தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
1990களில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அதற்கேற்ப கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எல்ஜி. ரவிச்சந்திரன்.
சென்னையில் சினிமா துறையில் உதவி இயக்குநராக பணி புரிகிறார் ஹீரோ சந்தோஷ். அப்போது சென்னைக்கு வரும் சாந்தினி தன் உறவினர் முகவரியை தவறவிட்டதால் அங்கு தவிக்கிறார்.
அவர் மீது இரக்கப்படும் சந்தோஷ் அவருக்கு உதவிட நினைத்து அவரை அவளது கிராமத்திற்கே சென்று விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
ஆனால் அங்கு சென்ற பின் இவர்களை தவறாக புரிந்துக் கொண்ட ஊர் பஞ்சாயத்து இவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறது.
இதனால் இருவரின் வாழ்க்கையும் மாறுகிறது. உன்னோடு வாழ முடியாது என ஊரை விட்டு ஓடி விடுகிறார் சந்தோஷ்.
அதன்பின்னர் சாந்தினியின் வாழ்க்கை என்ன ஆனது? சந்தோஷ் என்ன செய்தார்? மனைவியை தேடி மீண்டும் வந்தாரா? இயக்குநர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
உதவி இயக்குநர்கள் படும் கஷ்டங்களை காட்சிகளாக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஹீரோ சந்தோஷிடம் அதற்கேற்ப முக பாவனைகள் இல்லை.
தனக்கு திருமணமானதை குடும்பத்திற்கு சொல்லாமல் தவிக்கும் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு நடித்திருக்கலாம். ஆனால் இல்லை.
கிராமத்து பாவப்பட்ட பெண்ணாக சாந்தினி சபாஷ். பெற்றொர் ஆதரவும் இல்லை கணவரின் கைவிடப்பட்ட நேரத்தில் அவர் தவிக்கும் காட்சிகள் யதார்த்தம்.
சில காட்சிகளில் வந்தாலும் எல்லார் கேரக்டரையும் அடித்து செல்கிறார் மலையாள நடிகர் இன்னசண்ட். ஆபாச படம் எடுக்கும் தயாரிப்பாளராக இவர் செய்யும் சேட்டைகள் செம. ஆக இந்த சேட்டனின் சேட்டைகளை ரசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
இவரின் மனைவி, மகள் காட்சிகள் செயற்கையாக உள்ளது. அந்த நாடகத்தனத்தை தவிர்த்திருக்கலாம்.
பருத்திவீரன் சுஜாதா, ஜி.எம்.குமார், சந்தோஷின் நண்பர்களாக நடித்திருக்கும் கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஆர்,எஸ்,செல்வாவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஹித்தேஷ் முருகவேலின் இசையில் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
படத்தின் மொத்த கதையுமே 1990களில் நடப்பதாக உள்ளது. அப்படி என்றால் அதற்குகேற்ப பின்னணிகளை அமைத்திருக்க வேண்டும். பாட்ஷா பட சூட்டிங்கை பத்தி பேசுகிறார்கள். ஆனால் அங்கே 1996 காலண்டர் உள்ளது.
அதுபோல் விஜய் பட போஸ்டரை காட்டும்போது திருமலை பட போஸ்டரை காட்டுகிறார்கள். இதுபோல் விஷயங்களை சரியாக செய்திருக்கலாம்.
படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அம்மாவின் ஆசையை மகன் நிறைவேற்ற படும் கஷ்டங்களும் அந்த தியேட்டர் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது.
Naan Avalai Sandhitha Pothu review