தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
Casting : Kalaiyarasan, Anjali Patel, Sethan, Anandsaamy, Lakshmi Patti
Directed By : Manoj Leonel Jahson and Shyam Sunder
Music By : Pradeep Kumar
Produced By : Pa. Ranjith and Vignesh Sundaresan
ஒன்லைன்…
நினைவில் தொலைத்த ஒன்றை கனவில் தேடும் நாயகன்..
கதைக்களம்..
படத்தின் நாயகன் கலையரசன் ஒரு பேங்கில் வேலை செய்கிறார். 38 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நண்பர்களும் உறவினர்களும் இல்லாத காரணத்தால் தனிமையில் விரக்தியில் வாழ்கிறார்.
ஒரு நாள் காலை கண்விழிக்கும் போது தன் உடலில் குதிரைவால் முளைத்திருப்பதை அறிகிறார். இது கனவா? அல்லது நிஜமா? என புரியாமல் தவிக்கிறார். அந்த வால் இவரது கண்களுக்கு மட்டுமே தெரிவதை உணர்கிறார்.
ஒரு குதிரையின் வால் தனக்கு எப்படி வந்தது? என்பதை அறிய முயற்சிக்கிறார். ஒரு குறிசொல்லும் பாட்டி, ஜோசியர், கணக்கு வாத்தியார் ஆகியோரை சந்திக்கிறார்.
அவரின் பிரச்சனை தீர்ந்ததா? யார் எப்படி தீர்த்தார்கள்..? அவருக்கு வால் முளைக்க என்ன காரணம்? நடப்பது எல்லாம் கனவா? நிஜம்மா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கலை ஆர்வத்தால் கலையரசன் வித்தியாசமாக நடிக்க முயற்சித்துள்ளார். அவரின் ஆர்வத்தை பாராட்டலாம். குதிரைவால் வந்தபின்னரும் வருவதற்கு முன்னரும் அவரின் செயல்கள் யாருக்கும் புரியல.
இதற்கு காரணம்.. திரைக்கதை அமைப்பு பெரிய குழப்பமாக அமைந்துள்ளது. நிச்சயமாக பலமுறைகள் பார்க்க வேண்டும் போல.
காலா படத்தில் தலைகாட்டிய பாலிவுட் நாயகி அஞ்சலி பாட்டீல். இதில் நாயகியாக வந்துள்ளார். ஓரிரு காட்சிகளில் வருகிறார். சில வசனங்களை மட்டுமே திரும்ப திரும்ப பேசுகிறார். அவ்வளவே.
கணக்கு வாத்தியாராக ஆனந்த்சாமி. அவரின் நடிப்பும் அவரின் வசனமும் உடல்மொழியும் பாராட்டும்படி உள்ளது. பேங்கில் அவர் பேசும் வசனங்கள் வித்தியாசமான சிந்தனை.
இவர்களுடன் சேத்தன், லட்சுமி பாட்டி ஆகியோரின் நடிப்பு கச்சிதம். சிறுமி மானசா மற்றும் சிறுவன் பரிதிவாலன் வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கிணற்றில் சிறுமி ஒரே வசனம் போரடிக்க வைக்கிறது.
டெக்னீஷியன்கள்..
படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அழகான கிராமம், ஆழமான கிணறு என அசத்தல். (ஆனால் கிணற்றின் நீர் கிராபிக்ஸ்) இதுல கூடவா? என்பதை நாம் இயக்குனரிடம் கேட்டு அறிந்தோம்.
ஆனால் வித்தியாசமான காட்சிகள் வைத்து கேமராவை அப்படியே வைத்திருப்பது நெருடல். அதாவது.. பொதுவாக ஒரு அறையில் காட்சியை எடுப்பதாக இருந்தால் அந்த அறையின் அந்த பக்கம் இந்த பக்கம் என ஆங்கிள் வைத்திருப்பார்கள்.
ஆனால் ஒளிப்பதிவாளர் ஒரே ஆங்கிளில் வைத்து வீட்டின் கொள்ளைபுறம் வரை வைத்து கேமராவை நகர்த்தவே இல்லை. இதனால் நடிகர்களின் முகபாவனைகளை அருகில் பார்க்க முடியவில்லை. ஒருவேளை இது முயற்சி என நினைத்திருப்பாரோ? என்னவோ…
பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே. பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தொகுப்பாளர் எம்.கே.பி. கிரிதரண், தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை ரசிக்க கொடுக்க முயற்சித்துள்ளார். அவர் என்ன செய்வார்? அதானே செய்ய முடியும்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஜி.இராஜேஷ். குர்ரான், பைபிள் என பல விஷயங்களை மறைமுகமாக பேசியிருக்கிறார். ஆனால் புரிந்துக் கொள்ளவும் அறிந்துக் கொள்ளவும் நமக்கு அறிவு போதவில்லை என்பதே உண்மை. இவர் எழுதிய திரைக்கதையை அப்படியே படமாக்கியுள்ளனர் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர். இவர்களுக்கு புரிந்துவிட்டதா? என்பதுதான் தெரியல.
இந்த படத்தை சில அறிவுஜீவிகள் பாராட்டினால் அதுவே குதிரைவாலின் வெற்றியாகும்.
ஒரு இயக்குனரின் படைப்பு என்பது அனைத்து தரப்பு மக்களை சென்றயடைய வேண்டும். ஒருவேளை அது தவறினால் 50% மக்களையாவது சென்றயடையனும். ஆனால் இது 5% மக்களை சென்றடைந்தால் கூட அதுவே படைப்பாளிகளின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ஆக.. ’குதிரைவால்’ படம் உங்களுக்கு புரிந்தால் நீங்கள் பிஸ்தா.
Kuthiraivaal movie review and rating in Tamil