தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’.
சினிமா ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சன,பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இப்பட நாயகன் பிரஜின்.
ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம். அனுபவித்த வலிகளும் அதிகம்.
பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை.
இனி அவரே பேசட்டும்.
“என் முதல் படம் ‘சாபு த்ரீ’ அந்தப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து ‘தீ குளிக்கும் பச்சைமரம்’ அது மது அம்பாட் இயக்கிய படம். 2012ல் வெளியானது மார்ச்சுவரி,பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை.
சீனுராமசாமி, சமுத்திரக்கனி, அறிவழகன் போன்ற இயக்குநர்கள் என்னைப் பாராட்டிய படம்.
நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை. இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம். சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஈகோ தடுக்கும் என்ன செய்வது?.
ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி 2010ல் ஒப்பந்தமான படம்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது.”
‘பழைய வண்ணாரப்பேட்டை’. பட அனுபவம் பற்றி….
” அதற்காக 5 ஆண்டுகள் விட்டு, விட்டு படப்பிடிப்பு நடந்தது.ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப் பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும்.
அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்தேன் தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது.இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு முடித்த படம். ‘பழைய வண்ணாரப்பேட்டை’
‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட ஆடியோ விழாவில் விழாவுக்கு அழைத்த யாரும் வரவில்லையே என்று கண்ணீர் சிந்தி வருத்தப்பட்டீர்களே.?
”அது வருத்தமான ஒன்றுதான். நாங்கள் விழாவுக்கு எல்லாரையும் முறைப்படி சம்மதம் பெற்று விட்டுத்தான் அழைப்பிதழில் பெயர் போட்டோம்.
அப்படியே முறைப்படி அழைத்தோம்.ஆனால் யாரும் வராதது பெரிய வருத்தம். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப்பலநாள் ஆனது. ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை.
இதே விழா பெரிய நடிகர் சம்பந்தப் பட்டது என்றால் வராமல் இருப்பார்களா? 5 ஆண்டுகள் போராடி ஒரு படம் எடுத்தோம். அப்படிப்பட்ட படத்தின் விழாவுக்கு வராமல் ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை ?
எல்லாவற்றுக்கும் ஒன்றுதான் பதிலாக இருக்கும். நாம் வளர வேண்டும். நம் வெற்றி ஒன்றுதான் பதிலாக இருக்கும். அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறேன். உழைத்துக்கொண்டிருக்கிறேன்.” என்கிறார்.
எப்போதாவது சின்னத்திரையிலேயே இருந்து பாதுகாப்பாக பயணம் செய்திருக்கலாமோ என்று நினைத்ததுண்டா?
” 2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன்.நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன.இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.
இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன் அதனால் மனதை திசைதிரும்ப விடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.
டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத்தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும் .ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது? என்பார்கள்.
இதற்கிடையே நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டேன் என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.” என்கிறார்.
இப்போது நடித்து வரும் படங்கள் பற்றி?
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இதை தயானந்தன் இயக்கியிருக்கிறார். இவர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநர்.
இன்னொரு படம் ‘மிரண்டவன்’ .அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத்தயாராக இருக்கிறது.
தாமிரா இயக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் 2 வது நாயகனாக நடிக்கிறேன். சமுத்திரக்கனி சார்தான் நாயகன். அவர்தான் என்னை டிவியில் அறிமுகப் படுத்தியவர்.அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி.பேசும் போதே நம்பிக்கை தருபவர் அவர்.
அடுத்து இன்னொரு புதிய படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது, நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். ”என்று வருங்கால வாய்ப்புகள் பற்றிப் பட்டியலிடுகிறார் பிரஜின்.