தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘க/பெ ரணசிங்கம்’ படத்துக்கு ஆதரவு அளித்து வரும் தினசரி பத்திரிகையாளர்கள், இணைய பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள், யூடியூப் விமர்சகர்கள், பண்பலையாளர்கள், சமூக வலைதள பயனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. இந்த நன்றி என்ற மூன்று எழுத்துக்குள் தான் என்னுடைய தற்போதைய நிலையை சொல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளேன். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று வைத்து நன்றிச் சொல்லியிருப்பேன். அந்தளவுக்கு ‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் விமர்சனங்களில் எனது நடிப்பைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள்.
நான் நடிக்க தொடங்கியதிலிருந்தே உங்களுடைய ஆதரவு இருந்து வருகிறது. சரியான நடிப்பின் போது தட்டிக் கொடுப்பது, தவறான படத்தின் போது குட்டு வைப்பதும் என உங்களுடைய விமர்சன வரிகளால் தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.
‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்தளவுக்கு கதையை ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார் இயக்குநர் விருமாண்டி சார்.
வசனங்களை கத்தி முனை போன்று கூர்மையாக எழுதியிருந்தார் சண்முகம் சார்.
ஒரு கதையே படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும் தான், தற்போது இந்தப் படம் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் ராஜேஷ் சார், என்னுடன் நடித்த விஜய் சேதுபதி சார் மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் சார், இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் என உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எனது நன்றி.
எனது திரையுலக வாழ்க்கையில் ‘க/பெ ரணசிங்கம்’ ரொம்ப முக்கியமான படம். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டு இருக்கும்.
இப்போது ஜீ ப்ளக்ஸ் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படம் பார்க்கும் போதே இந்தளவுக்கு பாராட்டு மழை என்றால், திரையரங்கில் வெளியாகி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மகிழ்கிறேன். அனைவரும் எழுதியிருக்கும் விமர்சனங்கள், பேசிய வார்த்தைகள் என அனைத்தையும் கேட்டேன்.
கண்டிப்பாக அனைத்து வார்த்தைகளையும் என் இதயத்தின் ஓரத்தில் வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும்.
இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அப்படியே பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது.
கண்டிப்பாக இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வணங்கி, இந்தப் படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!
என்றும் நன்றியுடன்…
ஐஸ்வர்யா ராஜேஷ்
03-10-2020
Actress Aishwarya Rajesh thanked media for their support to her in Ka Pae Ranasingam