் எதை நோக்கி செல்கிறது. இது எந்த மாதிரியான கதை என நாம் குழம்பும் நேரத்தில், சரியான ரூட்டில் அழைத்து சென்று நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.
ருசிக்கு சாப்பிடும் பல பேர். பசிக்கு சாப்பிடும் பல பேர். இந்த வேறுபாட்டை காண்பித்து, இனி உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை நம்மில் விதைக்கிறார்.
பெரும்பாலும் நாம் நட்சத்திரங்களை பிரபலங்களை மட்டும்தான் பார்க்கிறோம். கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனும் சாதனையாளன்தான். ஆனால் அவனை நாம் கவனிப்பதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கூட்டத்தில் ஒருத்தன்…. சாதனையாளன்.