தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின், கே.பாக்யராஜ், கௌசல்யா, ஜெகன், சோனா மற்றும் பலர்
இயக்கம் : பி.எஸ். விஜயகுமார்
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: தீபக்குமார் பதி
எடிட்டிங்: சபு ஜோசப்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பு: கணேஷ் ட்ரீம் பேக்டரி
கதைக்களம்…
அட்வர்டைசிங் நிறுவனத்தில் டைரக்டராக வேலை பார்க்கிறார் நகுல். இவரின் அண்ணன் முறையான சித்தார்த் விபின் அதே நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.
தன்னை பார்த்து தேர்வுகளில் காப்பியடித்த இவர் எப்படி? நம்மை விட உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பதால் கவலை கொள்கிறார் நகுல்.
இந்நிலையில் சிஇஓ.வை சந்திக்காமல் அடிக்கடி தன்னை சந்திக்க வரும் மாடல் அழகி ஆஷ்னா மீது காதல் கொள்கிறார் நகுல்.
ஒரு பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்லும் நகுல்.. நீ என்ன கடவுள்? நன்றாக படித்த நான்? இப்படி இருக்கிறேன். நாங்கள் ஆசைப்பட்டதை நீ கொடுக்க மாட்டேன் என்கிறாய்? நீ ஆசைப்பட்டு கொடுப்பதை நாங்கள் இஷ்டமில்லாமல் அனுபவிக்க வேண்டுமா? என பல கேள்விகள் கேட்கிறாய்.
அன்றுமுதல் இவருக்கு பேஸ்புக்கில் கடவுள் பிரம்மா பெயரில் ஒரு இன்வைட் வருகிறது. அதை ஏற்றுக் கொண்டது முதல் இவர் திடீரென சிஇஓ ஆகிவிடுகிறார்.
இதனால் பல ஆடம்பர வசதிகள் வந்துவிடுகின்றன. இப்போது இவரது இடத்தில் வந்துவிடுகிறார் சித்தார்த், அதாவது சித்தார்த் விபின் டைரக்டர் ஆகிறார்.
இவர்களை தவிர மற்றவை எல்லாம் பழையபடியே நடக்கிறது. அதாவது ஆஷ்னா டைரக்டர் பொறுப்பில் இருக்கும் சித்தார்த்துடன் நெருக்கமாகுகிறார்.
இதனால் கடுப்பாகும் நகுல் மீண்டும் பழைய வாழ்க்கையை கடவுள் பிரம்மாவிடம் கேட்கிறார்.
அதன்பின்னர் பிரம்மாவுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
காதலிக்காக ஏங்கும் கேரக்டரில் நகுல் ரசிக்க வைக்கிறார். நிறைய காட்சிகளில் சுறுசுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதுவே மிகைப்பட்ட நடிப்பாக தெரிகிறது.
சித்தார்த் விபின் அவருக்கே உரித்தான பாணியில் நடித்திருக்கிறார்.
அழகான இரண்டு நாயகிகள் ஆஷ்னா சவேரி மற்றும் நீது சந்திரா. ஆனால் இருவருக்குமே சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
ஒய்யாராமாக அடிக்கடி கேட் வாக் செய்து வருகிறார் ஆஷ்னா.
மொட்டை ராஜேந்திரன் காமெடி வில்லனாக அமர்க்களப்படுத்தியுள்ளார்.
ஜெகன் இருந்தும் கடுகளவு கூட காமெடியில்லை. சோனா, பாக்யராஜ், கௌசல்யா ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களை சரியாக டைரக்டர் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. இவருக்கென்று அறிமுக காட்சியில் பின்னணி இசையும் சேர்த்துள்ளார். தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ஒரு நல்ல கற்பனை கதையை கொடுத்திருந்தாலும், அதை நல்ல கேரக்டர்கள் கொண்டு சென்றிருக்கலாம். தொய்வான திரைக்கதையால் சலிப்பு தட்டுகிறது.
இறுதியாக யாருக்கு என்ன செய்யனும்? என்பது கடவுளுக்கு தெரியும் என்பது போல முடித்து சபாஷ் பெறுகிறார் டைரக்டர் பி.எஸ். விஜயகுமார்.
‘பிரம்மா.காம்’… கற்பனை கடவுள்