தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா அச்சுறுத்தலால் தமிழ் திரையுலகானது கடுமையான பாதிப்பினால் திணறி வருகிறது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரின் முயற்சியால் தமிழ் திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் ஆதரவையும் மறுவாழ்வையும் பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, கடந்த 2020 அக்டோபரில் இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர்கள், தமிழ் சினிமாவின் படைப்பாளர்களை ஒன்றிணைத்து, தனித்துவமான ஒரு திட்டத்தை அறிவித்தனர்.
முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கான ஒன்பது திரைப்படங்கள் கொண்ட ஆந்தாலஜியாக ‘நவரசா’ உருவாகி வருகிறது.
இந்த ஆந்தாலஜி மூலம் திரையுலகை உயிர்ப்பிக்க தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.
அதோடு, தமிழ் திரையுலகில் தேவைப்படுபவர்களுக்கு உதவ பல கோடி நிதி திரட்டப்படுகிறது.
இந்த புதுமுயற்சிக் குறித்து இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரும் குறிப்பிடும்போது,…
“ எதிர்பாராத இச்சூழலின் போது ஆதரவை வழங்குவதற்காக தொழில்துறையை ஒன்றிணைத்ததால் ‘நவரசா’ ஆந்தாலஜியானது உண்மையிலேயே ஒற்றுமையின் ஒரு பிரதிபலிப்பு என்றே கூறலாம்.
இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது தகுதியுடைய 10,000-க்கும் மேற்பட்ட திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் சென்றடைய இருப்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இப்பணியானது வருகிற 2021 பிப்ரவரி மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் திறம்பட அடையாளம் காணவும், அடையவும், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் உதவியை நாடினோம்.
இந்த நிவாரணத்தை ஒவ்வொரு தொழிலாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் வழங்குவதற்காக உதவித் திட்டத்திற்காக, பேரழிவு நிவாரணத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பூமிகா டிரஸ்டுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்.
அதோடு, இந்த நிவாரணம் மூலம் தொழில் மீண்டும் வலுவாக வளரும் என நம்புகிறோம். மேலும், எல்லா இடங்களிலும் ரசிகர்கள் விரும்பப்படும் படைப்புகள் தொடர்ச்சியாக உருவாக உதவும் என்றும் நம்புகிறோம் ” என்றனர்.
Over 10000 people from the Tamil film industry will receive support from the initiative helmed by Directors Mani Ratnam and Jayendra Panchapakesan