தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது…
“இயக்குநர் வசந்தபாலன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார்.
நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்.”
இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா பேசியதாவது…
“‘புதுமைப்பித்தன்’ மற்றும் ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நான் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றினேன்.
இடைப்பட்ட காலத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ‘ஜெயில்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் வசந்த பாலன் எனக்கு வழங்கினார்.
ஒரு நாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், ‘அநீதி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் வசந்த பாலன் அவர்களே மிகச் சிறந்த எழுத்தாளர். அது மட்டும் இல்லாது தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவருடனும் அவர் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.
அப்படி இருக்கும்போது என்னை நம்பி படத்தின் வசனப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மனமுவந்து செய்து கொடுத்தார்கள்.
நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். நடிகவேள் எம் ஆர் ராதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கு பிறகு தனித்துவமான குரலை அர்ஜுன் தாஸ் கொண்டிருக்கிறார்.
இந்த ‘அநீதி’ நீதிக்கானது. அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”
நடிகர் பரணி பேசியதாவது…
“இயக்குநர் வசந்த பாலனோடு பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. சமூக பொறுப்பு மிகவும் கொண்ட படைப்பாளி அவர்.
‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று நான் வணங்கும் முருகனிடம் மனமார வேண்டுகிறேன். நன்றி.”
நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசியதாவது…
“‘அநீதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை வசந்த பாலன் அவர்கள் அழைத்த போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்படத்திற்காக முடியை மிகவும் நீளமாக வளர்த்து வைத்திருந்தேன்.
பெருந்தன்மையுடன் அதே தோற்றத்தில் என்னை இப்படத்தில் நடிக்க அனுமதித்ததற்காக வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.”
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் பேசியதாவது…
“‘எந்திரன்’ படத்தில் மேக்கிங் கேமராமேனாக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வசந்த பாலன் அவர்கள் என்னை அழைத்த போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது.
ஆனால் முதல் சந்திப்பிலேயே அவர் மிகவும் நட்பாக பேசி படம் குறித்து விவரித்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”
எடிட்டர் ரவிக்குமார் பேசியதாவது…
“இந்த திரைப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு இதுவரை நான் நன்றி தெரிவிக்கவில்லை. இந்த மேடையில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறந்த படத்திற்கு நல்லதொரு டீம் தானாக அமைந்து விடும் என்பார்கள், அது ‘அநீதி’ திரைப்படத்திற்கு நடந்துள்ளது.”
Celebrities highlight speech at Aneethi press meet