தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.
பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன், மஹானா ஆகியோர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது…
“இது துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஆயுதங்களுடன் பலர் நிற்கிறார்கள்.. நான் மட்டும் நிராயுத பாணியாக நிற்கிறேன். ஒவ்வொரு படத்திலும் இதை செய்யவேண்டி இருக்கிறது.
இப்படத்தை எடுக்க, விற்க, மக்களை படம் பார்க்க வரவழைக்க என மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கிறது. ஒரு படத்தில் கமர்சியல் நடிகை நடிக்கிறார் என போடும் செய்திக்கான முக்கியத்துவத்தை கூட ஒரு நல்ல படத்திற்கு இங்கே ஊடகங்கள் கொடுப்பது இல்லை. மக்களிடம் நல்ல சினிமாவை கொண்டு போவதற்கு பல தடைகள் இங்கே இருக்கின்றன.
எல்லா நடிகர்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு நல்ல படத்திலாவது நடிக்க வேண்டும். 500 கோடி வசூல் என்பதில் என்ன பெருமை ? நல்ல படங்கள் நிறைய வந்தால் சமூகம் மேலே வரும். எங்கே கலப்படம் எங்கே.. நல்ல சப்பாடு..
நல்ல பெட்ரோல் என்பதை மட்டும் சரியாக கண்டுபிடித்து அதை தேடி செல்கிறீர்களே.. அதேபோல நல்ல சினிமா எது என்பது உங்களுக்கு தெரியாதா ? பெரிய நடிகர் படம் என்கிற பெயருக்காகவே படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள்.
அதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு இருக்காதா?
நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா ?
இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன். ஆனால் எங்களுக்கு தண்டனை தான் கொடுத்து வருகிறீர்கள்.. எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அப்போதைய கமர்சியல் படம் என்றாலும் அதில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்துக்கள் சொல்லப்பட்டன.
ஆனால் இன்று மது விற்பனை தொகையை அறிவிப்பதை போலத்தான் சினிமா பட வசூல் விளம்பரமும் இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது ?
ஜி வி பிரகாஷ் அற்புதமான கலைஞன்.. யோகி பாபு இந்த மண்ணின் மைந்தன்.. சிறந்த கலைஞன். ஆனால் அவரை கிச்சுகிச்சு மூட்டத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
அதிதி பாலன் நடித்த அருவி படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன்.. அதை பார்த்தபின்பு இவ்வளவு தாமதமாக பார்க்கிறோமே என அவமானமாக இருந்தது.
இப்படத்தில் நடித்துள்ள விபின் லால் இந்திய சினிமாவில் ஒரு பெரிய இடத்தை இவர் பிடிப்பார். இவர் தேசிய நாடகப்பள்ளி (NSD) மாணவர்..
வரும் காலத்தில் பஹத் பாசில் மாதிரி வருவார். இன்றைய இளம் இயக்குநர்கள், அடுத்து வரப்போகும் இயக்குநர்கள் இவரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களது படைப்புகளுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று தோன்றும். மனதுக்கு மிக நிறைவான படைப்பாக கொடுத்துள்ளேன். உடலை, மனதை கெடுக்காத படைப்பு இது. உலகத் தமிழர்கள் இந்த படத்தை பார்த்தால் அடுத்த விமானத்தை பிடித்து இங்கே கிளம்பி வந்து விடுவார்கள்.. அப்படி ஒரு உணர்வுபூர்வமான படம்” என்று கூறினார்
*நிகழ்வின் ஹைலைட்ஸ்*
இன்று பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
Thangar Bachan speech at Karumegangal Kalaigindrana press meet