தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா.
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி.
எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன். அதனால் இந்த படத்துக்கு நான் தான் எல்லோருக்கும் வில்லன் என்றார் எடிட்டர் ரூபன்.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது என்றார் கலை இயக்குனர் இளையராஜா.
சிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.
படம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள் என்றார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
நான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் நடிகை ரமா.
சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது.
தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதை விட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார் அருண்ராஜா காமராஜ்.
அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது.
இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார் நடிகர் சத்யராஜ்.