தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், பவன், ராதாரவி, டேனியல் பாலாஜி மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டர் – வெங்கடேஷ் மற்றும் ராமர்
இயக்கம் – வெற்றிமாறன்
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ. – ரியாஸ்
கதைக்களம்….
வன்முறையும் வட சென்னை மக்களின் வரலாறும் இப்படத்தின் தான் ஒன்லைன்.
படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனியும் அவரது கூட்டாளிகள் கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் அந்த கொலையை செய்கின்றனர்.
அதன்பின்னர் சின்ன குற்றத்திற்காக தனுஷ் ஜெயிலுக்கு செல்கிறார். பின்னர் வாய்ஸ் ஓவரில் ஜெயிலுக்குள் நடக்கும் கோடிக்கணக்கான கஞ்சா தொழில் முதல் பணப் பரிமாற்றம் வரை அத்தனையும் சொல்கிறார்கள்.
பின்னர் ஒவ்வொருவரின் கேரக்டர் பற்றிய சுவராஸ்யத்தை உடைக்கிறார் டைரக்டர். அதற்காக 1980 முதல் ஆரம்பித்து 2003 வரை கதைக்களம் அமைத்து இருக்கிறார்.
அவை எல்லாம் சொல்லிவிட்டால் சில சுவாரஸ்யங்கள் இருக்காது. நாம் பல சினிமாக்களில் பார்த்து பார்த்து பழகின போன கதை தான்.
வடசென்னையின் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சி செய்யும் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் கதை.
இதனிடையில் கேரம்போர்டு வீரராக நுழையும் அன்பு என்ற தனுஷ் எப்படி அந்த வடசென்னையை மாற்றி அமைக்கும் கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.
புத்தகத்தில் வரும் பாகங்கள் போல, திரைக்கதையை தனி தனி பாகங்களாக பிரித்துள்ளார். கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றை மாறி மாறி காட்டியுள்ளார்.
இடையில் கதையின் முக்கிய முடிச்சுகளை அவிழ்த்து விட்டு திரைக்கதையை ரசிகன் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.
முதல் பார்ட்டில் தனுஷின் ஆரம்ப கால காதல், ஜெயில் கதைகளே வருகிறது. இரண்டாம் பார்ட்டில்தான் அத்தனையும் காட்டப் போகிறார் வெற்றிமாறன்.
கேரக்டர்கள்…
ஏற்கெனவே தனுஷ் மீது ரசிகர்களுக்கு அன்பு அதிகம். அவர்கள் இந்த அன்பு கேரக்டரை பார்த்தால் இனி அன்பை விடவே மாட்டார்கள். கேங்ஸ்டர் கதை என்றாலும் இதில் தன் அருவாளை அவ்வளவாக பயன்படுத்தவில்லை.
மாறாக ரொமான்ஸில் ஐஸ்வர்யாவை கட்டம் கட்டிவிட்டார். விட்டால் கிஸ் அடிப்பதில் கமலுக்கு போட்டியாக தனுஷ் வந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
அப்பாவியாக இருந்து படிப்படியாக கேங்ஸ்ட்ராக உயர்வது என தன் தோற்றத்துக்கு ஏற்ப தனுஷ் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
சாமி ஸ்கொயரில் மாமி கேரக்டரில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் தன் பெயரை ஒரு படி மேலே எடுத்துச் சென்றுள்ளார். பத்மா கேரக்டரில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
ராஜன் கேரக்டரில் அமீர். குணா கேரக்டரில் சமுத்திரக்கனி. செந்தில் கேரக்டரில் கிஷோர். சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா. என ஒவ்வொருவரும குறையே சொல்ல முடியாத படி வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.
தாதாவின் மனைவிகள் எப்படி இருப்பார்கள்.? சைலண்ட்டாக இருந்து காயை நகர்த்துவதில் ஆண்ட்ரியா அசத்தல். அமீரின் மனைவியாக இருப்பவர் எப்படி சமுத்திரக்கனியை வளைத்தார் என்பது எல்லாம் செம ட்விஸ்ட்.
வழக்கமான பெரியவர் கேரக்டரில் ராதாரவி. அதட்டல். அசத்தல்.
நாம் வழக்கமாக பார்க்கும் டேனியல் பாலாஜி இதில் வித்தியாசம் காட்டியுள்ளார். ப்ளாஷ்பேக்கில் வேறுமாதிரியாகவும் நிகழ்காலத்தில் சாமியார் போன்றும் வேறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார். பவன் கேரக்டரும் பளிச்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இருவரும் வடசென்னைக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களை படத்துடன் ஒன்ற வைக்கிறது. மேலும் பின்னணி இசையில் செம மிரட்டல். சந்தோஷமய்யா சந்தோஷ்.
ஒவ்வொரு ஆங்கிளையும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் வேல்ராஜ்.
கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். அந்த காலத்து லைட், போஸ்டர், கிரைண்டர், போன் முதல் வரை ஆண்கள் ஆடை, ஆண்கள் முடி அலங்காரம் வரை பார்த்து பார்த்து வைத்துள்ளனர்.
இயக்கம் பற்றிய அலசல்…
வடசென்னை மக்களின் வாழ்க்கை, அவர்களின் பேச்சு வழக்கம், பொழுதுபோக்கு, தொழில், மனைவி, மக்கள், அரசியல்வாதிகளின் சதி வேலை என ஒவ்வொன்றையும் இன்ச் பை இன்ச் ஆக சொல்லிவிட்டார்.
சதுரங்க ஆட்டத்தில் உள்ள காய் போல ஒவ்வொரு கேரக்டரையும் நகர்த்தி அதற்கான திரைக்கதை அமைத்து நம்மையும் அந்த ஆட்டத்தில் சேர்த்து வெற்றி காண்கிறார் டைரக்டர்.
இனி எவரும் வட சென்னை மக்களின் வாழ்க்கை என்று எதையும் புதிதாக சொல்லிவிட முடியுமா? தெரியல. ஒருவேளை புதிய டைரக்டர் எடுக்க வந்தால் வடசென்னையில் வெற்றிமாறன் காட்டிட்டாரே என்று ரசிகனே சொல்லிவிடுவார்கள்.
இதன் க்ளைமாக்ஸ் “வட சென்னை 2 – அன்புவின் எழுச்சி” குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.
ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ப்ளாஷ்பேக் இருப்பதால் வன்முறை விரும்பாத சிலர் பொறுமை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இது 18க்கு வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படமே. வடசென்னை மக்களின் வாயில் இருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? வரும் என்பது வியக்க வைக்கிறது. அதிலும் பெண்கள் பேசும் அந்த பச்சை பச்சை வார்த்தைகள் மகா கொடுமை.
இந்த படத்தை பார்த்தால் பாளையங்கோட்டை, புழல் ஜெயிலிக்குள் சென்று ஜெயில் வாழ்க்கை வாழ்ந்த உணர்வு ஏற்படும்.
தயவுசெய்து பள்ளி மாணவர்கள், மாணவிகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்.
வடசென்னை… வசீகரிக்கும் சென்னை
VadaChennai review rating