தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : நாசர், மகேந்திரன், அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா மற்றும் பலர்.
இயக்கம் : பிரதாப் முரளி
இசை : ஹரிஷ் – சதீஷ்
ஒளிப்பதிவு: சீனிவாசன்
படத்தொகுப்பு: ஆர்.எஸ்.சதீஷ்குமார்
பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்
கதைக்களம்…
காட்டில் வாழும் மக்களை அங்கிருந்து காலி செய்ய திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போடும் திட்டங்களை அண்மைக்காலமாக பல படங்களில் பார்த்து வருகிறோம்.
இதுவும் அதுபோன்ற கதைதான்.
ஆனால் இதில் முதல் காட்சி அண்மையில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்த்த உணர்வை தருகிறது.
தங்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்கிறார் நாயகி தனு ஷெட்டி.
இது பெரிய சர்ச்சையாக, நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் கலெக்டர் இங்கு வர வேண்டும் என கட்டளையிடுகிறார்.
அதன்படி கலெக்டர் வர, தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கிறார் நாயகி.
அந்த ப்ளாஷ்பேக்கில், ஒரு பொய் குற்றச்சாட்டில் காட்டு இளைஞர்களை சிறைக்கு அனுப்பி விடுகின்றனர் அரசியல்வாதிகள்.
சிறையிலிருந்து விடுதலை பெறும் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு எப்படி பாடம் புகட்டினார்கள்? தங்கள் கோரிக்கையை எப்படி பெற்றார்கள்? என்பதை சுவராஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரதாப் முரளி.
கேரக்டர்கள்…
மூப்பா என்ற ஊர் பெரியவர் கேரக்டரில் நாசர். இவர் என்ன சொன்னாலும் அந்த ஊர் இவரை நம்பும். அவரை கடவுளாகவே பார்க்கின்றனர்.
ஒரு காட்சியில் ஊரை காலி செய்கிறோம் என்று இவர் சொன்ன உடன் அந்த ஊரே அதிர இவர் அடுத்து செய்யும் செயல் ரசிக்க வைக்கிறது.
தங்க ரதம் ஜீப் ஓட்டும் கேரக்டரில் மகேந்திரன். அந்த காட்டு பகுதி இளைஞராகவே வருகிறார். இவரின் காதலி தனு ஷெட்டி.
இவருடன் மற்றொரு ஜோடியும் உள்ளது. வினோத் மற்றும் ஐஸ்வர்யா. இவர்களின் காதல் ரொமான்சும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.
ஜெயில் கைதியாக இருந்து புரட்சிகளை செய்யும் அஜய் ரத்னம் மற்றும் போலீசாக வந்து அடாவடித்தனம் செய்யும் தீரஜ் அஜய் ரத்னம் (அஜய் ரத்னத்தின் மகன்) மற்றும் மந்திரியாக வரும் ஸ்ரீனிவாசப்பா ஆகியோரும் நல்ல தேர்வு
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஹரிஷ் – சதீஷ் ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
எங்க ஊரு தங்க தேரு பாடல் தாளம் போட்ட வைக்கிறது.
சிறையில் பாடும் புறப்படு தோழா பாடல் விழிப்புணர்வை தரும்.
பின்னணி இசையும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.
சீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அந்த காடும் அழகு சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இப்படம் சமூக கருத்துள்ள படம் என்றாலும் கமர்சியல் ஐட்டங்களை கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். ஆனா பெரும்பாலான காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையோடு பயணிக்கிறது என்பதே உண்மை.
முக்கியமாக அந்த சிறைச்சாலை காட்சிகள்.
மேலும் அடர்ந்த காட்டில் உள்ள பெண்கள் பேசும்போது சிட்டி பெண்கள் பேசும் இங்கிலீஷ் போல உச்சரிப்பு சரியாக இருக்கிறது.
யாருக்கும் அந்த காட்டு மொழியே வரவில்லை என்பது குறையாக தெரிகிறது.
மக்களுக்கு நீதி எப்போதும் கிடைப்பதில்லை. அதனை போராடி பெற வேண்டியுள்ளது.
நாம் இறுதிவரை மௌனமாக இருந்தால் மக்கள் புரட்சியும் வராது மறுமலர்ச்சியும் வராது என ஆணித்தரமாக சொன்ன இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
திட்டி வாசல்.. திகட்டாத வாசல்